சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) ‍ சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) ‍ சித்திறெஜினா..! மீண்டும் ஒரு இறந்த காலத்திற்குள் என் சிந்தனைகள் விரிகின்றன.. காலம் என்னும் படகில் ஏறி அந்த‌ கடந்த காலத்தை நோக்கி பின்னோக்கி பயணித்தால் அங்கே பல அதிர்ச்சிகளும்.. வேதனைகளும்.. ஆச்சரியங்களும் நிறைந்த பல‌ சம்பவங்களுடன்.. மறைக்கப்பபட்டு காலத்தால் அழிக்கப்பட்ட‌ பல உண்மைகளையும் சந்திக்க நேரிடும்.. அப்படிப்பட்ட‌ சம்பவங்களில் ஒன்றுதான் சுமார் 91 வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாகாணத்திலுள்ள‌ அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அருகாமையிலுள்ள‌ “யூலியன்வாலா” பூங்காவில் பிரிட்டிஸ் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட‌ கொடூரப் படுகொலைகள்.. ஆம் அமிர்தரசிலுள்ள யூலியன்வாலா பூங்காவில் 1919 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 13 ம் திகதி நடைபெற்ற‌ அந்தப் படுகொலைகளால் அன்று ஒட்டு மொத்த இந்தியாவே ஸ்தம்பித்து நின்றது… தமிழ் சிங்கள‌ சித்திரை வருடப் பிறப்பான ஏப்ரல் 13 ம் திகதியில்தான் சீக்கியர்களின் “வைசாக்கி” என்னும் அறுவடை பண்டிகையும் வருகிறது.. இந்த வைசாக்கி பண்டிகையை கொண்டாடுவதற்காக வருடந்தோறும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பஞ்சாப் மாகாணத்திலுள்ள‌ “அமிர்தசரஸ்” நகரத்தில் சீக்கியர்கள் வந்து கூடுவது வழக்கம்.. அந்த நாட்களில் அங்கே அமைந்திருக்கும் பொற்கோயிலில் நடைபெறும் விசேட நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவது ஆண்டாண்டு காலமாக அவர்கள் கடைப் பிடித்து வரும் ஒரு செயலாகும்.. மேலும் இந்த நாளில் அமிர்தசரஸ் ஆன்மீகச் சொற்பொழிவுகள் என்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் என்றும் கலை நிகழ்சிகள் என்றும் களைகட்டுவது இயல்பு.. அப்படித்தான் 1919ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 13 ம் திகதியும் யூலியன்வாலா பூங்காவில் நடைபெற இருந்த ஒரு ஆன்மீக சொற்பொழிவை செவிமடுக்க‌ வெளி மானிலங்களில் இருந்து வந்த சீக்கியர்கள் பலர் அங்கே குவிந்திருந்தனர்… அன்று தாங்கள் அனுபவிக்கப் போகும் கொடூரம் நிறைந்த‌ அந்த குரூரத்தின் நிழலைக்கூட‌ அறிந்திராத அவர்கள் அன்று மாலை மூன்றரை மணியளவில் தங்கள் மதத் தலைவர்கள் நிகழ்த்தப் போகும் மேடைப் பேச்சைக் கேட்கும் ஆர்வத்தில் காலை பதினொரு மணியிலிருந்தே யூனியன்வாலா பார்க் என்று அழைக்கப்படும் அந்த மைதானத்தில் ஆண்கள்.. பெண்கள்.. வயோதிபர்கள்.. குழந்தைகள் குட்டிகள் என்று கூட்டம் கூட்டமாக அலை மோதத் தொடங்கி விட்டனர்.. அவர்கள் குழுமிக் கொண்டிருந்த யூலியன்வாலா பூங்கா நான்கு புறமும் சுற்றிவர உயர்ந்த மதில்களாலும் வீடுகளின் பக்கச் சுவர்களாலும் சூழப்பட்டிருந்த ஒரு மைதானம்.. சுமார் 6 அல்லது 7 ஏக்கர் (சுமார் 28,000 சதுர மீட்டர்) நிலப் பரப்பு கொண்ட அந்த மைதானத்திற்கு நான்கு ஒடுங்கிய‌ சிறிய நுழை வாயில்களும் ஒரு பெரிய அகன்ற நுழை வாயிலும் இருந்தது.. அந்த அகன்ற‌ பெரிய வாசலே அந்த மைதானத்தின் பிரதான வாசலாகவும் இருந்தது.. ஏனைய‌ நான்கு சிறிய நுழை வாயில்களும் எப்போதுமே நிரந்தரமாக‌ பூட்டப்பட்டிருப்பது வழமை.. மேலும் பிரதான வாசலையடைய‌ இரு புறமும் உயர்ந்த கட்டங்கள் நடுவே நீண்டு செல்லும் ஒரு ஒடுக்கமான‌ பாதையூடாகத்தான் செல்ல வேண்டும்.. அந்த மைதானத்தின் நடுவே ஆழமான பெரிய‌ கிணறொன்றும் இருந்தது.. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்து அந்த மைதானம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களால் நிரம்பி வழியத் தொடங்கியது.. சுமார் மூன்றரை மணிக்கு ஆரம்பமான கூட்டத்தில் பேச்சாளர்கள் தங்கள் ஆன்மீகச் சொற்பொழிவுடன் விடுதலைப் போராட்டத்தின் மகிமையையும் கலந்து தங்கள் பொறி பறக்கும் பேச்சுக்களால் அங்கே திரண்டிருந்த மக்களுக்கு மத உணர்வுடன் தேசிய உணர்வையும் ஊட்டிக் கொண்டிருந்தார்கள்…. நேரம் சுமார் நான்கு மணி முப்பது நிமிடம்.. திடீரென்று மைதானத்திற்கு வெளியேயிருந்து இராணுவ வாகனங்களின் இரைச்சலுடன் கனமான பூட்ஸ் ஒலிகளும் கேட்கத் தொடங்கியது.. மைதானத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த‌ தொண்ணூறு பேர்கள் அடங்கிய இராணுவ சிப்பாய் படையணியின் இரைச்சல்தான் அது .. மேலும் அந்த பிரிட்டிஸ் சிப்பாய் படையணியில் கணிசமான அளவு இந்தியர்களும் சிப்பாய்களாக இருந்தார்கள்.. அதில் ஐம்பது பேர்களின் கைகளில் ரைபிள்கள்.. கூடவே அவர்கள் கொண்டு வந்திருந்த‌ இரண்டு கவச வாகனகளை கட்டிடங்கள் நடுவேயுள்ள ஒடுங்கிய பாதையினூடாக‌ கொண்டு செல்ல முடியாத காரணத்தால் அவைகளை பிரதான வீதியில் நிறுத்தி விட்டு உள்ளே நுழைகிறது அந்தப் படையணி.. அந்தப் படையணிக்கு முன்ன‌ணியில் கம்பீரமாக‌ தலைமை தாங்கி வந்தவர் பிரிகேடியர் ஜெனரல் றெஜினால்ட் டையர்.. திடீரென்று எதிர்பாராத விதமாக‌ இராணுவம் திபுதிபுவென்று உள்ளே நுழைவதை திகைப்புடன் பார்த்த‌ மக்கள் கூட்டம் செய்வதறியாது பதறிப் போனார்கள்… மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் மட்டும் “அமைதி! அமைதி! இங்கு எதுவும் நடந்துவிட முடியாது” என்று கூறி அவர்களுக்கு தைரியமூட்டியபடி த‌ன் மேடைப் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்… ஆனால் மைதானத்தின் பிரதான வாயிலை மறித்தபடி அணிவகுத்து தயாராக‌ நின்று கொண்டிருந்த ரைபிள் படையினரோ ஜெனரல் றெஜினால்ட் டையரின் கட்டளைக்காக காத்திருந்தனர்… எந்த விதமான முன்னெச்சரிக்கையோ அல்லது அறிவிப்போ இல்லாமல்… “பையர்” என்று டையரின் வாயிலிருந்து கட்டளை பிறந்த‌ மறுகணமே ரைபிள்கள் முழங்கத் தொடங்கின.. எவருமே சற்றும் எதிர்பார்த்திராத‌ நிகழ்ச்சி அது.. சுட்டுத் தள்ளத் தொடங்கிய‌ அந்த துப்பாக்கிகளின் வேட்டொலி.. மைதானத்தின் சுற்றுச் சுவர்களில் மோதி பயங்கரமாக எதிரொலித்து காதுகளைப் பிளந்தன…. மைதானம் எங்குமே மரண ஓலங்கள்.. சூடு பட்டு சுருண்டு விழுந்து துடிதுடித்துக் கொண்டிருந்தவர்களை மிதித்துக் கொண்டு தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள‌ அங்குமிங்குமாக அலை பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது அந்த மக்கள் வெள்ளம்… எப்படி ஓடினாலும் எங்கேதான் ஓடுவது அவர்கள்.. இருப்பதோ ஒரே வாசல் அதையும் அடைத்துக் கொண்டு குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்த இராணுவத்தை கடந்து ஓடுவதோ முடியாத காரியம்.. நெடிதுயர்ந்த மதில் சுவரையோ.. அல்லது பூட்டப்பட்டிருந்த அந்த நான்கு ஒடுங்கி உயர்ந்த வாசல் கதவுகளையோ தாண்டிக் குதிக்கவும் முடியாத நிலை.. குழந்தை குட்டிகளுடன் கூண்டுக்குள் சிக்கிய எலிகளாக‌ மரண ஓலத்துடன் அங்குமிங்குமாக‌ பதறிப் பரிதபித்து அவர்கள் ஓடித் தத்தளித்த‌ அந்தப் பரிதாபகரமான காட்சியை பின்னர் வர்ணிக்க வார்த்தையின்றி தவித்தனர் அதில் தப்பிப் பிழைத்தவர்கள்… மனிதாபிமான‌முள்ள‌ இராணுவச் சிப்பாய்களில் சிலர் அந்த அப்பாவி மக்களில் சிலராவது தப்பிப் பிழைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தங்கள் வேட்டுகளை மேல் நோக்கி தீர்த்துக் கொண்டிருப்பதை அவதானித்த ஜெனரல் டையர் “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் துப்பாக்கிகளை தாழ்த்தி அவர்களை நன்றாக‌க் குறி பார்த்துச் சுடுங்கள் இங்கிருந்து எவரும் தப்பித்துச் செல்லக் கூடாது” என்று கோபத்துடன் கர்ஜித்தார்… ரவைகள் தீர்ந்து போன ரைபிள்கள் மீண்டும் நிரப்பப்பட்டு வேட்டுகள் தொடர்ந்தன.. ஏறத்தாள சுமார் 1600 சுற்றுக்கள் வரை சுடப்பட்டிருந்தன என்று பின்னர் கணக்கிடப் பட்டது.. தங்கள் உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் மைதானத்தின் நடுவேயிருந்த கிணற்றினுள் குதித்திருந்தார்கள் பலர்.. பின்னர் சுமார் 120 க்கும் மேற்பட்ட உயிரிழந்த உடல்கள் இந்தக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன.. சுமார் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த இடத்திலேயே சுமார் 500 பேர்வரையில் உயிரிழந்தும் சுமார் 1100 பேர்வரையில் படு காயமடைந்ததாகவும் கணக்கிடப் பட்டுள்ளது.. அதன் பின்னர் உயிருக்குப் போராடியயவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அங்கும் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. மேலும் அந்த நாட்களில் வெளிவந்த பல‌ செய்திப் பத்திரிகைகள் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1500 ற்கு மேற்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியிட்டிருந்தன… இந்தப் படுகொலைகள் நடைபெற்று சுமார் 91 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்று அந்த‌ மனிதாபிமான‌மற்ற கோர நிகழ்வின் அடையாளங்களாக யூலியன்வாலா பூங்காவில் நிமிர்ந்து நிற்கும் நினைவு ஸ்தூபியையும்.. பல‌ அப்பாவி மக்கள் குதித்து மரணத்தை தழுவிக் கொண்ட‌ கிணற்றையும்… அந்த‌ துர்ப்பாக்கியசாலிகளை துளைத்து பின் மதில் சுவர்களில் துளையிட்டுப் பதிந்துபோன‌ துப்பாக்கி ரவைகளையும்.. இன்றுவரை அங்கு சுற்றுலா வரும் இந்தியர்களும் வெளி நாட்டவர்களும் நடந்து முடிந்த‌ அந்தப் பயங்கர நிகழ்வுகளை தங்கள் மனத்திரையில் சில கணங்கள் ஓட விட்டு மனம் கலங்கத்தான் செய்கிறார்கள்.. அந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் பல இடங்களில் ஆங்கிலேய அரசுக்கெதிராக‌ சத்தியாக்கிரகங்கள்.. பிரச்சாரங்கள் என்று பல வடிவங்களில் விடுதலைப் போராட்டம் களைகட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் போராட்டக்காரர்களை குண்டாந்தடிப் பிரயோகம் செய்து கலைப்பது அல்லது கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் நீதிமன்றங்கள் மூலம் தண்டனையளிப்பது என்ற நடைமுறையை பின்பற்றி வந்த ஆங்கிலேயர் ஏன் இந்த யூனியன்வாலா பூங்காவில் மட்டும் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு இப்படியான ஒரு பாரிய‌ மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்கள் என்பதற்கு ஒரு வலுவான காரணம் அந்தப் படுகொலைகளின் பின்ணணியில் மறைந்திருக்கிறது… பஞ்சாப் மானிலத்தின் மைந்தர்களான சீக்கியர்கள் மற்றைய இந்தியர்களிலிருந்து சற்று வேறு பட்டவர்கள்.. அசாத்தியத் துணிவிற்கும் போர் நடவடிக்கைகளில் வீரதீர‌மாக சண்டையிடுவத‌ற்கும் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்தே பேர்போன பேர்வளிகளாக அவர்கள் கருதப்பட்டாலும் சிந்திக்கும் திறனில் அவர்கள் சற்றுப் பின் தங்கிய டைப்.. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி சற்றும் சிந்தித்துப் பார்காமல் வன் செயல்களில் தடாலடியாக‌ இறங்கி விடுவதில் அவர்கள் கில்லாடிகள்.. மகாத்மா காந்தி த‌ன் அகிம்சை வழிப் போராட்டத்தின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை வென்றெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் அந்தக் கால கட்டத்தில் இந்த சீக்கியர்கள் மகாத்மாவிற்கு ஆதரவளிக்கும் பேர்வழிகளாக‌ தங்களைக் காட்டிக் கொண்டே திடீர் திடீரென்று வன் செயல்களில் இறங்கி விடுவதால் மகாத்மாவின் அகிம்சை வழிப் போராட்டம் பல இடையூறுகளையும்.. இன்னல்களையும்.. சந்திக்க நேரிட்டது.. இப்படித்தான் யூனியன்வாலா பூங்கா படுகொலை நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் 10 ம் திகதி ஏப்ரல் மாதம் பஞ்சாப்பின் லெப்டினன் கவர்னர் பதவியிலிருந்த “சேர் மைக்கேல் பிரான்சிஸ் ஓடயர்” என்பவர் அமிர்தசரஸைச் சேர்ந்த‌ அகிம்சைவாதிகளான “டாக்டர் சத்தியபால்” என்பவரையும் சட்டத்தரணியான முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த “சைபுதீன்” என்பவரையும் அரசாங்கத்திற்கெதிராக மேடைகளில் பிரச்சாரம் செய்தார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.. அவர் உத்தரவுப்படியே காவல்துறையும் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது… இதை அறிந்த‌ அமிர்தசரஸ் சீக்கியர்கள் கொதித்தெழுந்து ஆத்திரத்தின் எல்லைக்கே போய்.. அவர்களை உடனே விடுதலை செய்யும்படி அதிரடிப் போராட்டத்தில் இறங்கினார்கள்… அமிர்தசரஸில் அவர்கள் ஆர்ப்பட்ட ஊர்வலங்களை நடத்தியதுடன் நின்று விடாமல் ஒரு கூட்டம் தடாலடியாக‌ அடாவடிகளிலும் இறங்கியது.. அமிர்தசரஸிலுள்ள அரசாங்க வங்கிகளும் பொதுக் காரியாலங்களும் அடித்து நொறுக்கி கொள்ளையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.. அவர்கள் கைகளுக்கு நகர மண்டமும் புகையிரத நிலையமும் கூட தப்பவில்லை.. அத்துடன் அடங்கி விடவில்லை அந்த சீக்கியர்களின் ஆவேசம்.. அமிர்தசரஸ் வாசிகளான‌ ஆறு அப்பாவி ஆங்கிலேயரை அடித்தே கொலை செய்து வீதிகளில் போட்டார்கள்.. இதன் உச்ச கட்டமாக ஆங்கில‌ மிசனரி பெண்கள் பாடசாலையின் மேற்பார்வையாளராக இருந்த‌ “மிஸ். மார்சிலா சியர்வூட்” என்ற ஆங்கிலேய பெண்மணி அந்தக் கலவர நேரத்தில் அமிர்தசரஸிலுள்ள‌ தனது பாடசாலைகள் யாவும் பாதுகாப்பாக பூட்டப் பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக‌ தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது “குச்சா குறிச்சன்” என்ற ஒரு குறுகிய சந்துக்குள் வைத்து அவரை மடக்கி சூழ்ந்து கொண்டது ஒரு வன்முறைக் கூட்டம்.. அவர் பெண்ணென்றும் பாராமல் கண்மண் தெரியாமல் அவரை அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள் அவர்கள்… அபயக் குரலெழுப்பி அழுது ஓலமிட்டு தன்னை விட்டு விடும்படி கைகூப்பிக் கெஞ்சி கேட்டும் கேட்கவில்லை அவர்கள்.. ஆனால் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சில இந்தியர்கள் அந்த ஆர்பாட்டக் காரர்களை தடுத்தனர்.. அப்படித் தடுத்தவர்களும் மூர்க்கமாகத் தாக்கப்பட்டனர்.. பின்னர் எப்படியோ அந்தப் பெண்மணியை பாதுகாத்த அந்த மனித நேயம் கொண்ட இந்தியர்கள் அவரை பத்திரமாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள்..