;
Athirady Tamil News

இலங்கை கடற்படையின் செயல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறி வன்மத்தின் வெளிப்பாடே..! சீமான் கண்டனம்

0

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழ்நாட்டு கடற்றொழிளார்களையும் , அபகரிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கை இனவாத அரசினுடைய கடற்படை கடந்த 14.10.2023 அன்று அதிகாலையில் இராமேஸ்வரத்தை சேர்ந்த 27 கடற்றொழிளார்களை அத்துமீறி கைது செய்திருப்பதோடு, அவர்களது 5 விசைப்படகுகளையும் அபகரித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீதான இனவெறி
இது தொடர்பாக மேலும் அந்த அறிக்கையில், “இனவெறி சிங்கள கடற்படையால் தமிழ்நாட்டு கடற்றொழிளார்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படும் கொடுமைகள் தொடர்ந்து வருவது இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.

தமிழக டற்றொழிளார்களின் படகுகளைப் பறித்துக்கொள்வது, வலைகளை அறுப்பது, படகுகளைச் சேதப்படுத்துவது, உடைமைகளைப் பறித்துக்கொள்வது, கடற்றொழிளார்களைச் சிறைப்பிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் ஈவிரக்கமற்ற வன்முறை தாக்குதல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறி வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கான கடற்றொழிளார்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளதோடு, 800க்கும் மேற்பட்ட கடற்றொழிளார்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக கடற்றொழிளார்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், இலங்கை இராணுவத்தின் இக்கோரத் தாக்குதல்களுக்கு இதுவரை இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை.

தமிழ்நாட்டு கடற்றொழிளார்கள்
எவ்வித எதிர்வினையும் ஆற்றியதுமில்லை. பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தமிழக கடற்றொழிளார்களின் மீதான தாக்குதல்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது.

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதுவதை தவிர, எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப்போக்கினாலேயே தமிழ் கடற்றொழிளார்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர் கதையாகிவிட்டது.

பாஜகவும், திமுகவும் தமிழக கடற்றொழிளார்கள் அழிக்கப்படுவதை கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றன. கூட்டணி பலத்துடன் சேர்த்து 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை திமுக வைத்திருந்தும் அதன் மூலம் ஒரு சிறு நன்மையைக்கூட தமிழ்நாட்டு கடற்றொழிளார்களை காக்க இதுவரை செய்யவில்லை என்பது வரலாற்றுப் பெருந்துரோகம்.

ஆகவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 கடற்றொழிளார்கயும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக அரசு கட்சத்தீவினை மீட்போம் என வழக்கமான வெற்று முழக்கத்தை வைக்காமல், இனியாவது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்தி கட்சத்தீவினை மீட்க உறுதியான நடவடிக்கை எடுத்து தமிழக கடற்றொழிளார்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.