பின்னர் அந்தப் பெண்மணி கடுமையான காயங்களால் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.. காட்டுத் தீயைப் போல் பரவியது கதை .. செய்தியறிந்த இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயரும் இங்கிலாந்திலுள்ள ஆங்கிலேயரும் கொதித்துப் போனார்கள்.. கலக்காரர்களை அடக்குவதற்காக அமிர்தசரஸில் உடனடியாக மார்ஷ‌ல் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தார் கவர்னர் மைக்கல்.. நகரத்தில் இராணுவத்தினர் குவிக்கப்ட்டடு.. கலகக்காரர்கள் மேல் துப்பாக்கிப் பிரயோகமும் தாராளமாக நடத்தப்பட்டது.. அதில் குறைந்து இருபது கலகக்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.. அதன் பின்னர்தான் அமிர்தசரஸில் அமைதியே நிலவியது.. இது நடந்து மூன்று நாட்களின் பின்னர் 13 ஏப்ரலில் தங்கள் ஆன்மீகக் கூட்டத்தை யூலியன்வாலா பூங்காவில் நடத்த அங்குள்ள சீக்கியர்கள் திட்டமிட்டனர்.. மார்ஷல் சட்டம் அமுலில் இருக்கும்போது எந்த விதமான கூட்டங்களும் நடத்த அனுமதியில்லை .. அதையும் மீறி நடத்துவதானால் கவர்னரிடமிருந்து விசேட அனுமதி பெறப்பட வேண்டும்..ஆனால் இவைகள் எல்லாவற்றையும் சிந்திக்க மறந்த‌ அந்த சீக்கியர்கள் சட்டம் ஒழுங்கு யாவற்றையுமே தூக்கிக் கடாசிவிட்டு கண் மூடித்தனமாக தங்கள் கூட்டத்தை யூலியன்வாலா பூங்காவில் நடத்த‌ எடுத்த முடிவே அந்த அசம்பாவிதங்களுக்கு வித்திட்டது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.. அன்று அந்த யூலியன்வாலா பூங்காவில் திரண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் வெளி மானிலத்தைச் சேர்ந்த அப்பாவி சீக்கியர்கள்.. அவர்களில் பெரும்பாலோர் அன்று காலையில்தான் அமிர்தசரஸிற்கு வந்திருந்தனர்.. முதல் நாட்களில் நடந்த அசம்பாவிதங்களை பற்றி அவர்கள் விரிவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனால் விபரமறிந்த உள்ளூர் வாசிகளில் பலர் இப்படி ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம் என்ற பயத்தில் அந்தக் கூட்டத்திற்கு சமூகமளிப்பதை தவிர்த்திருந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.. இந்தப் படுகொலைகள் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் 15 ஏப்பிரலில் பஞ்சாப் மாகாணத்திலுள்ள குஜரான்வாலா நகரத்தில் இந்தப் படுகொலைகளை கண்டித்து பெரிய அளவில் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.. அவர்களைக் கலைப்பதற்காக விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட‌ தாக்குதலில் மேலும் 12 பேர் வரையில் கொல்லப்பட்டு 27 பேர் வரையில் படுகாயமடைந்தனர்.. இதற்காக இந்திய மக்கள் மட்டுமல்ல இந்தியாவிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்த பல‌ ஆங்கிலேயர்கள்கூட தங்கள் எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்திருந்தார்கள்.. மேலும் இதை இப்படியே விட்டு விட்டால் உள் நாட்டுக் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து கொண்ட ஆங்கிலேய அரசு உடனடியாக விசேட கமிஸன் அமைத்து விசாரணைகளை முடுக்கி விட்டது.. ஆங்கிலேயரை சீக்கியர்கள் படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் முகமாகவே யூலியன்வாலா படுகொலைகள் திட்டமிடப்பட்டன என்றும் மேலிடத்தின் அனுமதி பெறாமால அதற்கு தன்னிச்சையாக‌ திட்டமிட்டவர் கவர்னர் மைக்கேல் பிரான்சிஸ் ஓடயர் என்பதும் அதை நிறைவேற்றும் பணியை ஜெனரல் றெஜினால்ட் டையரிடம் அவர் ஒப்படைத்தார் என்பதும் நிரூபிக்கப்பட்டு அவர்கள் இருவரும் தங்கள் பணிகளிலிருந்து நீக்கப்பட்டு உடனடியாக இங்கிலாந்திற்கு (பாதுகாப்பாக‌) அனுப்பி வைக்கப்பட்டனர்… இங்கிலாந்து திரும்பிய அவர்களுக்கு அங்குள்ள சில ஆங்கிலேயர்கள் ஹீரோ லெவலில் வரவேற்பளித்தனர்.. இதில் ஒரு படி மேலே போன இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான “மோர்னிங் போஸ்ட்” தனது வாசகர்கள் மூலம் இருபத்தாறாயிரம் ஸ்ரேலிங் பவுன்சை வசூலித்துக் டையருக்கு பரிசாகக் கொடுத்தது.. (அந்த நாட்களில் இது ஒரு மிகப் பெரிய தொகையாகும்) ஆனால் அவற்றை இருந்து அனுபவிக்க டையர்தான் கொடுத்து வைக்கவில்லை. இங்கிலாந்து திரும்பிய ஓரிரு வருடங்களிலேயே கடுமையாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார் டையர்.. பாரிசவாதத்தால் எழுந்து நடக்க முடியாமலும் சரிவர‌ பேச முடியாமலும் போய் விட்டது.. எவருமே தன்னருகில் இருப்பதையோ அல்லது தனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதையோ அவர் வெறுத்தார்.. தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்ட அவர் பல தடவைகள் தான் செய்த தவறுக்காக மனம் வருந்தியதாகவும்.. தன்னைத்தானே வெறுக்கும் ஒரு மனிதராக அவர் செயல்பட்டதாகவும் அவர் உறவினர்கள் கூறியிருக்கிறார்கள்.. நீங்கள் செய்ததில் தவறில்லை என்று யாராவது கூறினால் அவர் மிகுந்த கோபமடைந்ததாகவும் நான் செய்தது சரியா தவறா என்பதை முடிவு செய்வது என்னைப் படைத்தவர் ஒருவருக்கே தெரியும்.. தயவு செய்து என்னை சாக விடுங்கள் என்று அவர் கூறியதாகவும் மேலும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்… முடிவில் அந்தப் படுகொலைகளை அவர் அரங்கேற்றி எட்டு வருடங்களின் பின்னர் 23 யூலை 1927ல் நின்மதியை இழந்த ஒரு மனிதனாகவே அந்த பிரிகேடியர் ஜெனரல் மரணமடைந்தார்.. இது இப்படியிருக்க இந்தக் கொலைக்கு திட்டமிட்ட கவர்னரையும் அதை நிறைவேற்றிய டையரையும் தன் கைகளினாலேயே தீர்த்துக் கட்டி பழிக்குப் பழி வாங்க‌ வேண்டும் என்று சபதமெடுத்தான் உதம்சிங் என்ற‌ ஒரு இளைஞன்.. அந்த யூனியன்வாலா பூங்காவில் அன்று அந்தப் படுகொலைகள் நடந்தேறிய‌போது அதிலிருந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பிய‌வன் அவன் . ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து ஒரு அனாதை ஆச்சிரமத்தில் அவன் வழர்ந்த போதும் லண்டன் மற்றிக்குலேசன் பரீட்சையில் மிகத் திறமையாக சித்தியெய்தியிருந்தான்.. யூலியன்வாலா படுகொலைகளை நேரில் பார்த்திருந்த‌தால் அதன் பாதிப்பு அவனை ஆங்கிலேயருக்கு எதிரான பல போராட்டங்களில் ஈடுபடச் செய்தது.. பல முறை கைது செய்யப்பட்டான்..பின்னர் விடுதலையும் செய்யப்பட்டான்.. இறுதியில் தனது பழிவாங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக‌ யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக உதம்சிங் என்ற‌ தனது பெயரை “ராம் முகமட்சிங் அசாட்” என்று மாற்றியமைத்துக் கொண்டு தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவற்காக‌ இத்தாலி பிரான்ஸ் ஜேர்மனி போன்ற நாடுகளில் தலை மறைவாக‌ வாழ்ந்து விட்டு 1934 ம் ஆண்டு இங்கிலாந்தை வந்தடைந்தான்.. யூலியன்வாலா படுகொலைகள் நடந்து சுமார் 15 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் அந்தப் பழிவாங்கும் உணர்வு அவனுக்குள் கொழுந்து விட்டெரிந்து கொண்டு இருந்தது ஆச்சரியத்திற்குரியது.. கிழங்கு லண்டனில் உள்ள “வைட் சப்பல்” பகுதியில் இருக்கும் அட்லர் வீதியிலுள்ள 9ம் நம்பர் இலக்க‌ இல்லத்தில் வசித்துக் கொண்டு.. அங்கேயே சிறிய அளவில் வீடுகளுக்கு பூச்சுகள் விற்கும் கடை ஒன்றை திறந்து கொண்டு.. யாரும் தன்னை சந்தேகப்படாதபடி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தான் உதம்சிங்.. (ஜெனரல் டையர் செய்த புண்ணியமோ என்னவோ உதம்சீங்கின் துப்பாக்கிக்கு இரையாகாமல் அவன் இங்கிலாந்து வருவதற்கு முன்னரே நேரம் காலத்துடன் 1927 ம் ஆண்டே அவர் மேலே போய் சேர்ந்து விட்டார்.) யூனியன் வாலா படுகொலைகள் நடந்து சரியாக 21 வருடங்கள் கடந்து விட்ட நிலையில்தான் அந்தக் காலமும் நேரமும் அவனுக்கு கனிந்து வந்தது.. இங்கிலாந்தில் சுமார் 6 வருடங்கள் அவன் வாழ்ந்து வந்த நிலையில் 13 மார்ச் 1940 ம் ஆண்டு மாலை லண்டனிலுள்ள‌ கக்ஸ்ரோன் மண்டபத்தில் இந்தியக் கூட்டறவுச் சங்கக் கூட்டமொன்று நடைபெற இருப்பதாகவும் அதில் மைக்கல் ஓடயர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிந்து கொண்ட உதம்சிங் உசாரானான்.. இதுவே இதுவே தக்க சமயம் இதைத் தவற விடக் கூடாது என்று தீர்மானித்த அவன் தனது ரிவோல்வரை மிகவும் தந்திரமாக மண்டபத்தினுள் எடுத்துச் செல்வதற்காக‌ ஒரு புத்தகத்தின் உட்பகுதியின் பக்கங்களை கச்சிதமாக வெட்டி ரிவோல்வரை அதனுள் பொருதினான்.. புத்தகத்தை எடுத்துக் கொண்டு மண்டபத்தை அடைந்த உதம்சிங் பார்வையாளர்களின் முன் வரிசையில் அமர்ந்து கொண்டான்.. அவன் கையிலிருந்த அந்தப் புத்தகத்தினுள்தான் மைக்கல் ஓடயரின் இறுதி முடிவு ரிவோல்வர் வடிவத்தில் பதுங்கியிருக்கிறது என்பது அங்கே எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.. கூட்டம் முடிந்ததும் அனைவரும் எழுந்திருந்தனர்.. மைக்கல் ஓடயரும் எழுத்து மேடையிலிருந்த சேர் லூயிஸ் டேன் என்பவருடன் உரையாடுவதற்காக அவர் அருகே சென்றார்.. டுமீல் டுமீல் என்று இரண்டு வேட்டுகளின் சத்தத்தால் அந்த‌ மண்டபம் அதிர்ந்த அதே வேளையில் மைக்கல் ஓடயரும் மேடையிலிருந்த லோர்ட் லமிங்ரனும் தரையில் சாய்ந்தனர்.. அந்த இடத்திலேயே யூனியன்வாலா படுகொலைகளுக்கு திட்டமிட்டவரான‌ மைக்கல் ஓடயர் தனது 76 வது வயதில் உதம் சிங்கின் துப்பாக்கிக் குண்டிற்கு இரையானார்.. ஆனால் லோர்ட் லமிங்ரனுக்கு வலது கையில் மட்டுமே காயம் ஏற்பட்டத்தால் அவர் தப்பித்துக் கொண்டார்… அதன் பின்னர் கைது செய்யப்பட்ட உதம் சிங் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு 31 யூலை மாதம் 1940 ம் ஆண்டு லண்டனிலுள்ள‌ பெட்டன்வில்லா சிறைச் சாலையில் தூக்கிலிட‌ப்பட்டு அன்றே அவன் உடலும் அந்தச் சிறைச்சாலை வளாகத்தினுள் அடக்கம் செய்யப்பட்டது.. அவன் மைக்கல் ஓடயரை கொலை செய்ய உபயோகித்த ரிவோல்வரும் மைக்கல் ஓடயரின் உடலிருந்து அகற்றப்பட்ட‌ ரவைகளும் இன்று வரையில் ஸ்கொட்லாண்ட் யார்ட்டிலுள்ள “பிளக் மியூசியத்தில்” அந்தப் பழிவாங்கலின் சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.. உதம் சிங் தூக்கலிட‌ப்பட்டு சுமார் 34 ஆண்டுகள் கடந்து விட்ட‌ நிலையில் 1974ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் முயற்சியால் அவர் வேண்டுகோளுக்கு இணங்க‌ அவன் உடலின் எச்சங்கள் மீண்டும் பெட்டன்வில்லா சிறைச்சாலையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு இந்தியா கொண்டு செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஒழுங்கு செய்தது.. அவன் உடலின் எச்சங்கள் பஞ்சாப் மானிலத்திலுள்ள அவன் பிறந்த ஊரான சுனாமில் தகனம் செய்யப்பட்டு அவன் அஸ்த்தியும் “சுற்லேஜ்” கங்கையில் கரைக்கப்பட்டது.. (பின்னர் அதே இந்திரகாந்தியை வேறு ஒரு பழிவாங்கலில் இந்த‌ சீக்கியர்கள் போட்டுத் தள்ளியது தனிக்கதை.) உதய்சிங்கின் இந்தப் பழிவாங்கலை மகாத்மா காந்தி வன்மையாகக் கண்டித்திருந்தார்.. உண்மைதான் இவைகள் எல்லாம் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததா என்ன!. அகிம்சை வாதிகளை மைக்கல் ஓடயர் கைது செய்தார் என்ற காரணத்திற்காக அவரைப் பழி வாங்கும் முகமாக அஸ்ஸாமில் வாழ்ந்த ஆங்கிலேயரை சீக்கியர்கள் போட்டுத் தள்ள.. அதற்குப் பழி வாங்க ஆங்கிலேயர் யூலியன்வாலாவில் வைத்து சீக்கியர்களின் படுகொலையை அரங்கேற்ற.. அதற்குக் கட்டளையிட்டவர்களை உதய்சிங் பழிவாங்க.. பின் அந்த‌ உதய்சிங்கை தூக்கிலிட்டு ஆங்கிலேயர்கள் அவனைப் பழிவாங்க… இப்படியாக‌ ஒரு முடிவில்லாத தொடர்கதையாகவே தொடர்ந்தன இந்த மனிதப் படுகொலைகள்.. ஆகவேதான் இந்த பழிவாங்கல் வகைப் போராட்டங்கள் அர்த்தமற்றவை.. அவைகள் வீணான மனித அழிவுகளுக்கே வழிவகுக்கும் என்பதை முதலிலேயே உணர்ந்திருந்த மகாத்மா காந்தி அகிம்சை என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தார்..ஆம் அகிம்சையென்னும் அந்த ஆயுதம் எதிராளியை புண்படுத்தாமல் அவனை பண்படுத்தும் வல்லமை கொண்டது.. அந்த ஆயுதமே இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது.. அதன் பின்னர் அதே வழியை மார்ட்டின் லூதர்கிங் பின்பற்றியதால்தான் கறுப்பின மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்ததோடல்லாமல் அதே இனத்தைச் சேர்ந்த ஒருவரையே அந்த நாட்டின் ஜனாதிபதி ஆசனத்திலும் அமர வைத்து அழகு பார்க்கவும் முடிந்தது.. தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த நெல்சன் மண்டேலா அதே ஆயுதத்தை கையிலெடுத்து ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 27 வருடங்கள் சிறையிலும் பொறுமை காத்தார்.. விளைவு தென்னாபிரிக்கா விடுதலையடைந்து தன்னாட்சி அமைத்தது….. (தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) ‍ சித்திறெஜினா..!

அனுராதபுரம் சிறைச்சாலையில் பத்தாயிரம் ரூபா பரிசு பெற்ற தமிழ் கைதியின் கவிதை..! (சிந்தித்து பார்…!)

சிந்தித்து பார்…! ஏன் இங்கு வந்தோமென்று இனியாவது யோசித்துப்பார் புத்தகம் படிக்காமல் புகை பிடித்து திரிந்தாயா? புகையில்லாமல் நீயில்லை என்று பகை தேடிவந்தாயா? மது அருந்தி வாழ்ந்தாயா மறியலுக்கு வந்தாயா? காசாசை கொண்டு கை வைத்து வந்தாயா? வீதி வழி சென்று விபச்சாரம் செய்து வந்தாயா? கோபத்தில் சென்று கொலைகாரன் ஆகி வந்தாயா? கிரோயினை விற்று இன்பத்தை தொலைத்து வந்தாயா? நாட்டை காக்க சென்று வேட்டையாடி வந்தாயா? துவக்கை தூக்கி உயிரை துச்சமாய் நினைத்து வந்தாயா? மண் மீட்கச் சென்று மதி கெட்டு வந்தாயா? வாழும் வயதெல்லாம் பாழாகிப் போச்சுதைய்யா இங்கு புத்தர் காந்தி யேசு சொன்ன கதை கேட்டாயா? ஆண்டு பல காத்திருந்து அழுதிடும் உனக்கு வேண்டும் விடுதலை கிடைத்திடும் விரைவில் வீடு சென்று வாழ்ந்திடுவாய் புது மணிதனாய்….! கமலா சூட்டி மன்னார் அனுராதபுரம் சிறைச்சாலை  அனுராதபுரம் சிறைச்சாலையில் பத்தாயிரம் ரூபா பரிசு பெற்ற தமிழ் கைதியின் கவிதை..!  Read More »

அனுராதபுரம் சிறைச்சாலையில் பத்தாயிரம் ரூபா பரிசு பெற்ற தமிழ் கைதியின் கவிதை..! (சிந்தித்து பார்...!)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 57) ‍ சித்திறெஜினா..!

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது.. கருடா சவுக்கியமா – ‍ கண்ணதாசன் இன்று புலம் பெயர் புலிப் பினாமிகளுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்திருப்பவர் மகிந்த ராஜபக்ச என்னும் மனிதர்தான்…. பிரபகாரனாதியோரை நம்பி அகலக் கால் வைத்து புலத்தில் பணம் கறக்கும் பணிக்காக‌ மகிந்தாவின் அரசாங்கத்தை கண்டபடி தூற்றித் தோரணம் கட்டிய‌ புலிப் பினாமிகளுக்கு புலிகளின் மறைவிற்குப் பின் ஆப்பு வைக்கும் இலங்கை ஜனாதிபதியாகிய அவரை எப்படியாவது கைக்குள் போட்டு தங்கள் காரியத்தை சாதிக்கும் கைங்கரியத்தில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டிய கட்டாய‌ நிலைக்கு இன்று அவர்கள் தள்ளப் பட்டுள்ளார்கள்… ஏனெனில்.. பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பானது கருடனைப் பார்த்து கலங்குவ‌தில்லை என்ற தத்துவத்தை இப்போது இவர்கள் தங்கள் கவனத்தில் கருத்தாக எடுத்துக் கொள்வதனால்தான் .. புலிகளின் காலத்தில் புலிகளின் புராணங்களை மட்டுமே கேட்டு.. அவற்றையே வேத வாக்க நம்பி.. புலனிழந்து போன‌ புலம் பெயர் இலங்கை தமிழ்ப் பிறவிகளின் வீடுகளைத் தட்டி.. அவர்கள் காதுகளில் பவ்வியமாக பூ சுற்றி.. சிந்தாமல் சிதறாமல்.. திரட்டிச் சேர்த்த‌ செல்வத்தை எல்லாம் தாங்கள் வாழும் நாடுகளில் அசையும் சொத்துக்களாகவும் அசையாச் சொத்துககளாகவும் பெருக்கிப் பதுக்கி வைத்திருக்கும் அவர்களுக்கு பிரபாகனாதியோரின் மறைவிற்குப் பின் தங்களை நிராகரிக்கும் புலம்பெயரிகள் மத்தியில் மேற் கொண்டு பணத்தை கறக்கவோ.. பெருக்க‌வோ.. முடியாத சூழ்நிலையில் கையிருப்பையாவது காப்பாற்றியாக‌ வேண்டும் என்ற‌ கையைப் பிசையும் நிலைக்கு இன்று இவர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.. இன்று யார் தங்கள் பகட்டான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறாரோ.. யார் தங்கள் சொத்துக்களை பறித்தெடுக்கக் கூடிய வல்லமையுள்ளவரென்று அஞ்சுகிறார்களோ.. அவரிடமே சரணடைவதன் மூலம் தங்கள் சொத்துக்கள் யாவும் காப்பாற்றப்படும் என்பதை அவர்கள் திடமாக நம்புகிறார்கள்..அவைகளைக் காப்பாற்றுவதனால் இந்த உலகில் மகிந்தா என்ற ஒருவரால்தான் முடியும் என்ற உண்மையை புரிந்து கொண்டு தற்போது மகிந்தாவை தங்கள் கைக்குள் வளைத்துப் போடும் பணியில் அவர்கள் தீவிரமாக‌ இறங்கியிருக்கிறார்கள்… ஆண்டாண்டு காலமாக புலம் பெயரிகளின் மத்தியில் மகிந்தாவை இனத் துவேசியாக சித்தரித்து பணம் திரட்டி சுகபோக‌ வாழ்க்கை நடத்தி வந்த‌ புலிப் பினாமிகள் ஏன் இப்படிப் திடீர் பல்டியடித்து நாட்டை அபிவிருத்தி செய்கிறோம் பேர்வழிகளாக மாறி.. மகிந்தாவை சந்தித்து.. சமரசம் பேசுவதற்கு முண்டியடித்துக் கொண்டு முன் நிற்கிறார்கள் என்பதற்கான‌ அடிப்படைக் காரணத்தை அறிய வேண்டுமானால் மகிந்தாவில் மறைந்து கிடக்கும் சில உண்மைகளை இங்கே அலசி ஆராய‌ வேண்டியது அவசியமாகிறது‍‍.. புலிகளை அழித்த அதே மகிந்தாதான் இன்று எஞ்சியிருக்கும் புலிகளின் ஆபத்பாந்தவராக.. அனாதரட்சகராக உருவெடுத்திருப்பது.. சும்மா அதிரத்தான் செய்கிறது.. கைது செய்யப்பட்ட புலிப் போராளிகளுக்கு புனர் வாழ்வென்றும்.. மாண்டுபோன‌ புலித் தலைவர்களின் மனைவிமாருக்கு மாதாந்தப் பென்சன் என்றும்.. புலம் பெயர் புலிப் பினாமிகளுக்கு நாட்டில் ஹோட்டல்கள் கட்டவும் வேறு இன்னோரன்ன‌ வியாபாரங்களில் முதலீடு செய்ய அனுமதியளித்து உற்சாகப்படுத்துவது என்றும் அவர் அசத்துவதை பார்க்கும்போது இவர் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்.. இவைகளின் பின்னணியில் ஏதாவது வலுவான காரணம் இருக்கத்தான் வேண்டும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.. (மகிந்தா என்று வரும்போது சித்தி றெஜினா ஒரேயடியாகக் குதூகலித்து கும்மியடித்து ஓவாராக எழுதுகிறார் என்று கொதித்துக் கொந்தளிக்கும் வாசகர்கள் மேற் கொண்டு படிக்கு முன் தயவு செய்து ஒரு கிளாஸ் ஐஸ் டீயோ அல்லது ஐஸ் வாட்டரோ குடித்து தங்களை கூலாக்கிக் கொண்டு மேற்கொண்டு படிப்பது நல்லது.) கடந்த வருடத்தில் மகிந்தா புலிகளின் பயங்கரவாதத்தை இலங்கையில் முற்றாக அழித்தொழித்து துடைத்தெறிந்த‌போது அவரை சர்வதேசமே ஒரு கணம் அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் அண்ணாந்து பார்த்து வியந்தது.. கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் ஆட்சி செலுத்திய‌ எந்த ஒரு அரசாங்கத்தாலும் அசைக்க முடியாமல் போன‌ உலகின் மிகக் கொடிய‌ பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக‌ சர்வ தேசத்தால் கணிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தை மகிந்தாவின் இராணுவம் நிர்மூலமாக்க கையாண்ட வழிமுறைகளை கண்டறிந்து கொள்ள‌ அமெரிக்க இராணுவமே ஆர்வம் காட்டியது .,, மேலும் தனது இராணுவ‌ அதிகாரிகளையே இலங்கைக்கு அனுப்பி தங்கள் அதிரடிப் படைகளுக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான‌ பயிற்சிகளை இலங்கை அரசாங்கம் வழங்க முடியுமா என்று கேட்கும் அளவிற்கு இலங்கை இராணுவத்தின் அந்தப் போர் முறைத் தந்திரங்கள் அமைந்திருந்தன‌.. புலி ஆதரவாளர்கள் பலரால் மகிந்தாவின் மேல் வைக்கப் பட்டிருக்கும் மிகப் பெரிய குற்றச்சாட்டு அவர் தமிழர்களுக்கெதிரான‌ இனப் படுகொலையை அரங்கேற்றினார் .. முள்ளி வாய்க்காலில் ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தார் என்பதாகும்.. இந்த விடயத்தில் புலிகளின் அடாவடித்தனங்களால் அவர்களை வெறுத்தொதுக்கும் புலி எதிர்ப்பாளர்கள் கூட மகிந்தாவை ஒரு குற்றவாளியாகவே கருதி ஒரு பிடி பிடிக்கத்தான் செய்கிறார்கள்… தமிழ் மக்களிடையே மட்டுல்ல‌ இன்று சிங்கள மக்கள் மத்தியிலும்கூட‌ மகிந்தாவின்மேல் பலர் கடுப்பில்தான் இருக்கிறார்கள்… இருக்காதா பின்னே? ..புலிகளுக்கெதிரான போரை முன்னின்று நடத்துவதற்கும் அதில் பிரபாகரனாதியோருக்கு சமாதி கட்டுவதற்கும் பாடுப்பட்ட சரத் பொன்சேகாவை கைது செய்து கூண்டுக் கிளியாக்கி களிச்சோறு ஊட்டும் மகிந்தா புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்தது முதல் சர்வதேச பொறுப்பாளராகவும் இருந்து புலிகளின் இறுதி மூச்சுவரை அவர்கள் உயிர்களை காப்பாற்ற பாடுபட்டு இறுதியில் பிரபாகரனின் துர்மரணத்தை உலகிற்கு அறிவித்து புலிகள் இயக்கத்திற்கு தன்னையே தலைவராக அறிவித்து புலிகளின் போக்கிலேயே மகிந்தாவையும் அவரது அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்ததோடு நின்று விடாமல் இன்னும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட புலிப் போராளிகளின் காடுகளில் மறைந்திருப்பதாகவும் மீண்டும் போராட்டம் தொடரும் என்று சூழுரைத்த‌ கே.பி. பத்மனாதனை கைது என்ற பெயரில் மகிந்தா கைது செய்து குஷனின் இருத்தி கூல் டிரிங்ஸ் கொடுத்தால் யாருக்குத்தான் கொதி வராது.. மகிந்தா என்பவர் மற்றவர்களால் எளிதில் கணிப்பீடு செய்ய முடியாத‌ ஒரு விந்தையான மனிதர்.. மருத்துவ‌ உலகில் கொடிய‌ விஷப் பாம்புகளின் விஷம்தான் திடீரென்று ஏற்படும் மாரடைப்புக்கும் இரத்தம் கட்டியாகும் நோய்க்கும் அருமருந்தென்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்து அப்படிப்பட்ட உயிர் கொல்லி விஷ‌த்தையே உயிர் கொடுக்கும் மருந்தாக மாற்றி அந்த‌ நோயாளிகளுக்குச் செலுத்தி அவர்கள் உயிர்களை காப்பாற்ற முற்படுகின்றனர்.. மகிந்தாவின் தற்போதய‌ நடவடிக்கைகளை பார்க்கும்போது அவரும் இதே வைத்திய‌ முறையைத்தான் தன் அரசியலிலும் கையாண்டு இலங்கை வாழ் மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.. ஒட்டு மொத்த இலங்கைக்கும் மிகப் பெரிய ஆபத்தான பேர்வழிகளாக திகழ்ந்த‌ பிரபாகரனாதியோரை கூண்டோடு அழிந்த‌ பின்னர்.. இனியென்ன செய்வது என்று வெளிநாட்டுப் புலிப் பினாமிகளின் திக்கித் திணறியபோது… ஆண்டாண்டு காலம் வாழ்வை அனுபவித்து வாழ்ந்த அவர்கள் எப்படியாவது மீண்டும் நாடு கடந்த தமிழீழமென்றோ அல்லது வட்டுக்கோட்டைத் தீர்மானமென்றோ ஏதோ ஒரு போராட்டத்தை ஆரம்பித்து இளம் தலைமுறையினரை தட்டியெழுப்பி.. களத்தில் இறக்கி.. பணம் கறக்கும் வியாபாரத்தை மீண்டும் தொடரலாம் என்றே திட்டமிட்டது அவர்கள் சிந்தனை… ஆனால் மகிந்தாவின் சிந்தனையோ ஒரு இளைய சமுதாயமொன்றை வைத்து சூதாட முயலும் அப்படிப்பட்ட‌ விஷப் பாம்புகளையே எடுத்து தன் கழுத்தில் பரமசிவனாக‌ அணிந்து கொண்டால் அவைகள் மீண்டும் தப்புவதற்கு இடமில்லை என்றும் மேலும் அப்படிப்பட்ட‌ விஷப் பாம்புகளையே பங்குதாரர்களாக மாற்றி நாட்டைக் கட்டியெழுப்பும் பணியையும் சிற‌ப்பாக செய்து முடித்து விடலாம் என்றும் கணித்துக் கொடுத்தது.. முதலில் கருடனாக அவதாரமெடுத்த மகிந்தா இன்ரர்போலுக்கே டிமிக்கி கொடுத்து உலகின் எந்தப் பாகத்தில் இருக்கிறார் என்று எவருக்கும் தெரியாத கே.பி யை புலனாய்வு செய்து மலேசியாவில் வைத்து கொத்திக் கொண்டு இலங்கைக்கு கொண்டு வந்தார்.. அதிர்ந்து போனார்கள் வெளி நாட்டுப் புலிப் பினாமிகளும் ஆதரவாளர்களும்.. கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மலேசியப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை அதிரடிப் படையினரிடம் கையளிக்கப்பட்ட கே.பியை சுமந்து கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது நேரம் நடுநிசியைக் கடந்து விட்டிருந்தது.. பிரபாகரனாதியோருக்கு கிடைத்த முடிவுதான் தனக்கும் கிடைக்கும் என்று அஞ்சியபடியே விமானத்திலிருந்து இறங்கினார் கே.பி.. விமான ஓடுதளம்வரை கே.பியின் வருகைக்கு தயாராகக் காத்திருந்த இராணுவ‌ வாகனத்தில் ஏற்றப்பட்டார் அவர்.. வாகனம் எங்கு செல்கிறது.. அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாமல் தன் இறுதி முடிவுக்காக வாகனத்தில் மௌனமாக அமர்ந்திருந்தார் கே.பி.. இதயத்தில் மட்டும் அந்த மரண பயம் அந்த வாகனப் பயணத்துடன் தொடர்ந்து கொண்டிருந்தது.. சில மணிநேர பயணத்தின் பின் அது நின்ற இடம் கோத்தபாய ராஜபக்க அவர்களின் இல்லம்.. வாசலில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிலருடனும் சில முக்கிய அமைச்சர்களுடனும் அவர் வரவுக்காக காத்திருந்த கோத்தபாயவைக் கண்டவுடன் திகைத்துப் போனார் கே.பி.. சிரித்தபடியே வந்து கே.பியை அவர் கட்டித் தழுவிக் கொண்டார்.. உள்ளே வாருங்கள் என்று அழைத்துச் சென்றார்.. அந்த நடு நிசியைக் கடந்த வேளையிலும் உள்ளே தேனீருடன் கேக் வகைகள் சிற்றுண்டி வகைகள் என்று பல அயிட்டங்கள் கே.பிக்காக காத்திருந்தன.. அந்த விருந்துபசாரத்தை கே.பி எதிர்பார்க்கவில்லை.. எவர் தன்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று அஞ்சினாரோ அவர்களே தனக்கு இன்முகம் காட்டி வரவேற்று விருந்தளிக்கும் விந்தையைக் கண்டபோது அவர் மனமும் மாற்றமடைந்தது.. (அண்மைக்கால கே.பியின் பத்திரிகைப் பேட்டிகளிலிருந்தும் அந்த நடவடிக்கையில் நேரடியாக‌ பங்கு பற்றியவர்களின் வாக்கு மூலங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டது) ஆம் மரணம் என்பது தன் கண்ணெதிரில் தெரியும்போதுதான் மிருகமாக வாழ்ந்த மனிதன் மனிதனாக மாற்றமடைகிறான்.. நான் என்ற ஆணவம் அவனிடமிருந்து விடை பெற்றுப் போகிறது.. வாழ்க்கையின் நிலையாமையை உணரும்போது மற்றவரைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறான் அவன்.. மரணத்தை எதிர்பார்த்த கே.பிக்கும் இதுதான் நடைபெற்றது.. மீண்டும் அவருக்கு வாழ சந்தர்ப்பம் கிடைத்தபோதுதான் அவர் கண்கள் விழித்துக் கொண்டன.. அவர் கைதியாகக் கருதப்பட்ட போதிலும் சகல வசதிகளுடன் கூடிய ஒரு சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டார்.. அவரது சர்க்கரை வியாதிக்கும் கடுமையான இரத்த அழுத்ததிற்கும் அவர் உபயோகித்து வந்த மருந்து வகைகள் யாவும் தாராளமாக தருவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.. மாதம் ஒரு முறையோ இரு முறையோ அவரது மனைவியும் மகளும் தாய்லாந்திலிருந்து இலங்கை வந்து அவருடன் சில நாட்கள் தங்கியிருந்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது… இப்படியாக‌த்தான் கே.பியின் மனதை கவர்ந்தார் மகிந்தா.. (இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக இந்திய புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவரான‌ கே.பியை இலங்கை அரசாங்கத்தின் கைதியாக உள்ளவரை இந்தியா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோர முடியாது என்ற சட்ட நுணுக்கத்தை அறிந்திருக்கும் மகிந்தா அவரை ஒரு கைதியாகவே வைத்திருப்பதன் மூலம் அவரை இந்தியாவின் பிடியிலிருந்து பாதுகாக்கிறார் என்பது வேறு விசயம்) இந்த மறுவாழ்வு கே.பிக்கு மட்டுமல்ல.. மகிந்தா சரணடையும்படி கூறியபோது பிரபாகரனாதியோரும் சரணடைந்திருந்தால் கே.பிக்கு கிடைத்த அதே மன்னிப்பும் மறு வாழ்வும் நிட்சயம் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.. ஆனால் அவர்களோ தங்கள் அகம்பாவத்தாலும்.. தலைக் கனத்தாலும்.. வரட்டு கௌரவத்தாலும்.. தங்களுக்கு தாங்களே சவக் குளிகளை வெட்டிக் கொண்டார்கள்.. பல்லாயிரக் கணக்கான‌ அப்பாவிப் பொது மக்களின் உயிர்களைக் காவு கொடுத்த பின்னர் தங்கள் உயிர்களை மட்டும் காப்பாற்றிக் கொள்வதற்காக‌ அவர்கள் சரணடைய எடுத்த முடிவு கண் கெட்டுப் போன பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய தீர்மானித்த கதையாக‌ முடிந்து போனது அவர்கள் துரதிஸ்டமே.. 2009 பெப்ரவரியின் ஆரம்ப கால‌ கட்டத்தில் இலங்கை இராணுவம் வன்னியை நெருங்கி அதற்குள் கால் பதிக்கும் சமயத்தில் புலிகள் தங்கள் பாதுகாப்புக்காக‌ பொது மக்கள் மத்தியிலிருந்து இராணுவத்தை தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தனர்.. அப்போது நடந்த சமரில் புலிகளுடனும் இராணுவத்துடன் சேர்த்து சுமார் இரண்டாயிரம் வரையிலான‌ பொது மக்களும் கொல்லப்பட்டிருந்தது சர்வ தேசத்திற்குமே தெரிந்த விசயம்… அப்போதெல்லாம் வெளிநாட்டுப் புலிப் பினாமிகளும் அதன் ஆதரவாளர்களும் போரை நிறுத்தி பொது மக்களை காப்பாற்றுங்கள் என்று எந்த ஒரு நாட்டிலும் எவ்விதமான‌ ஆர்ப்பாட்டங்களையும் நடத்தவில்லை.. மாறாக “தலைவர் தந்திரமாக காய் நகத்துகிறார்”.. “இவங்களை உள்ளே வரவிட்டு இவங்களுக்கு லெனின்கிராட் விளையாட்டு காட்டாப் போறார்” என்று புளங்காகிதமடைந்து புழுகித் திரிந்தார்கள்.. ஆனால் பிரபாகரனாதியோருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகித்த எரிக் சொல்ஹைம் மட்டும் இந்தப் போரில் அப்பாவி பொது மக்களுக்கு ஏற்படப் போகும் அந்தப் பயங்கரமான‌ உயிராபத்தை உணர்ந்து புலிகளை போரை உடனே நிறுத்தி சரணடைந்து விடும்படி கெஞ்சி மண்டாடி காலில் விழாத‌ குறையாக பலமுறை பரிந்து கேட்டும் பிரபாகரனாதியோர் அதற்கு கடுப்பட‌ முடியாத நிலையில் இருந்தனர்.. காரணம்….தங்கள் படை பலத்தால் இலங்கை இராணுவத்தை வெற்றி கொள்ள முடியாத நிலை ஒன்றுதான் ஏற்பட்டுள்ளது ஆகவே எரிக் சொல்ஹைமின் சொற்படி கேட்டு நடப்பது புத்திசாலித்தனம் என்றுணர்ந்து அவர்கள் சரணடையத் தயாரானாலும் போர் விரும்பிகளான‌ புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாகத்தாலும்..அவர்கள் மத்தியில் இருந்த தங்கள் பெயரும் புகழும் மங்கி விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும்.. வெறும் வரட்டு கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும்.. எரிக்கின் அறிவுரையை அலட்சியம் செய்து தோற்றுக் கொண்டிருந்த தங்கள் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.. மேலும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் சந்தர்ப்பத்தில் சர்வதேசம் தலையிட்டு தங்கள் உயிர்களைக் காப்பாற்றி விடும் என்று தப்புக் கணக்கு வேறு போட்டு அசட்டு தைரியத்துடன் அந்தப் போரை தொடர்ந்ததின் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் அவர்களும் பல்லாயிரக் கணக்கான அப்பாவி வன்னிச் சனங்களும் அழிந்தொழிந்து போனது என்ற உண்மையை மறைத்து மகிந்தாவின் மேல் முழுப் பழியையும் போடுவது நியாயமானதுதானா என்பதை சற்றேனும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்… பிரபாகரனாதியோர் மட்டும் எரிக் சொல்ஹைமின் வேண்டுகோளை அன்று ஏற்று சரணடைந்திருந்தால் சர்வதேசத்தின் கண்காணிப்புடனும் அவர்களின் அனுசரணையுடனும் அந்த சரணடைதல் வெற்றிகரமாக‌ அரங்கேறியிருக்கும்..விலை மதிப்பில்லாத பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களும் காப்பாற்றப் பட்டிருக்கும்..அப்படிச் சரணடைந்த‌ பிரபாகரனாதியோரை மகிந்தாவும் விரோதிகளாக கணிக்காமல்.. அவர்கள் உயிர்களுக்கும் உத்தரவாதமளித்திருப்பார்.. அவரின் உண்மையான மனப்போக்கை அவர்கள் அறிந்திருப்பார்கள்..அதனால் அவர்கள் மன மாற்றமடைந்து இலங்கையின் சமாதான‌த்திற்காகவும் ஐக்கியத்திற்காகவும் குரல் கொடுக்கும் மனிதர்களாக‌ மாற்றமடைந்து அதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கக்கூடிய தலைவர்களாக மாறியிருப்பார்கள்.. யார் கண்டது!.. ஆம் மனிதன் என்பவன் எப்போதும் ஒரேமாதிரியாக இருக்கப் பிறந்தவனல்ல.. அவன் காலத்துக்குக் காலம் சந்தர்ப்பம் சூழ்நிலைகளுக்கேற்ப‌ மாற்றமடையக் கூடியவன் என்பதற்கு கே.பி. ஒரு சிறந்த உதாரணம்.. தவறு செய்தாத மனிதர்கள் யார்தான் இருக்கிறார்கள்?.. உலகில் எந்த ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ விமர்சனங்களுக்கு உள்ளாகாமல் அரசியல் நடத்தியதில்லை… இன்று மகிந்தா மட்டுமா குடும்ப அரசியல் நடத்துகிறார்? இலங்கையில் பண்டாரநாயக்கா குடும்பம் நடத்தவில்லையா? இந்தியாவில் நேரு குடும்பம் நடத்தவில்லையா? பாக்கிஸ்தானின் பூட்டோ குடும்பம் நடத்தவில்லையா? வங்காள தேசத்தில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் நடத்தவில்லையா? கியூபாவில் பெடரல் கஸ்ரோ நடத்தவில்லையா? இப்படி குடும்ப அரசியல் நடத்தியவர்கள் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது…. நமது தமிழ் அரசியல்வாதிகள் குடும்பங்கள் மட்டும் என்ன சும்மா வாழாவிருந்தார்களா… தந்தை செல்வா.. அமிர்தலிங்கம்.. ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற பலர் தங்கள் வாரிசுகள் அரசியலில் பங்கு பற்றி தலைவர்களாக வருவதற்கு தடை விதித்தார்களா என்ன? இந்த விடயத்தில் எவரையுமே குறை கூற முடியாது.. காரணம்.. அரசியல்வாதி ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எந்த அரசியல் சட்டங்களும் தடை விதிக்கவில்லை.. மேலும் அவர்களும் ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் அரசியலில் ஈடுபடுவதற்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கும் பூரண உரிமையுள்ளவர்கள்… இன்று மகிந்தா தனது சகோதரர் கோத்தபாயாவை பாதுகாப்பு அமைச்சராக பதவியில் வைத்திருக்கிறார் என்று குறை கூறுபவர்கள் ஒன்றை மட்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இன்று அவர் கோத்தபாயவிற்குப் பதிலாக சரத் பொன்சேகாவை நியமித்திருத்தால் மகிந்தாவின் ஆட்சி என்றோ முடிந்த கதையாக மறைந்து போயிருக்கும்.. அப்படி நடந்திருக்காது என்கிறீர்களா?.. அரசர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றைய ஜனநாயக ஆட்சிக் காலம் வரையில் ஒரு நாட்டு அரசாங்கத்தின் தலைவராக பதவி ஏற்கும் பெரும்பாலனவர்கள் அரசாங்கத்தில் தம‌து தனிப்பட்ட பாதுகாப்பின் நிமித்தம் முக்கிய பதவிகளில் தம‌து குடும்ப அங்கத்தவர்களையே நியமித்து வந்திருக்கிறார்கள் என்பதை சரித்திரங்களை புரட்டிப் பார்ப்பவர்கள் புரிந்திருப்பார்கள்.. தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்று கூக்குரலிடுபவர்கள் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. இன்று சிங்கள மக்களின் பாரம்பரிய நிலங்களில் நம் தமிழர்கள் மட்டும் இலட்சக் கணக்கில் குடியேறி அங்கு சகல சௌபாக்கியங்களுடன் வாழுகிறார்களே அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்.. ஒரு தமிழன் சிங்கள மக்களின் நிலத்தில் வாழத் தகுதியுள்ளவன் ஆனால் ஒரு சிங்கள மகன் தமிழ் மக்களின் நிலத்தில் வாழத் தகுதியற்றவனா என்ன!.. இதில் எங்கிருக்கிறது நியாயம்? இன்று நமது இந்த நிலைமைக்குக் யார் காரணம்? ஒற்றுமையில்லாத நமது தமிழ் கட்சித் தலைவர்கள்தான் காரணம் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் கண்மூடித்தனமாக நாம் அரசாங்கத்தில் குறை சொல்கிறோம்.. தமிழ்க் கட்சிகள் யாவும் ஒன்றிணைவது மட்டுமல்ல அவர்கள் யாவரும் ஒரு திட்டத்தின் கீழ் ஒன்று சேர்ந்து முதலில் அவர்களது ஒற்றுமையை உறுதிப்படுத்தினால‌ அதன் பின்னர் நமது உரிமைகள் யாவும் ஒரு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் நிட்சயம் கிடைக்கும் என்பது உறுதி.. தமிழ் கட்சித் தலைவர்கள் தங்கள் சுயநலங்களைத் துறந்து தமிழர்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சேர்ந்தியங்கினால் தமிழர்களின் சுபீட்சமான ஒரு எதிகாலத்திற்காக உதிக்கப் போகும் விடிவெள்ளி வெகு தூரத்தில் இல்லை என்பது நிட்சயம்.. ஆனால் நமது தலைவர்களோ கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக‌ மகிந்தாவில் குறை பிடித்து அவரைத் தூற்றுவதில்தான் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர்.. இதில் எந்தவித அர்த்தமுமில்லை.. தூற்றுவதை விடுத்து மகிந்தா என்ற காற்றில் தூற்றிக் கொள்ளும் வழிவகைகளை ஆராய்வதே சாணக்கியம்.. தன்னைத்தானே புலிகளின் புதிய தலைவனாக அறிவித்து.. தமிழர்களின் இன்னொரு இளைய தலைமுறையினரை மீண்டும் போர்க் களத்தில் இறக்கி அவர்கள் எதிர்காலத்தை சிதைக்க எண்ணிய அதே கே.பிதான் இன்று புதிய வாழ்க்கை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புனர் வாழ்வு முகாம்களுக்கு விஜயம் செய்து அவர்கள் மீண்டும் தங்கள் இளைய தலைமுறையினருக்கே உரிய எதிர்காலக் கனவுகளில் மிதப்பதைக் கண்டு களிகூருகிறார் என்றால் அதற்குக் காரணம் மகிந்தா என்ற சிவன்தான்.. அவர் கழுத்தில் கே.பி உள்ளவரை தமிழர் சமுதாயத்தை அழிக்கும் கொடிய‌ விஷமாக அவர் செயல்பட சந்தர்ப்பமில்லை,, ஏனெனில்.. அது பலரைக் குணப்படுத்தும் அருமருந்தாக மகிந்தாவால் மாற்றப்படுகிறது என்பதற்கு கீழ்வரும் வீடியோ லிங் சாட்சியளிக்கிறது.. இந்த அப்பாவிச் சிட்டுக் குருவிகளின் எதிர்காலத்தை சிதைத்தழிக்க திட்டமிட்ட‌ அந்த எத்தர்கள் அழித்தொழிக்கப்பட்ட பின் அவர்கள் இன்று ஒரு சுதந்திர வானத்தில் தங்கள் எதிர்காலத்தை நோக்கி சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள்… அந்த முகங்களில்தான் எத்தனை பூரிப்பு.. அந்த நெஞ்சங்களில்தான் எத்தனை குதூகலம்.. பிரபாகரனாதியோரால் மிகக் கொடுமையாக மூளைச் சலவை செய்யப்பட்டு படு கொலைகள் செய்வதற்கு இறுகிப் போன‌ அவர்கள் மனங்கள் இன்று அந்த கொடிய சிந்தனைகளில் இருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபடுத்தப் படுகின்றன‌.. துப்பாக்கி ஓசைகளை மட்டுமே கேட்டு கேட்டு அலுத்துபோன‌ அந்த செவிகள் இன்று மெல்லிசையை ரசிக்கப் பழகுகின்றன.. புலித்தலைவரின் பெயரையே சதா உச்சரித்து.. உச்சரித்து பழகிப்போன வாய்கள் இன்று பாடல்கள் பாடுவதில் லயித்துப் போகின்றன‌.. துப்பாக்கிகளை சுமந்து நொந்துபோன‌ கைகளும்.. காடுகளிலும் மேடுகளிலும் ஓடியோடி களைத்துப் போன‌ அந்த கால்களும் இன்று அழகாக‌ அபினயம் செய்ய கற்றுக் கொள்கின்றன..எத்தனை பெரிய கொடுமைகளில் இருந்து காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள் அவர்கள்.. அனோஜா என்ற அந்த சிங்களப் பெண்மணி அவர்களை ஒரு தாய்போல்பராமரித்து அந்த பயிற்சி முகாமில் தொழிற் பயிற்சியுடன் கூட‌ கலைப் பயிற்சியுமளிக்கிறார்.. இப்படி அழிவின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்ட நமது இளைய தலைமுறையொன்று மனமாற்றமடைய மூல காரணமாயிருந்தவர் யார் என்று நாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா என்ன!… (தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 57) ‍ சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..!

ஒரு உற்பத்திக் காலத்தில்.. கற்பத்தில் கனியாகி.. காலம் கனிந்த பின்.. மாதொரு மடியில் மகனாய் பிறந்து.. தவழ்ந்து புரண்டு தத்தி நடந்து .. மழலை மொழிந்து.. பின் எழுந்து நடந்து.. ஏடு படித்த‌ இளைஞனாகி.. கல்விக்குத் தக்க‌ கடமையும் புரிந்து.. வாலிப வயதில் மடந்தைகள் நோக்க‌… உள்ளம் புகுந்து உணர்வில் கலந்த உத்தமி ஒருத்தியின் கைத்தலம் பற்றி.. இல்லற வாழ்வின் இனிமையறிந்து.. பிள்ளைகள் பிறந்து நன்மைகள் புரிந்து.. உற்றம் சுற்றம் போற்றிட வாழ்ந்து.. முடிவில் ஒரு நாள் முதுமையடைந்து.. கண்கள் இருண்டு கடுகி நடந்து.. நோயில் விழுந்து பாயில் கிடந்து.. கடைசிக் காலம் கண்களில் தெரிந்து.. உற்றம் சுற்றம் சூழ்ந்து நிற்க‌.. உறவுகளெல்லாம் கண்ணீர் சிந்த.. உடலை விட்டு உயிரும் பிரிய‌.. ஒரு மாயக் கனவாய் மறைந்து போகிறது இந்த‌ மானிட‌ வாழ்க்கை …… ஒரு சராசரி மனிதன் தன் வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற படிமுறையை இயற்கை அவன் பிறந்த நேரம் முதலே எழுதி வைத்திருக்கிறது… பிறப்பு.. ஆம் அது அனைவருக்கும் ஒன்றாக இருந்தாலும்.. இறப்பு சிலருக்கு விபத்தினாலோ.. இடையில் ஏற்படும் தீராத நோயினாலோ அல்லது இயற்கை அனத்தங்களாலோ.. இப்படி ஏதோ ஒரு வகையிலோ இடையில் முடிந்து போவது விதி நடத்தும் ஒரு விளையாட்டுதான்.. இடையில் ஏற்படும் அப்படிப்பட்ட ஒரு துர் மரணத்தை அவன் தலை விதியாக‌ மனிதன் ஏற்றுக் கொண்டாலும் யாரோ ஒருவரால் அவன் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதை அவன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவைகள் யாவுமே மனித நேயம் உள்ள மனிதர்களாலும் ஏற்றுக் கொள்ள‌ முடியாதவைகள் ..ஏனெனில் ஒரு மனிதன் எப்படிப்பட்ட தவறை செய்த போதிலும் அந்த‌ மனிதன் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டியவனே அல்லாமல் அவன் உயிரைப் பறிப்பதற்கு வேறு எந்த மனிதனுக்கும் உரிமையில்லை என்பதுதான் மனுநீதி.. ஆனால் இப்படியாக‌ ஏதோ ஒரு வகையில் அவன் வாழ்க்கை முடிந்து போனாலும் அவன் அறியாத அந்த வாழ்க்கையின் முடிவு வரைக்கும் அவன் நின்மதியாக.. மகிழ்ச்சியாக.. வாழ்வின் படிமுறைகளை அனுபவித்து வாழ்ந்து விட்டுப் போக வேண்டும் என்பதுதான் இயற்கை அவனுக்கு வகுத்து வைத்த‌ நியதி…. ஆனால் இயற்கையின் இந்த படிமுறைகளை விட்டு விலகி தனக்குத் தானே அவன் உருவாக்கிக் கொள்ளும் பேராசையும்.. வீண் பெருமையையும்.. தன்னலமும் எரிச்சலும்.. பொய்யும் புரட்டும்.. போட்டியும் பொறாமையும்.. பிறரை பழி வாங்கும் எண்ணமும்.. அவனை இயற்கை வகுத்த‌ யதார்த்த வழியிலிருந்து விலகச் செய்து.. ஒரு அழிவுப் பாதையை நோக்கி அவன் வாழ்க்கையை திருப்பி.. அவனைப் பாழடித்து.. அவனை ஒரு கொலைகாரனாக.. ஒரு கொள்ளைக்காரனாக.. ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக.. ஒரு சட்ட விரோதியாக.. சமூக விரோதியாக‌.. மாற்றியமைத்து விடுகிறது… மனித நாகரீகம் வழர்ச்சியடையத் தொடங்கிய‌ காலம் முதலே தான் பிறந்த இந்த மனித குலத்திற்கு இயற்கை வகுத்த இந்த‌ வழி முறைகளின்படி அவன் அமைதியை நேசித்து சமாதானமான மகிழ்ச்சியுடன் வாழ வைக்கப்பட‌ வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர்களாக‌.. மனித வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மேலும் பல வழிவகைகளை வகுத்து அவனுக்கு துணை புரிவதற்காக.. சமூகத்தில் உருவானவர்கள்தான் சமூகநலவாதிகள்.. மக்களின் சேவையை மகேசனின் சேவையாக கருதி தங்களால் இயன்றவரை மனித குலத்திற்கு நன்மை செய்யப் புறப்பட்ட இவர்கள் காலப் போக்கில் மனித குலத்தால் தலைவர்களாக மதிக்கப்பட்டு முடிவில் அவர்கள் அரசியல் வாதிகளாக மாற்றமடைந்தனர்… உண்மையான அரசியல்வாதிகள் என்பவர்கள் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்.. ஆசீர்வதிக்கப்பட வேண்டியவர்கள்.. ஆம் அவர்கள்தான் ஒரு இனத்தை பாதுகாத்து அவர்களை வழி நடத்தும் தந்தையின் ஸ்தானத்தைப் பெற்றவர்கள்.. மனித‌ உயிர்களின் பாதுகாப்புக்கும்.. நின்மதியான வாழ்வுக்கும்..உத்தரவாதமளிப்பவர்கள். ஒரே நாட்டில் வாழும் தங்கள் இனத்திற்கும் மற்றைய இனங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக‌ இருந்து தன் இனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வழிவகைகளை ஆராய்ந்து எந்த வழி தன் இனத்திற்கு மட்டுமல்லாமல் அங்கு வாழும் பிற இனங்களுக்கும் கெடுதல் விளைவிகாமல் அவர்கள் அனைவருமே சமாதானமாக வாழ‌ வழி வகுக்கும் என்று கருதுகிறார்களோ அந்த‌ வழியையே தெரிந்தெடுத்து அதன் மூலமே அந்த நாட்டு மக்களின் சுபீட்சத்திற்கு வழி காட்டும் கலங்கரை விளக்கங்களாக இருந்து தன் இனத்திற்காக பாடுபட‌ வேண்டியவர்கள் அவர்கள்.. தன்னுயிரைப் போல் தன் இனத்தை மட்டுமல்லாமல் அந்த நாட்டில் வாழும் பிற இனங்களையும் நேசிக்கும் மனித நேயம் இந்த அரசியல்வாதிகளுக்கு தாராளமாக இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் தனது சுய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் சுயநலவாதிகளாக இவர்கள் செயல்பட்டு இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்குவார்களேயானால் அந்த நாட்டிலே இரத்தக் களரி ஏற்பட்டு பல‌ படு கொலைகள் சர்வ சாதாரணமாக தினந்தோறும் அரங்கேறும் நிகழ்ச்சியாக அமைந்துவிடும் என்பதற்கு நமது இலங்கைத் தீவே மிகச் சிறந்த உதாரணமாகும்.. இலங்கை சுதந்திரமடைந்த‌ காலம் முதல் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வழி காட்டப் புறப்பட்ட இந்த சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் நடத்திய கொடூர‌ இனவெறி கக்கும் கேவலமான‌ அரசியலால் பல இலட்சக் கணக்கான இலங்கைத் தாய் ஈன்றெடுத்த செல்வங்களின் உயிர்கள் காவு போனது மட்டுமல்லாமல் அங்கே ஒரு கொலை வெறிக் கலாச்சாரத்தை வித்திட வழி கோலியது.. இன்று வரையில் இலங்கைத் தீவில் கொலைகளும் கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக நடை பெறுவதற்கு இந்த இனவெறிக் கலாச்சாரத்தையும் ஆயுதக் கலாச்சாரத்தையும் ஆரம்பித்து வைத்த‌ இந்த கேடு கெட்ட‌ அரசியல்வாதிகள்தான் முக்கிய‌ காரணம் என்றால் அது மிகையாகாது… இந்த கேடு கெட்ட‌அரசியலின் இறுதிக் கால கட்டத்தில் தமிழர்களின் வாழ்க்கையை முன் எப்போதுமில்லாதவாறு கேவலமாக சிதைத்தழிக்க புலிகள் உருவானார்கள்.. ஒரு புறம் புலிகள் துரோகிகள் என்று பட்டமளித்து தமிழர்கள் மத்தியிலிருந்த‌ கற்றோரையும் கண்ணியமானவர்களையும்.. முற்போக்குவாதிகளையும்.. சமாதான விரும்பிகளையும் போட்டுத் தள்ளவும்.. தமிழ் மக்களை வெருட்டவும் அடக்கி ஒடுக்கவும் தங்கள் ஆயுதங்களை வடக்கிலும் கிழக்கிலும் பயன்படுத்த‌.. இராணுவத்தில் இருந்து ஆயுதங்களுடன் தப்பியோடிய இராணுவத்தினர் பலரும் அந்த ஆயுதங்கள் மூலம் தென்னிலங்கையில் கொள்ளைச் செயலிலும் பணம் படைத்த சிங்களவர்களின் கைக் கூலிகளாக‌ இயங்கி அவர்கள் எதிராளிகளை போட்டுத் தள்ளும் பணிகளையும் செவ்வனே செய்து முடிப்பவர்களாக செயற்பட்டார்கள்.. இன்னும் செயற்படுகிறார்கள் .. தமிழ் சிங்கள இளைஞர்களான‌ இவர்களில் பெரும்பாலோர் பதினெட்டுக்குக்கும் இருபத்தைந்து வயதுக்கும் உட்பட்ட இளைஞர்கள்தான் என்பது வேதனைக்குரியது.. இன்று அனைத்து யுத்தங்களும் முடிவடைந்த நிலையிலும் ஆயுதம் படைத்த இந்த‌ இளைஞர்களின் அட்டகாசம் அடங்காமல் வடக்கிலும் தெற்கிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. இவைகள் எல்லாவற்றிற்கும் மூல காரணம் எதிர் விளைவுகளைப் பற்றி சற்றேனும் சிந்தித்துப் பாராமல் விடாக் கண்டனும் கொடாக் கண்டனுமாக கடந்த காலத்தில் வாழ்ந்த அரசியல்வாதிகள் நடத்திய அரசியல் சூதாட்டம் இலங்கைத் தீவையை படு பாதாளத்தில் வீழ்த்த வழி கோலியது.. ஒரே வீட்டில் வாழ்ந்த இரண்டு சகோதர இனங்களுக்குள் பகையை மூட்டி விட்டு அதில் குளிர்காய்ந்தது இந்த தன்னலவாதிகள் கூட்டம்.. என்றோ சுமுகமாக தீர்த்து வைக்கப் பட்டிருக்க வேண்டிய இந்த இனப் பிரச்சனையானது இலங்கையின் முதல் பிரதமர் முதல் மகிந்தா ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாண்ட ஜனாதிபதிகள் வரை ஒரு தீர்த்து வைக்கப்பட முடியாத பிரச்சனையாக‌ இருந்ததற்கு காரணம் எந்த சிங்கள அரசியல்வாதியோ அல்லது தமிழ் அரசியல்வாதியோ இந்தப் பிரச்சனையை முறையாக‌ தீர்த்து வைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய இருந்தும் அவைகள் யாவற்றையும் இயன்றவரை பின்தள்ளி தங்களால் முடிந்தவரையில் இனக்குரோத்தையே சிங்கள சமூகத்திலும் தமிழ் சமூகத்திலும் வழர்த்து வந்தார்கள்.. இந்த தமிழ் சிங்கள் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளுக்கும் தெருச் சண்டியர்களின் செயல்பாடுகளுக்கும் இடையில் அவ்வளவு பெரிதான வேறுபாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை.. இலங்கையில் ஒரு அரசியல்வாதி தன் இனத்தால் மதிக்கப்பட வேண்டுமானால் அவர் ஒரு தலை சிறந்த இனவாதியாகத்தான் இருக்க வேண்டும் என்று இந்த சிங்கள தமிழ் அரசியல்வாதிகள்.. அரசியல்வாதி என்ற வார்த்தைக்கு வரைவிலக்கணம் வகுத்திருந்தார்கள்.. குள்ள நரித் தந்திரவாதியான‌ ஜே.ஆரின் காலத்தில் இந்த இனவெறியின் உச்ச கட்டம் இலங்கையில் கொடி கட்டிப் பறந்தது..இனப் படு கொலைகள் தாராளமாக நிறைவேற்றப் பட்டன‌.. அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இந்த வெறி சற்றுத் தணிந்து இனக் கலவரங்கள் நிறுத்தப் பட்டாலும் தமிழர்களின் பிரச்சனையை துணிவுடன் அணுகி அதைத் நிரந்தரமாக‌ தீர்த்து வைத்து நாட்டில் நிலையான‌ சமாதானத்தை நிலைநாட்ட‌ அவர்கள் எவருமே பெரும்பாலும் சரியானபடி முயற்சிக்கவுமில்லை…அதைச் சரியான கோணத்தில் அணுகவுமில்லை.. காரணம்… பிரபாகரன் என்ற தமிழர்களை அடக்கியாள ஒரு அராஜகவாதி தமிழர்கள் மத்தியின் உருவாகி தமிழீழமென்னும் என்றுமே சாத்தியமாகாத‌ ஒரு கோட்பாடை உருவாக்கி அதை ஒரு வியாபாரமாக்கி அதற்கு அரசியல் முலாம் பூசி அவர் புரிந்த மனிதப் படு கொலைகள் மனித குலத்தையே அச்சுறுத்தி நடுநடுங்க வைத்ததால் அந்த தமிழ் சண்டியருடன் இந்த சிங்கள சண்டியர்கள் சற்று அடக்கித்தான் வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது… வாசித்தார்கள்.. அடிக்கடி மோதுவது போல் பாசாங்கு செய்து கொண்டு அவருடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொண்டு தங்கள் அடாவடி அரசியலை தொடர்ந்து நடத்துவதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்களேயன்றி பிரபாகரன் என்ற தேசியப் பயங்கரவாதிக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழர்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தி இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சமாதானத்தையும் நிலைநாட்ட‌ எவருமே முன் வரவில்லை.. மேலும் அவர்கள் தயக்கத்திற்கான இன்னொரு காரணம்.. பிரபாகரனின் உயிர் வாழ்தலிலேயே இந்தச் சிங்கள இனவாத‌ அரசியல்வாதிகளின் அரசியல் எதிர்காலமும் தங்கியிருந்தது என்பது இந்த இருபாலாரின் கடந்தகால நடவடிக்கைளையும் கூர்ந்து அவதானித்தவர்களுக்கு அது நிட்சயம் புரிந்திருக்கும்…தெளிவாகத் தெரிந்திருக்கும்.. பிரபாவின் வெற்றிகளை தமிழர்களின் வெற்றியாக சித்திக்கத் தெரியாத தமிழர்கள் கூட்டம் ஒன்று மந்தித்தனமாக‌ தமிழ்ப் பிரதேசங்களிலும் வெளி நாடுகளிலும் கொண்டாடி மகிழ‌.. இராணுவத்தின் வெற்றியை சிங்கள மக்களின் வெற்றியாக எண்ணிக் கொண்டாடி மகிழந்தது சிங்கள‌ மக்களின் மத்தியிலிருந்த‌ இன்னொரு புத்தியில்லாத மந்திகள் கூட்டம் ஒன்று.. ஆனால் இந்த இரு பாலாரின் வெற்றிக் களிப்பின் பின்னணியில் அழிந்து கொண்டிருந்ததோ வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்த‌ அந்த‌ பரிதாபத்திற்குரிய அப்பாவி சிங்கள தமிழ் மக்களின் பிள்ளைச் செல்வங்கள்தான்… இங்கே தமிழர்களின் ஏக பிரதிநிதியாக‌ தங்களைக் காட்டிக் கொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் எதைத்தான் தமிழ் மக்களுக்காக தன் காலத்தில் சாதித்திருந்தார்? புலிகள் எவரைக் கொல்கிறார்களோ அதுவே முறையானது என்ற கொள்கையின் அடிப்படையில்தானே அந்த விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது?.. அதில் எங்கிருந்தது தமிழர்களின் பங்கு?.. எங்கிருந்தது மக்களுக்குரிய‌ கருத்துச் சுதந்திரம்?.. தமிழ் மக்களை எந்த வேளையில் எப்போது இந்த ஆயுதங்கள் பாதுகாத்தன?.. சாதாரண ஒரு தமிழ் குடிமகனின் வீட்டு வாசலில் பதுங்கியிருந்து அந்த வழியால் போகும் இராணுவ வாகனத்தை நிலக்கண்ணி வைத்து தகர்த்து விட்டு அதில் சிதறிச் செத்தவர்கள் போக‌ சிதறிய வாகனத்திலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாய் வெளியே வரும் எஞ்சிய இராணுவச் சிப்பாய்களையும் சுட்டுக் கொன்று விட்டு ஓடியொழியும் இந்தப் போராளிகளின் தலை மறைவிற்குப் பின் ஸ்தலத்திற்கு விரைந்து வரும் இன்னொரு இராணுவப் பட்டாலியன் அந்த சுற்று வட்டாரத்திலுள்ள வீடுகளில் புகுந்து அங்கிருந்த வாலிப வயதுள்ள யாவரையும் கதறக் கதற வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொலை செய்தபோது எங்கே போனது புலிகள் குறிப்பிடும் அந்த‌ “தமிழர்களின் பாதுகாப்புக்காக‌ ஆயுதம் ஏந்தினோம்” என்னும் அந்த வார்த்தையின் அர்த்தம்.. அது எப்படிப் பாதுகாத்தது தமிழர்களின் உயிர்களை?.. இப்படித்தானே புலிகள் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள்.. இந்தப் பாதுகாப்பானது அத்துடன் நின்று விடாமல் அவர்களின் இறுதி மூச்சுவரை தொடர்ந்ததே!.. ஆம் முள்ளி வாய்க்காலில் தமிழர்களை மனிதக் கேடயங்களாக்கி அவர்களில் பெரும்பாலோரை அழித்தொழித்து விட்டுதானே அடங்கியது அந்தப் பாதுகாவலர்களின் இறுதி மூச்சுக‌ள்… பஞ்ச தந்திரத்துடன் இவர்கள் நடத்திய அரை வேக்காடு அரசியலால் இலங்கைத் தீவில் கண்டு களிப்பதற்கு எதுவுமில்லாமல் பல தசாப்தங்களை கண்டு களைத்த நிலையில் மகிந்தாவின் சகாப்தம் ஆரம்பமானது.. இவர் ஜனாதிபதியாக‌ முடி சூட்டிக் கொள்வதற்கு வியாபார நோக்கமுள்ள பிரபாகரனாதியோர் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க.. அப்படி அவர் பதவியேற்றதும் தனது முதல் நடவடிக்கையாக புலிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார் அவர்.. அதை முந்தைய ஜனாதிபதிகள் போல் அல்லாமல் உண்மையிலேயே இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுத்து அவர்கள் நன்மதிப்பை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும்.. நாட்டிலுள்ள‌ இனங்களுக்கிடையில் உண்மையான ஒரு நிரந்தர சமாதானம் ஏற்பட்டு கடந்த காலங்களின் நடைபெற்ற‌ போரினால் அழிந்து சிதைந்து போயிருந்த இலங்கையின் பொருளாதாராமும் அதன் கட்டுமானப் பணிகளும முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை உள்ள ஒரு தேசியவாதியாகவும் இதை அவர் முன்னெடுத்தார்.. ஆனால் நடை பெற்ற‌ பேச்சு வார்த்தைளிலோ .. இராணுவத்தை அகற்று.. தமிழ் பகுதிகளில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படுவதை நிறுத்து.. போன்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத பல‌ கோரிக்கைகளை முன்வைத்து அந்தப் பேச்சு வார்த்தைகளை குழப்பியடிப்பதில் பிரபாகரனாதியோர் முன்னின்றார்களேயன்றி.. தமிழர்களுக்கான எந்த ஒரு சாத்தியமான‌ தீர்வையும் அவர்கள் முன் வைக்கவுமில்லை.. மூச்சு விடவுமில்லை. (மகிந்தாவின் காலத்தில் இராணுவமும் பொலிசாரும் தமிழர்கள் மத்தியில் புலிகள் நடத்தி வந்த‌ அடக்கு முறைக்கும்.. அட்டகாசமான‌ வசூலிப்புகளுக்கும்.. வேண்டிய இடத்தில் வேண்டாதவர்களை போட்டுத் தள்ளும் நற் பணிகளுக்கும் பெருந் தடையாக இருந்தார்கள் என்பது வேறு விசயம்..) பேச்சு வார்த்தைகள் முறிவடைந்த நிலையில் மகிந்தாவை தப்புக் கணக்குப் போட்ட புலிகள் மீண்டும் யுத்தம்.. போர் நிறுத்தம் என்று பழைய பாணியில் தங்கள் போக்கை ஆரம்பிக்க அதற்கு புலி ஊடகங்கள் ஒத்தூத அவர்கள் வியாபாரம் ஜோராக ஓகோ என்று வெற்றி நடை போடத் தொடங்கியது.. புலிகளின் செயற்பாடுகளால் போர் பிரியர்களாக மூளைச் சலவை செய்யப்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் புலிப் பினாமிகளுக்கு வாரிக் கொடுக்கும் பாரி வள்ளல்களானார்கள்.. அதர்மம் என்றுமே நிலை நிற்பதில்லை.. அக்கிரமம் நிக்கிரகம் செய்யப்படும் நாளும் வந்தது.. அது மாவிலாறு வடிவில் வந்தது.. மாவிலாற்றைப் பூட்டி தங்கள் அழிவுக்கு பாதையை திறந்து விட்ட‌ புலிகளை நோக்கி முன்னேறிய‌ மகிந்தாவின் இராணுவம் புலிகள் நினைத்து போல் போர் நிறுத்தம் என்றதும் அது இடை நிறுத்தப் படவில்லை.. போர் நிறுத்தம் என்பது தங்கள் படை பலத்தையும் ஆயுத ஆயுத பலத்தையும் அதிகரிக்க புலிகள் போடும் போலி வேசம் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருந்த மகிந்தா அதை நிறுத்த மறுத்தார்.. தொடர்ந்தார்.. பிரபாகரனாதியோருக்கு நிரந்தரமாக‌ முள்ளி வாய்க்காலில் முற்றுப் புள்ளி வைக்கும்வரை.. தமிழ் மக்கள் தாராளமாக‌ கொல்லப்பட வேண்டும் அதனால் சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நன்றாகவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட புலிகளின் இறுதி யுத்தத்தை சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை.. காரணம்.. புலிகளுக்கு சார்பாக செயல்பட்ட நோர்வே கூட அந்தப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் கட்டுப்பாடுப் பகுதியிலுள்ள வன்னிச் சனங்களை அவர்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசத்தில் போக அனுமதிக்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் புலிகள் அதை அலட்சியம் செய்ததால் சர்வதேசம் வெறுப்படைந்து அந்த இறுதிக் கட்டத்தில் மௌனம் சாதித்தது.. அன்று புலிகள் அவர்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அப்படி அந்த அப்பாவிச் சனங்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் போக அனுமதித்திருந்தால் அந்த இறுதிக் கட்டத்தில் புலிகளுக்கு உதவி செய்ய சர்வதேசத்தில் ஏதாவது ஒரு நாடாவது முயற்சித்திருக்கும்.. புலிகள் யாவரும் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர் சரணடைந்த புலிப் போராளிகளுக்கு புனர்வாழ்வழிப்பதில் அக்கறை காட்டியது மகிந்த அரசு.. அவர்களில் தொழில் பயிற்சியளிக்கப்பட்ட பலர் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.. அவர்களில் பலருக்கு திருமணங்கள்கூட அரசாங்க செலவில் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.. அகதிகள் முகாம்களில் உள்ளவர்களில் 90 வீதமானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.. இவர்கள் அனைவரையும் குடியேற்றுவதில் சில குறைபாடுகள் இருந்த போதிலும் அவைகளை இயன்றவரை நிவர்த்தி செய்து தீர்த்து வைப்பதில் மகிந்தாவின் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எந்த தமிழ் மகனும் இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டதாகவோ அல்லது கொலை செய்யப்பட்டதாகவோ தகவல்கள் எதுவும் இல்லை.. பிரபாகரனாதியோரின் அழிவிற்குப் பின்னர்தான் அவர்கள் காலத்தில் பிறந்த இளைய சமுதாயமொன்று மனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை இன்று வடக்கிலும் கிழக்கிலும் அறியத் தொடங்கியிருக்கிறார்கள்.. இன்று சிங்கள சமூகம் எவ்வளவோ முன்னேறி வருகிறது.. இனத்துவேசத்தை ஒதுக்கி யதார்தமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளது.. அதற்கு காரணம் மகிந்தாவின் முயற்சிதான் என்றால் அது மிகையாகாது.. தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் அவர் தமிழில் பேசாமல் தமிழ் மொழியை சிங்கள மக்கள் அனைவரும் கற்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதற்கு அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றே எடுத்துக் காட்டாகும்..”வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி! வாழிய வாழியவே!” என்று தமிழ் மொழியை நன்றாகக் கற்றுத் தேர்ந்த பௌத்த பிக்குகள் உட்பட‌ சிங்கள அரசாங்க ஊழியர்கள் பலர் அண்மையில் ஒன்றாகக் கைகோர்த்தபடி அந்த‌ மேடையில் உருக்கமாக பாடியிருப்பதை கேட்கும்போது சற்று மெய் சிலிர்க்கத்தான் செய்கிறது…. அவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் சித்தியெய்தியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட அன்று தான் இப்படிப் பாடி அசத்தியுள்ளார்கள். இந்த தமிழ் மொழிக்கான பயற்சியை முதலில் தனது சொந்த‌ தொகுதியான அம்பாந்தோட்டையிலேயே மகிந்தா ஆரம்பித்து வைத்து சிங்கள மக்கள் தமிழ் கற்க வேண்டும் என்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.. சிங்கள மக்கள் மத்தியில் இன்று இனவெறி காணாமல் போய்க் கொண்டிருக்கும் இதே கால கட்டத்தில் புலி வழிவந்த சில புத்திசாலிப் பிரமுகர்கள் தங்கள் பிழைப்புக்காக இன்னும் இனவெறியையே தங்கள் ஆயுதமாக ஏந்தி தமிழ் மக்களுக்காக போராடப் புறப்பட்டிருக்கிறார்கள்.. இவர்களின் பித்தலாட்டங்களை தற்போது சற்றளவேனும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு புத்தி தெளிந்திருக்கும் புலம் பெயர் தமிழர்கள் அவர்களை அலட்சியம் செய்யவும்..நிராகரிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் செயற்பாடுகளில் இருந்து தெரியக் கூடியதாக இருக்கிறது.. தாம்தூம் என்று பெரிய எடுப்புடன் ஆரம்பிக்கப்பட்ட “நாடு கடந்த தமிழீழமும்”.. “வட்டுக்கோட்டைத் தீர்மானமும்” இன்று எங்கோ காணாமல் போய் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டன‌.. ஒரு உண்மையான அரசியல்வாதி என்பவன் தன் மக்களுடன் கூட‌ இருந்து அவர்கள் துன்பங்களில் பங்கு கொண்டு அவர்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொடுப்பானேயன்றி தான் மட்டும் வசதியாக‌ பிறிதொரு நாட்டில் வாழ்ந்து கொண்டு தனது மக்களின் அழிவுக்கு பாதை வகுத்துக் கொடுக்க மாட்டான்.. மகாத்மா காந்தி தென்னாபிரிக்க இந்தியர்களின் உரிமைக்காக போராடியபோது அவர் தென்னாபிரிகாவிலும்.. இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியபோது அவர் இந்தியாவிலும்தான் இருந்தார்.. தென்னாபிரிக்காவில் இருந்து கொண்டு இந்திய சுதந்திரத்திற்காகவும் இந்தியாவில் இருந்து கொண்டு தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைகளுக்காவும் அவர் போராடியிருந்தால் அவைகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்திருக்கும்… ஆகவே உண்மையிலேயே இவர்கள் துணிவுள்ள‌ போராட்ட வீரர்களாக இருந்தால் தாங்கள் தற்போது வாழும் நாட்டின் பிரஜா உரிமையை இரத்துச் செய்து விட்டு இலங்கைக்கு திரும்பிச் சென்று அங்கிருக்கும் தமிழர்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டு அவர்கள் குறிப்பிடும் நோக்கங்களுக்காக‌ போராடிப் பார்க்கட்டும்… புலம் பெயர்ந்த மக்களை பேய்க்காட்டி உங்கள் பணப்பைகளை நிரப்புவதற்காக‌ இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்காதீர்கள்.. அவர்கள் சுபீட்சத்தில் அக்கறையுள்ளவர்களா நடித்து இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தை சிதைத்து சீரளித்து விடாதீர்கள்.. அவர்களை நின்மதியாக வாழ விடுங்கள்.. மீண்டும் ஒரு முறை புலிகளின் வழிகளில் சென்று இனவெறிக் கொள்கையை கையில் எடுத்தால் நமது தமிழினம் என்பது சர்வ தேசத்தாலும் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு எங்கோ ஒரு பனிமூட்டம் சூழ்ந்த‌ பாலைவனத்தில் தட்டந்தனியான கேட்பாரற்ற ஒரு பட்டமரமாகத்தான் அது காட்சியளிக்கும் என்பது சர்வ நிட்சயம்.. அன்று போராட்டம் என்று ஆயுதம் ஏந்திய அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவர்கள் பலர் இன்று அவைகள் அனைத்துமே அர்த்தமற்றவைகள் என்பதை உணர்ந்து நேசக் கரம் நீட்டும் மகிந்தாவின் அரசுடன் இணைந்து தமிழினம் மகிழ்ச்சியாகவும் சுபீட்சத்துடன் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்ற வேட்கையுடன் தங்களால் இயன்றவரை தொண்டாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவைகள் காலப் போக்கில் நிட்சயம் மேலும் வெற்றியளிக்கும்.. சமாதானப் பாதையில் முன்னெடுக்கப்படும் எந்தக் காரியமும் தோல்வியில் முடிவடைவதில்லை.. ஆனால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டு இராணுவத்துடன் மோதி சகோதர போரட்ட இயக்கங்களையும் அழித்து.. இறுதியில் மக்களையும் அழித்து.. தாங்களும் தோற்றுப் போய் சரணடைந்தோ அல்லது அழிந்துபோன இயக்கங்களின் வரலாற்றில் புலிகள் வரலாறு மட்டுமல்லாது .. காஷ்மீர்.. பங்களாஷ்.. இந்தோனேசியா.. கிழக்காபிரிக்கா.. இலத்தினமரிக்கா போன்ற நாடுகளில் நடந்த போராட்ட வரலாறுகளும் இதற்கு சான்று பகிர்கின்றன. ஆகவே இந்த ஆயுதப் போராட்டம் என்பது அர்த்தமற்றது என்பதை எமது தமிழினம் இனியாவது நன்கு உணர்ந்து கொண்டு வேண்டாத இந்த இனவெறி அரசியலை வெறுத்து சமாதானப் பாதையொன்றுக்கு தங்கள் மனதைத் திருப்ப வேண்டும்.. அது ஒன்றுதான் தமிழர்களுக்கான சுபீட்சமான வாழ்க்கையை நோக்கி வழி நடத்தும் சிறந்த பாதையாகும்…. (தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..!

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3 ஏற்கனவே இரு பாகங்களை வாசித்த பலர் அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பிலும், இதன் போக்கு எத்தகைய உண்மை பொதிந்துள்ளது என இன்னொரு சாராரும், வழமைபோல் இவருடைய ஆக்கத்தில் வெளிவருகின்ற முற்போக்கு கருத்துக்கள் இதில் வெளிவருமா என்று சில அரசியல் நகர்வாளர்களும், விவாதத்திற்கே என்று இன்னொரு  சிலரும் …, சஞ்சரிக்கத்தான் போகின்றனர்… இது ஒருபுறம் இருக்க, பேரறிஞர் ஐயா சிவத்தம்பியைப்பற்றி ஒரு சம்பவத்தை பதித்தாகவே ண்டும் … காரணம் “கடந்த வரலாற்று உண்மைகளை,  இன்றைய அநர்த்தத்தோடு ஒப்பிடும்போதே, எதிர்கால பாதைகளிற்கான கடினமான கற்கள் விலக்கப்படுகின்றன…”  இதனடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டில் ஐயா மதிப்பிற்குரிய சிவத்தம்பி அவர்கள் “தமிழ்நாடு கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க குழுத்தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பியும்இ தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. ஆனால், மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள் அண்மையில் பி.பி.ஸி. தமிழோசைக்கு தெரிவித்தார்.” என பல இணையங்கள் காரசாரமாக வெளியிட்டிருந்தன… இதற்கும் இலங்கை வரலாற்றிற்கும் என்ன சம்மந்தம் என்று ஒரு சிலர் வினாவத்தான் செய்வார்கள்!!!… “எப்போதும் பலம்பொருந்தியவர்களின் செயற்பாடுகள் சர்வதேச சிறப்பைப்பெறும், மாறாக பலங்குன்றியவர்கள் சிறப்பான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் அது விமர்சனத்தோடே ஸ்தம்பித்துவிடுகின்றன…” என எழுகின்ற கருத்தின் அடிப்படையில் பேரறிஞரான ஐயாஅவர்கள் திடமாக வார்த்தைகளையும் அடிகளையும் எடுத்துவைக்காது, பலவீனமான கருத்தைத்தெரிவித்து விட்டு இப்போது 2010ல் அந்த விழாவில் கலந்து சிறப்பித்து வந்திருக்கின்றார்… நல்ல செயற்பாடு, இதையே அவர் ஆரம்பத்தில் திடமாகச்சொல்லியிருந்தால் அனைத்து தமிழ் ஊடகங்களும் தமிழ் அறிஞர்களும் அதுதொடர்பாக பேசியிருப்பார்கள், அந்த மாநாட்டில் பல தமிழர்கள் கலந்தும் இருப்பார்கள்…  தமிழ் உலகம் முழுதும் சிறப்பிக்கப்பட்டிருக்கும்… இவ்வாறான செயற்பாடுகளே வரலாற்றை மழுங்கடித்து முன்னுக்குப்பின்னான முரன்பாடுகளை எதிர்காலச்சந்ததிக்குத்து தோற்றுவிக்கின்றது. முன்னிக்கவேண்டும் ஐயா அவர்களே! தவறுகள் பகிரங்கமாக்கப்பட வேண்டும் அப்போதுதான் அவை திருத்தப்படும்!!! இனி… அடுத்து பகுதிக்குச் செல்வோம். முதலாவது பகுதியிலும், இரண்டாவது பகுதியிலும் தமிழர்களின் ஆரம்ப அடிகளைப்பார்த்து, பல விடயங்களை அறிந்திருப்பீர்கள். எனினும் இரண்டாவது பகுதி சற்றுக்கடினமாகத்தான் இருந்திருக்கும் என்பதனை அன்பர்கள் எனக்கு எழுதிய விமர்சனங்கள் தெளிவுபடுத்துகின்றது. எனவே மேலும் இலகுபடுத்துப்பட்ட தமிழிலும், நடைமுறை வரிகளாலும் அலங்கரிக்கப்பட்டே இம்மூன்றாவது பகுதி வெளிவருகின்றது. இரண்டாவது பகுதியில் முன்னைய அரசர்கள் பற்றி அலசியிருந்தோம். அது ஒரு புறம் இருக்க,  இலங்கை அரக்கர் வாழும் ஒரு பிரதேசமாக புராணங்கள் விளக்கம் கொடுக்கின்றன… இது எத்தனை தூரம் உண்மை என்பதனை சற்று நோக்கித்தான் பார்க்க வேண்டும். இன்றைய தமிழ் வரலாற்றை கண்ணோக்குமிடத்து, தமிழீழம் என்றொரு தேசத்தில் மாவெரும் படையை நடாத்திய கரிகாளச்சோளனுக்கு ஒப்பான ஒரு மாவீரன் பிரபாகரன் என்ற நாமத்துடன் சிறப்பாகச் செங்கோலாட்சி நடத்திய வரலாறுகள் காட்டத்தவறவில்லை, அந்தத் தமிழீஈழ அரசனையும் அவன் படைகளையும், சிங்களக்காடையர்கள் பெரும் மனிதாபிமானமற்ற அரக்கத்தனமாக தோற்கடித்து பெருந்தொகையான தமிழ் குடிகளை கொண்று குவித்தனர்… என்று வரலாற்றில் வருகின்ற போது, … இங்கு சற்று நிறுத்திக்கொள்ளுதல் அவசியம்!!! அதாவது, “சிங்களக்காடையர்”, “அரக்கத்தனமாக” என்ற இந்தப்பதங்கள் சிங்களவர்களுக்கு மாறாக தமிழர்களாலே குறிப்பாக புலிகளைச்சார்ந்த அல்லது நலன்விரும்பிகளான தமிழர்களால் சித்தரிக்கப்படுகின்ற போது, சிங்களவர்கள் வேறுவகையில் இதனை வர்ணிக்கப்போகின்றார்கள் என்ற உண்மையினைப்புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில் மேல் குறிப்பிட்ட வார்த்தைகள் அதாவது, “சிங்களக்காடையர்”, “அரக்கத்தனமாக”  என்னும் பதத்தை விசாலமாகப்பாத்தால், காடையர்கள் மனிதர்களாக இருந்தாலும் மிருகத்தனமாகச் செயற்படுவோர்கள் எனவும், அரக்கர்கள் மனித உறுவில் மிருகங்களாகவும், மனித மாமிசம் தின்பவர்களாகவும், மனிதர்களிலும் பார்க்க பலம்கொண்டவர்களாகவும், மாயை மந்திரங்களை கையாளத்தெரிந்தவர்களாகவும் பார்ப்பதற்கு அசுரத்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்றே நம் கதைகள் விளக்குகின்றன… இந்தவகையில் சிங்களவர்களைப்பார்க்கும் வரையில் அது கூட உண்மையாகத்தான் இருக்கின்றது. ஆனால் சிங்களவர்களைப்பார்த்தபின்னர்தான் தெரிகின்றது பல சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பார்வையில் வேறு பாடே இல்லை என்று! இதுபோலவே வரலாறறுப்பக்கங்களிலும் பல உண்மைகள் நமக்குத் தெரியாமலே புனையப்பட்டுள்ளன. ஊண்மைகள் உண்மைக்குப்புறம்பாக வெளிப்படுத்தப்பட்டன. அதுவாகில், ஆரிய இனத்திற்கும் திராவிட இனத்திற்கும் அன்றைய ஆரம்ப காலத்தில் இருந்தே ஒவ்வாத்தன்மை காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்… சிங்களவர்களோ, ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள். நான் சிங்களவர்கள் என்று குறிப்பிடுவது, விஜயனின் காலத்தில் இருந்து வெளிவந்தவர்களைக்குறிக்கின்றது… “குவேனியை” சார்ந்து தடமாறியகாலத்தில் இருந்தே புதிய தனி இனமாக சிங்களவர்கள் தம்மை வகுத்துக்கொண்டனர் என்பதனை பின்வரும் பகுதிகள் தெளிவு படுத்தும். இப்போது இரண்டாவது பகுதியில் குறிப்பிட்ட பல அரசர்களைப்பார்க்கும் முன்னர் பிரபல்யமாக காணப்பட்ட இலங்காபுரியின் மாமன்னனான இரவணனின் வரலாற்றை சற்றுப்பார்ப்போம். இராவணனின் வரலாறு என்றவுடனேயே எமக்கு கண்முன்தோன்றுவது இராமாயணமே! இந்த ராமாயணம் யாருடைய பக்கத்தில் இருந்து எழுதப்பட்டது என்றும் பார்ப்பது மிக அவசியமாகக்காணப்படுகின்றது. அதாவது, இப்படி உதாரணப்படுத்துவோம், இராவணன் – பிரபாகரன் இராமன் – இராஜபக்ஷ இராவணன் என்றதும் கொடியவன், அரக்கன் என்ற எண்ணம் தமிழர்களான எம்மவர்களிடமும் இருப்பதுதான் ஆச்சரியம்!. பின்வரும் ஆதாரங்கள் இராவணனின் உயர்தரக்குணங்கள் தெளிவாக வெளிக்காட்டப்படும். அதே போன்றே பிரபாகரனின் உயர்தரக்குணத்தை அவருடன் கூடியிருந்தோரும், அவர் நம்பியிருந்தோரும் தற்போது தமது நன்மைக்காக கேவலப்படுதஇது முயற்சிப்பதிலிருந்து புலிகளின் பல சிறப்பம்சம் காலப்போக்கில் மறைக்கப்படப்போகின்றது என்பதும் உண்மையே!  Read More »

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3

ஏனைய செய்திகள்

கிளிநொச்சி பரந்தன் உமையாள் புரத்தில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்பு..!

கிளிநொச்சி பரந்தன் உமையாள் புரத்தில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்பு..!

கிளிநொச்சி பரந்தன் உமையாள் புரத்தில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்பு..!
கிளிநொச்சி பரந்தன் உமையாள் புரத்திலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து பெருந்தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிராதேசம் மீள்குடியேற்ற கிராமமாகும். அங்கிருக்கும் வைரவர் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்த பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்தே சனிக் கிழமை மாலை இவை மீட்கப்பட்டுள்ளன. கிணறு நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
முன்னாள் புலி உறுப்பினர்கள் 500பேர் குடும்பத்துடன் இணைப்பு..!
புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் 500பேர் எதிர்வரும் [...]

ஐ.நா நிபுணர்குழு செப்டம்பரில் கூடி ஆராய்வு // யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் நிறுவ நடவடிக்கை..!

ஐ.நா நிபுணர்குழு செப்டம்பரில் கூடி ஆராய்வு // யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் நிறுவ நடவடிக்கை..!

ஐ.நா நிபுணர்குழு செப்டம்பரில் கூடி ஆராய்வு..!
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் கூடி ஆராயவுள்ளது. இந்த நிபுணர்கள் குழு நியூயோர்க்கில் கூட உள்ளதாகவும், அமர்வுகள் நடைபெறவுள்ள இறுதித் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலைமாதம் 19ம்திகதி முதல்தடவையாக இந்த நிபுணர்கள்குழு இலங்கை விவகாரம் குறித்த அமர்வுகளை நடத்தியிருந்தது. நான்கு மாதங்களுக்குள் [...]

இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய நிபந்தனை..!

இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய நிபந்தனை..!

இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய நிபந்தனைகளையும் கொள்கைகளையும் விதிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்;மானித்துள்ளது.  மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளர் எல்.கே.ருகுணுகே தெரிவித்துள்ளார். பணிப்பெண்களை நியமிக்குமுன் இந்த நிபந்தனைகளுக்கும் கொள்கைகளுக்கும் மேற்படி நாடுகள் இணக்கம் தெரிவிக்க வேண்டுமென்றும், பணிப்பெண்களின் பாதுகாப்பை குறித்த நாடுகளின் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் பஸ் நிலையத்தில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முனைந்தோர் கைது // இந்திய அரச உதவியுடன் யாழ். பல்கலையின் விஞ்ஞானபீடம் விரிவாக்கம்..!

மன்னார் பஸ் நிலையத்தில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முனைந்தோர் கைது // இந்திய அரச உதவியுடன் யாழ். பல்கலையின் விஞ்ஞானபீடம் விரிவாக்கம்..!

மன்னார் பஸ் நிலையத்தில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முனைந்தோர் கைது..!
மன்னார் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த 15வயது சிறுமியை பலவந்தமாக அருகில் இருந்த மலசலகூடத்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த சம்பவமொன்று இன்றுமாலை 4.30க்கு இடம்பெற்றுள்ளது. இதனுடன் தொடர்புபட்ட நால்வரை பொலீசார் கைதுசெய்துள்ளனர். பலவந்தமாக குறித்த இடத்திற்கு அழைத்துச்சென்ற சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர்கள் அதனை கையடக்கத் தொலைபேசியில் படமெடுக்கவும் முயன்றுள்ளனர்.   கைதானவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சிறுமி மன்னார் வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரச [...]

அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் எதிர்வரும் 7 ம் திகதிக்கு பின்னர்  சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது // ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சு பதவிகளை வழங்க தீர்மானம்..!

அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் எதிர்வரும் 7 ம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது // ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சு பதவிகளை வழங்க தீர்மானம்..!

அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் எதிர்வரும் 7 ம் திகதிக்கு பின்னர்  சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது..!
அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் எதிர்வரும் 7 ம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் 2 தினங்களில் எடுக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது அவசர சட்டமூலம் என்ற அடிப்படையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் எமது செய்திப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியுடன், ஆளும் [...]

எஸ்- பி-திசாநாயக்கா செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் விஜயம் // நாட்டை ஒன்றாக இணைத்த போதும் மக்கள் இன்னமும் ஒன்றிணையவில்லை – டியூ.குணசேகர..!

எஸ்- பி-திசாநாயக்கா செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் விஜயம் // நாட்டை ஒன்றாக இணைத்த போதும் மக்கள் இன்னமும் ஒன்றிணையவில்லை – டியூ.குணசேகர..!

எஸ்- பி-திசாநாயக்கா செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் விஜயம்..!
உயர்கல்வி அமைச்சர் எஸ்- பி-திசாநாயக்கா செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகெர்ள்வதுடன் கல்வித்திணைக்கள சிரேஸ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலையும் நடத்துவார் அன்று பிற்பகல் வவுனியாவிற்கு வரும் அமைச்சர் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக நிர்வாகத்தினருடன் வளாக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெறும் அத்துடன் பம்பைமடுவில் உள்ள வளாக கட்டிட நிர்மாணப்பணிகளையும் நேரில் சென்று பார்வையிடுவார் என வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் [...]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் // வவுனியா ஆச்சிபுரக்கிராமத்துக்கு மின்சாரம் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றது..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் // வவுனியா ஆச்சிபுரக்கிராமத்துக்கு மின்சாரம் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றது..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெறவுள்ள பொதுச் சபைக் கூட்டத்திற்கான இலங்கை இராஜதந்திரிகள் குழுவிற்கு ஜனாதிபதி தலைமை தாங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய நாடுகளுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெக்ஸிக்கோ மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு [...]

நிரூபமா ராவ் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் // வடக்கிலுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி..!

நிரூபமா ராவ் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் // வடக்கிலுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி..!

நிரூபமா ராவ் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்..!
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் ஏனைய விடயங்கள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த விஜயம் அமைய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், இந்த விஜயத்திற்கு முன்னோடியாக நிரூபமா ராவ் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. [...]

இந்திய இராணுவக் குழு இலங்கை வரவுள்ளதுடன், 20000 இந்திய தொழிலாளர்களும் வரவுள்ளனர் // முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!

இந்திய இராணுவக் குழு இலங்கை வரவுள்ளதுடன், 20000 இந்திய தொழிலாளர்களும் வரவுள்ளனர் // முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!

இந்திய இராணுவக் குழு இலங்கை வரவுள்ளதுடன், 20000 இந்திய தொழிலாளர்களும் வரவுள்ளனர்..!
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடி க்கப்பட்ட விதம் குறித்து கற்பதற்காக இந்திய இராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னர் பங்களாதேஸின் ராணுவக்குழு ஒன்று இலங்கை வந்திருந்ததாக, இராணுவ த்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக பயன் படுத்தப்பட்ட வியூகங்கள் [...]

நிருபமராவ் செட்டிகுள நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்வார் // இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது - ஜே.வி.பி விசனம்..!

நிருபமராவ் செட்டிகுள நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்வார் // இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது – ஜே.வி.பி விசனம்..!

நிருபமராவ் செட்டிகுள நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்வார்..!
கொழும்புவரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமராவ் செப்டம்பர் முதலாம் திகதி வவுனியாவிற்கு வரவுள்ளார்  இத் தகவலை வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி எம் எஸ் சாள்ஸ் தெரிவித்தார் வவுனியா வரவுள்ள இவர் செட்டிகுளத்தில் உள்ள வன்னியிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோர் வசிக்கும் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் ஆராயும் பொருட்டு இந்திய வெளிவிவகார [...]

ஆசியாவிலேயே வலுவான நாடாக இலங்கை உள்ளது – ஜனாதிபதி // சித்திரவதைக்குள்ளான பெண்ணுக்கு 4 மணிநேர சத்திரசிகிச்சை..!

ஆசியாவிலேயே வலுவான நாடாக இலங்கை உள்ளது – ஜனாதிபதி // சித்திரவதைக்குள்ளான பெண்ணுக்கு 4 மணிநேர சத்திரசிகிச்சை..!

ஆசியாவிலேயே வலுவான நாடாக இலங்கை உள்ளது – ஜனாதிபதி..!
ஆசியாவிலேயே அரசியல் சீரழிவற்ற வலுவான ஸ்திரத்தன்மை மிக்க நாட்டைக் கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில் தெரிவித்தார். “நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். நீங்கள் மக்கள் சேவைக்காக நியமனம் பெற்றிருக்கும் பிரதிநிதிகள். நாமெல்லோரும் மக்கள் சேவையாளர் களன்றி பொது மக்களை நிர்வகிக்கும் அதிகாரிகளல்லர் என்றும் ஜனாதிபதி கூறினார்.  ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கத்தின் 28 வது வருடாந்த பொதுக் கூட்டம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு [...]

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவிகளை வழங்க வேண்டும் – ஐ.தே.கட்சி // யாழ்ப்பாணத்திலிருந்து 36 பெண் சாரணர்கள் இன்று மலேசியா பயணம்..!

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவிகளை வழங்க வேண்டும் – ஐ.தே.கட்சி // யாழ்ப்பாணத்திலிருந்து 36 பெண் சாரணர்கள் இன்று மலேசியா பயணம்..!

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவிகளை வழங்க வேண்டும் – ஐ.தே.கட்சி..!
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவிகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு இந்தியா ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளதாகவும், அனைத்து [...]

இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளனர் - ஐக்கிய நாடுகள் செயலகம் // வெள்ளிமுள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு..!

இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளனர் – ஐக்கிய நாடுகள் செயலகம் // வெள்ளிமுள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு..!

இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளனர்  – ஐக்கிய நாடுகள் செயலகம்..!
இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளதாக அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலகம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் பல வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தவர்களே யுத்தம் முடிவுற்றபின் இவ்வாறு மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றனர் என ஐ.நா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தென்னிந்தியாவில் [...]

சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு  ஆதரவு வழங்கும் // செட்டிக்குளத்தில் மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது..!

சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் // செட்டிக்குளத்தில் மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது..!

சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு  ஆதரவு வழங்கும்..!
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இலங்கையின் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அரசியல் உயர்பீடத்தின் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஜனாதிபதி ஒருவர் 3 முயை ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு புதிய அரசியலமைப்பு வழிசெய்யவுள்ளது.  ஏற்கனவே அரசியலமைப்பு மாற்றத்திற்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பற்றாக்குறையாக இருந்த நிலையில் 6 ஆசனங்களை நாடாளுமன்றில் கொண்டுள்ள சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்க [...]

ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ரிஎன்ஏ பத்திரிகைகளில் வீரவசனம். மறைவில் அரசாங்கத்திடம் தங்கட அலுவல்கள் கேட்பார்கள்” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்..!

ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ரிஎன்ஏ பத்திரிகைகளில் வீரவசனம். மறைவில் அரசாங்கத்திடம் தங்கட அலுவல்கள் கேட்பார்கள்” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே நிர்வாக அலகான வவுனியா நகரசபை தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ளது பற்றியும் அந்நகரசபையில் இடம்பெற்ற நிதி நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியும் விரிவான ஒரு அறிக்கை வவுனியா நகரசபையின் சர்வகட்சி உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்டு வெளியாகி இருந்தது. இவ்வறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான   முன்னாள் வவுனியா மேயரும் தற்போதைய வவுனியா நகரசபையின் புளொட் அமைப்பின் உறுப்பினருமான ஜி ரீ லிங்கநாதன் ஓகஸ்ட் 2ல் ‘தேசம்நெற்’க்கு வழங்கிய நேர்காணல்.
வவுனியா நகரசபை தொடர்பாக ‘தேசம்நெற்’இல் [...]

தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில் – புளொட் தலைவர்  சித்தார்த்தன் // மன்னாரில் இனம்தெரியாத சடலமொன்று பொலிஸாரினால் மீட்பு..!

தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில் – புளொட் தலைவர் சித்தார்த்தன் // மன்னாரில் இனம்தெரியாத சடலமொன்று பொலிஸாரினால் மீட்பு..!

தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில் – புளொட் தலைவர்  சித்தார்த்தன்..!
தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றியமான தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில் நடைபெறவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.  மட்டக்களப்பில் நடைபெற்ற 5ஆவது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர 8 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் எதிர்வரும் 11ஆம் திகதி  6ஆவது அரங்கம் இடம்பெறவுள்ளது.
மன்னாரில் [...]

இலங்கையர்கள் 5000 பேருக்கு கொரியாவில் வேலை வாய்ப்பு // இலங்கையில் வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது - டபிள்யூ.ஏ.சீ பெரேரா..!

இலங்கையர்கள் 5000 பேருக்கு கொரியாவில் வேலை வாய்ப்பு // இலங்கையில் வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது – டபிள்யூ.ஏ.சீ பெரேரா..!

இலங்கையர்கள் 5000 பேருக்கு கொரியாவில் வேலை வாய்ப்பு..!
இம்முறை கொரியாவில் வேலைவாய்ப்புப் பெறுவதற்காக 5000 இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. நாடு முழுவதிலுமிருந்து கொரியா வேலை வாய்ப்புக்காக கிடைக்கப்பெற்றுள்ள  29732 விண்ணப்பங்கறில் இருந்து குறிப்பிட்ட 5000 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர். கொரியாவில் பணியாற்றுவதற்காக கடந்த 3 நாட்களில் நாடு முழுவதிலுமிருந்து பல மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகமானோர் கொரியாவில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாகப் பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய [...]

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ‐ ஜாதிக ஹெல உறுமய // பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு மது விற்பனை அனுமதி வழங்கப்படவில்லை..!

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ‐ ஜாதிக ஹெல உறுமய // பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு மது விற்பனை அனுமதி வழங்கப்படவில்லை..!

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ‐ ஜாதிக ஹெல உறுமய..!
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக குமரன் பத்மநாதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக குமரன் பத்மநாதனின் சொத்துக்களைப் பயன்படுத்துவதனை விடவும், புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்ப்பது மிகவும் இன்றியமையாததென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவும் பிள்ளையானும் பிளவடைந்து வந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் பின்பற்றிய அதே [...]

எதிர்வரும் மாதத்தில் மூன்று நாட்கள் கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது // மரமுந்திரிகை உற்பத்தியை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை..!

எதிர்வரும் மாதத்தில் மூன்று நாட்கள் கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது // மரமுந்திரிகை உற்பத்தியை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை..!

எதிர்வரும் மாதத்தில் மூன்று நாட்கள் கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது..!
முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர். டி சில்வா தலைமையிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு எதிர்வரும் மாதத்தில் கிளிநொச்சியில் விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதத்தில் மூன்று நாட்கள் கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது. செப்படம்பர் மாதம் 17ம், 18ம் மற்றும் 19ம் திகதிகளில் கிளிநொச்சியில் மீள் குடியேற்றப்பட்ட கிராமங்களில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.எம். சமரக்கோன் தெரிவித்துள்ளார். ஒன்றுகூடலைப் போன்று தகவல்கள் [...]

தம்புள்ளை தொழிற்பயிற்சி நிறுவனத்தக்கு ஜனாதிபதி தடீர் விஜயம் // எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி வரையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது..!

தம்புள்ளை தொழிற்பயிற்சி நிறுவனத்தக்கு ஜனாதிபதி தடீர் விஜயம் // எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி வரையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது..!

தம்புள்ளை தொழிற்பயிற்சி நிறுவனத்தக்கு ஜனாதிபதி தடீர் விஜயம்..!
தம்புள்ளை தொழிற்பயிற்சி நிறுவனத்தக்கு தடீர் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாணவர்களுடன் கலந்துரையாடினார். தம்புள்ளை ரஜ மகா விகாரையில் இயங்கும் பிரஸ்தாப தொழிற்பயிற்சி நிறுவனம் ஜனாதிபதி தொழில் அமைச்சராக இருந்தபொத 1995 இல் அவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். தம்புள்ளை விகாராதிபதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேர ர்மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் பெரேரா ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி [...]

சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத்தயார் - பாலித கொஹணே // ஜனாதிபதி நிதியத்துக்கு கடந்த மூன்று மாதத்தில் அபிவிருத்தி லொத்தர் சபை 254 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது..!

சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத்தயார் – பாலித கொஹணே // ஜனாதிபதி நிதியத்துக்கு கடந்த மூன்று மாதத்தில் அபிவிருத்தி லொத்தர் சபை 254 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது..!

சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத்தயார் – பாலித கொஹணே..!
சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத்தயார் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும், இந்த அனுபவங்களையும் திறமைகளையும் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார். கடற்கொள்ளையர்கள் மற்றும் பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கையின் கடற் பரப்பு பாதுகாக்கப்பட்டு [...]

வெளிநாடுகளின் உதவிகளுடனேயே இலங்கையில் இருந்து அதிக அளவிலான அகதிகள் வெளியேறுகின்றனர் // எம். வி. சன். கே. கப்பல் மூலம் கனடா சென்றுள்ள தமிழர்களுக்கு இலவச தொலைத் தொடர்பு வசதி..!

வெளிநாடுகளின் உதவிகளுடனேயே இலங்கையில் இருந்து அதிக அளவிலான அகதிகள் வெளியேறுகின்றனர் // எம். வி. சன். கே. கப்பல் மூலம் கனடா சென்றுள்ள தமிழர்களுக்கு இலவச தொலைத் தொடர்பு வசதி..!

வெளிநாடுகளின் உதவிகளுடனேயே இலங்கையில் இருந்து அதிக அளவிலான அகதிகள் வெளியேறுகின்றனர்..!
வெளிநாடுகளின் உதவிகளுடனேயே இலங்கையில் இருந்து அதிக அளவிலான அகதிகள் செல்வதாக, கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து அதிகள் சட்டவிரோதமாக வெளியேராத வகையில், இலங்கையின் கடற்படையினர் கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கையில் இருந்து சட்ட ரீதியான ஆவணங்களுடன் வெளிநாடு ஒன்றுக்கு பயணித்து, வெ ளிநாட்டு முகவர் ஒருவரின் உதவியுடனேய அகதிகளாக படகில் அல்லது கப்பலில் பயணிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் [...]

முன்னாள் போராளிகளுக்கு களுத்துறையில் கைத்தொழில் பயிற்ச்சி..!

முன்னாள் போராளிகளுக்கு களுத்துறையில் கைத்தொழில் பயிற்ச்சி..!

முன்னாள் போராளிகளுக்கு களுத்துறையில் கைத்தொழில் பயிற்ச்சி..!
புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் போராளிகளுக்கு தொழில் பயிற்ச்சியை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் கடந்த புதன் கிழமை களுத்துறை பயாகல கைத்தொழில் பயிற்ச்சி நிலையத்தில் 60 ட முன்னாள் போராளிகளுக்கு பயிற்ச்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தப் பயிற்ச்சி நெறி இரண்டு வாரகாலமாகும்.மேசன் தச்சன்,வெல்டின் மற்றும் மின்சார வேலைகள் சம்மந்தமாக சித்தாந்தம் மற்றும் செய்கைப்பயிற்ச்சியும் வழங்ப்படும். வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கத்தின் அனுசரனையுடன் வழங்கி வரும் இப்பயிற்ச்சி நெறியின் முடிவில் [...]

9ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் : சத்தியராஜன் ( PLOTE மீரான் மாஸ்ட்ர்)

9ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் : சத்தியராஜன் ( PLOTE மீரான் மாஸ்ட்ர்)

என் நண்பனின் தாயார் திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் சார்பாக “சகல அடக்குமுறை தனை உடைத்தெறிவோம்” என்று தன் தகப்பனார் கே.ஏ. சுப்பிரமணியம் வளர்ப்பில்… சந்ததியாரை அரசியல் ஆசானாகக் கொண்டு… 1976 இலில் மாணவப் பராயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியை முதன்மைப் படுத்தி தன் சகோதரர்கள், தோழர்கள் துணைகொண்டு “சிறுபொறி”  கையெழுத்து பத்திரிகையை வெளியிட்டு… மாணவ தோழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி… புதியபாதை சுந்தரம் வழியில்… அடக்கப்பட்ட மக்களின் விடியலுக்காகப் புறப்பட்டு…   இலங்கை இராணுவத்தினால் சிறை பிடிக்கப்பட்டு… என் நண்பன் சத்தியராஜ் யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து எனது கல்வி ஆசானும், “சிறுபொறி”  கையெழுத்து பத்திரிகையின் ஆசிரியர் குழுவை சேர்ந்த தோழரை மணமுடித்த தன் அன்புச் சகோதரியின் [...]

ஜனாதிபதிக்கும் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் விசேட சந்திப்பு சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது // நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சகல அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிகள் - ஜயந்த தனபால..!

ஜனாதிபதிக்கும் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் விசேட சந்திப்பு சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது // நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சகல அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிகள் – ஜயந்த தனபால..!

ஜனாதிபதிக்கும் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் விசேட சந்திப்பு சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடான சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் கடசியின் அதி உயர் பீடத்திற்கு தெரியப்படுத்தப்படும் என ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் மக்களுக்கு குந்தகம் ஏற்படாத எந்தவொரு யோசனைத் திட்டத்தையும் தமது கட்சி எதிர்க்காது என அவர் [...]

மற்றுமொரு கப்பல் வருவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை – கனடா // மீள்குடியேற்றப் பணிகள் குறித்து இந்தியா திருப்பதி - பசில் ராஜபக்ஷ..!

மற்றுமொரு கப்பல் வருவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை – கனடா // மீள்குடியேற்றப் பணிகள் குறித்து இந்தியா திருப்பதி – பசில் ராஜபக்ஷ..!

மற்றுமொரு கப்பல் வருவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை – கனடா..!
இலங்கை சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை தாங்கிய மற்றுமொரு கப்பல் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான சாட்சியங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என கனடா அறிவித்துள்ளது. எம்.வீ சன் சீ கப்பலின் மூலம் கனடாவில் புகலிடம் கோரிய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மற்றுமொரு கப்பல் கனடாவை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைச செய்யப்பட்டவர்கள் எதனையும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் பயணித்த [...]

வடக்கில் 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி முதல் கட்டமாக 1000 வீடுகள் மூன்று மாதத்துக்குள் கையளிக்கப்டும் // பணிப்பெண் சித்திரவதை தொடா;பில் விசாரணைகள் ஆரம்பம்!

வடக்கில் 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி முதல் கட்டமாக 1000 வீடுகள் மூன்று மாதத்துக்குள் கையளிக்கப்டும் // பணிப்பெண் சித்திரவதை தொடா;பில் விசாரணைகள் ஆரம்பம்!

வடக்கில் 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி முதல் கட்டமாக 1000 வீடுகள் மூன்று மாதத்துக்குள் கையளிக்கப்டும்..!
இலங்கையில் கடந்த 30 அண்டுகளாக நடை பெற்ற பயங்கரவாத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடமாகான மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றி அவர்களது பிரதேசங்களில் 51000 வீடுகள் அமைத்துக் கொடுத்து இயல்பு வாழ்கையை மேன்படுத்துவதற்க்கு தேவையான பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக முற்றாக வீடுகளை இழந்த காணிகள் அற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த [...]

எதிர்காலத்தில் மக்கள் மனிதாபிமானப் பணிகளையே விரும்புவர் – ஜனாதிபதி // எம்.வி.சன் சீ கப்பலில் கனடாவை வந்தடைந்த 492 இலங்கைத் தமிழர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு - இலங்கை உயர்ஸ்தானிகர்..!

எதிர்காலத்தில் மக்கள் மனிதாபிமானப் பணிகளையே விரும்புவர் – ஜனாதிபதி // எம்.வி.சன் சீ கப்பலில் கனடாவை வந்தடைந்த 492 இலங்கைத் தமிழர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு – இலங்கை உயர்ஸ்தானிகர்..!

எதிர்காலத்தில் மக்கள் மனிதாபிமானப் பணிகளையே விரும்புவர் – ஜனாதிபதி..!
நாட்டில் இவ்வளவு காலம் இடம்பெற்ற அரசியலுக்குத் தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் மக்கள் மனிதாபிமானப் பணிகளையே விரும்புவர் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கண்டி மாநகர சபை உறுப்பினர்களை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,”இனிவரும் காலங்களில் இவ்வாறான அரசியலை மேற்கொள்ள நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.அரசியலிலிருந்து வேறுபட்டு மனிதாபிமான ரீதியில் கடமையாற்றுவோருக்கே எதிர்காலத்தில் நாட்டு மக்கள் ஆதரவளிப்பர். [...]

 18 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரன உயர் தர பரிட்சைக்கு தோற்றும் வாய்ப்பு // வெரலகம குடிநீர் விநியோகத் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்

18 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரன உயர் தர பரிட்சைக்கு தோற்றும் வாய்ப்பு // வெரலகம குடிநீர் விநியோகத் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்

18 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரன உயர் தர பரிட்சைக்கு தோற்றும் வாய்ப்பு..!
கடந்த ஆண்டு முடிவுக்குக் கொன்டு வந்த மனிமபிமான படைநடவடிக்கையின் போது எல்ரிரிஈ இயக்க முன்னாள் உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 12000 பேர் அரசாங்த்திடம் சரணடைந்தனர். இவர்களில் 3000 பேர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.பலவந்தமாகவும் தவறான வழிநடத்தலினாலும் இயக்கங்களில் இவ்வாறு இணைக்கப்ட்டதனால் தமது எதிர்கால கல்வியைத்த தொடர முடியாது இடைநடுவில் கைவிட்ட கல்வியை மீட்டும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் ஏற்பாடு [...]

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களை  அடையாளம் காண்பதற்கான துரித நடவடிக்கை - கிளிநொச்சி அரசாங்க அதிபர் // எம்.வி.சன் சீ கப்பலில் கனடாவை வந்தடைந்துள்ளோர் எவ்வித கடத்தல்களையும் மேற்கொள்ளவில்லை – கனடா பாதுகாப்புப் பிரிவினர்..!

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பதற்கான துரித நடவடிக்கை – கிளிநொச்சி அரசாங்க அதிபர் // எம்.வி.சன் சீ கப்பலில் கனடாவை வந்தடைந்துள்ளோர் எவ்வித கடத்தல்களையும் மேற்கொள்ளவில்லை – கனடா பாதுகாப்புப் பிரிவினர்..!

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களை  அடையாளம் காண்பதற்கான துரித நடவடிக்கை – கிளிநொச்சி அரசாங்க அதிபர்..!
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களை  அடையாளம் காண்பதற்கான துரித நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கும் வாகனங்களின் உhpமையாளா;கள் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவா; குறிப்பிட்டாh;. கடந்த [...]

வவுனியா நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி // வடக்கு உட்பட 5 மாவட்டங்களில் நீர்ப்பாசன வசதிகள்..!

வவுனியா நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி // வடக்கு உட்பட 5 மாவட்டங்களில் நீர்ப்பாசன வசதிகள்..!

வவுனியா நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி..!
வவுனியா நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள குறித்த உத்தியோகத்தர் முயற்சி மேற்கொண்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் அனுராதபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 45 வயதான குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர், தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிப்யைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த இந்த உத்தியோகத்தரின் தாடைப் [...]

மன்னார் மாவட்டத்தில் 145 குடும்பங்களே மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளன - பசில் ராஜபக்ஷ // தம்புள்ள விகாரைக்கு ஜனாதிபதி விஜயம்..!

மன்னார் மாவட்டத்தில் 145 குடும்பங்களே மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளன – பசில் ராஜபக்ஷ // தம்புள்ள விகாரைக்கு ஜனாதிபதி விஜயம்..!

மன்னார் மாவட்டத்தில் 145 குடும்பங்களே மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளன – பசில் ராஜபக்ஷ..!
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோரில் மேலும் 145 குடும்பங் களே மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்டக் குழு கூட்டத்தின் போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் இதுவரை 12,180 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. மேலும் 145 குடும்பங்களே மீள் குடியேற்றப்படவுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 30ம் திகதியிலிருந்து மீள் [...]

தவணைக் காலத்தைத் தவிர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது- ஜனாதிபதி // நெடுங்கேணி பலநோக்கு கூட்டுறவுச்சங்க  பஸ் வண்டிகள் ஒலுமடு--நெடுங்கேணி-- வவுனியா சேவையில்..!

தவணைக் காலத்தைத் தவிர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது- ஜனாதிபதி // நெடுங்கேணி பலநோக்கு கூட்டுறவுச்சங்க பஸ் வண்டிகள் ஒலுமடு–நெடுங்கேணி– வவுனியா சேவையில்..!

தவணைக் காலத்தைத் தவிர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது- ஜனாதிபதி..!
தவணைக் காலத்தைத் தவிர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் வேறு எந்த மாற்றங்களும் தற்போதைக்கு ஏற்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் தவணைக்காலத்தை நீடிப்பது குறித்த யோசனைத் திட்டம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகளிடம் [...]

சுவிஸில்  மறுபடியும் பணவேட்டையில் புலிப்பினாமிகள்!!! பொது மக்களுக்கும் புலிப்பினாமிகளுக்கும் - கைகலப்பு..!

சுவிஸில் மறுபடியும் பணவேட்டையில் புலிப்பினாமிகள்!!! பொது மக்களுக்கும் புலிப்பினாமிகளுக்கும் – கைகலப்பு..!

சுவிஸில்  மறுபடியும் பணவேட்டையில் புலிப்பினாமிகள்!!! பொது மக்களுக்கும் புலிப்பினாமிகளுக்கும்: கைகலப்பு!!!!
 
சுவிஸ் பேர்ன் மானிலத்தில்  schwarzenburg எனும் கிராமத்தில் 22.08.2010 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் புலிப்பினாமிகளுக்கும் பொது மக்களுக்கும் கைகலப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது பலவருடங்களாகவும் முக்கியமாக சென்ற வருடம்  முற்பகுதியில் புலிப்பினாமிகள் பொது மக்களிடம் இறுதிப்போர் நடாத்த போவதாக அப்பாவி மக்களிடம்  பெருந்தொகை பணங்களை  பெற்றதை உலகம் அறியும்  இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் கடுமையான தாக்குதலை முகம்கொள்ளமுடியயாத பிரபாகரனும் அவர்களின் சாகாக்களும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து படுவீழ்ச்சியடைந்த சாதாரண புலிகள் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) ‍ சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) ‍ சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்(பாகம் 58) ‍ சித்திறெஜினா..!
மீண்டும் ஒரு இறந்த காலத்திற்குள் என் சிந்தனைகள் விரிகின்றன.. காலம் என்னும் படகில் ஏறி அந்த‌ கடந்த காலத்தை நோக்கி பின்னோக்கி பயணித்தால் அங்கே பல அதிர்ச்சிகளும்.. வேதனைகளும்.. ஆச்சரியங்களும் நிறைந்த பல‌ சம்பவங்களுடன்.. மறைக்கப்பபட்டு காலத்தால் அழிக்கப்பட்ட‌ பல உண்மைகளையும் சந்திக்க நேரிடும்.. அப்படிப்பட்ட‌ சம்பவங்களில் ஒன்றுதான் சுமார் 91 வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாகாணத்திலுள்ள‌ அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அருகாமையிலுள்ள‌ “யூலியன்வாலா” பூங்காவில் பிரிட்டிஸ் இராணுவத்தால் [...]

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சேவை இலங்கைக்கு மிகவும் அவசியம் - அமைச்சர் பெசில் ராஜபக்ஷ // சகல பல்கலைக்கழகங்களிலும் அடுத்தாண்டு முதல் ஆங்கில மொழி மூலமே போதனைகள் - கல்வி அமைச்சர்..!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சேவை இலங்கைக்கு மிகவும் அவசியம் – அமைச்சர் பெசில் ராஜபக்ஷ // சகல பல்கலைக்கழகங்களிலும் அடுத்தாண்டு முதல் ஆங்கில மொழி மூலமே போதனைகள் – கல்வி அமைச்சர்..!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சேவை இலங்கைக்கு மிகவும் அவசியம் – அமைச்சர் பெசில் ராஜபக்ஷ..!
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சேவை இலங்கைக்கு மிகவும் அவசியமானதென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சில விடயங்களில் முறுகல் நிலை காணப்பட்டாலும் உலக அமைப்பு என்ற ரீதியில் இணைந்து செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக [...]

இந்தியப் பிரதிநிதி அடுத்த மாதம் இலங்கை வருவார் - நிருபமா ராவ் // வடக்கில் பொது மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவப் பிரசன்னம் படிப்படியாக அப்புறப்படுத்தப்படும் - பாதுகாப்புச் செயலாளர்..!

இந்தியப் பிரதிநிதி அடுத்த மாதம் இலங்கை வருவார் – நிருபமா ராவ் // வடக்கில் பொது மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவப் பிரசன்னம் படிப்படியாக அப்புறப்படுத்தப்படும் – பாதுகாப்புச் செயலாளர்..!

இந்தியப் பிரதிநிதி அடுத்த மாதம் இலங்கை வருவார் – நிருபமா ராவ்..!
 
இலங்கையில் போரினால் பாதிக்பப்பட்ட தமிழ் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதி அடுத்த மாதத் துவக்கத்தில் இலங்கை செல்லவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார். இலங்கையில் [...]

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களையும் அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை - ஒஸ்ரின் பெர்னாண்டோ // கண்ணிவெடி அகற்றும் பணிகளை இந்தியா தொடரும் - அசோக் கே.காந்தா..!

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களையும் அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை – ஒஸ்ரின் பெர்னாண்டோ // கண்ணிவெடி அகற்றும் பணிகளை இந்தியா தொடரும் – அசோக் கே.காந்தா..!

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களையும் அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை – ஒஸ்ரின் பெர்னாண்டோ..!
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களையும் அப்புறப்படுத்து வது சாத்தியமில்லையென்றும் ஆனால், இராணுவ நிலைகளை மீள ஒழுங்கமைக்க வேண்டுமென்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இராணுவத்தை கொழும்புக்கு மீளப் பெற முடியாதென்றும், வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குப் படையினர் அவசியமென்றும் தெரிவித்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, இது விடயத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நிலைப்பாட்டுக்குத் தாம் உடன்படுவதாகவும், கற்றுக் [...]

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் – ரணில் // கிளிநொச்சி மாவட்ட மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகள் மீளவும் கையளிக்கப்பட்டவுள்ளது..!

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் – ரணில் // கிளிநொச்சி மாவட்ட மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகள் மீளவும் கையளிக்கப்பட்டவுள்ளது..!

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் – ரணில்..!
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டுமென பாராளுமன்றில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் காலியில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் அஜித் குமார ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக குற்றம் [...]

தமிழர் பூர்வீகமான வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை - கோத்தபாய ராஜபக்ஸ // மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை மீளமைப்பு..!

தமிழர் பூர்வீகமான வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை – கோத்தபாய ராஜபக்ஸ // மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை மீளமைப்பு..!

தமிழர் பூர்வீகமான வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை – கோத்தபாய ராஜபக்ஸ..!
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர் பூர்வீகமான வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மறுத்துள்ள இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ வன்னியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிடங்களே  அங்கு அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழவினால் மேற்கொள்ளப்பட்ட இன்றைய விசாரணையில் சாட்சியமளிக்கையிலேயே  அவர் இப்படி கூறினார். சர்வதேச கற்கைகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இன்று [...]