;
Athirady Tamil News

கிழக்கு ஆளுநர் வியாபாரத்துக்காக வடக்கு கடற்தொழிலார்களை அடகுவைக்க வேண்டாம்: அன்னராசா

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தியாவில் தனது வியாபாரத்தை தக்க வைக்க வடபகுதி கடற்தொழிலாளர்களை அடகு வைக்க வேண்டாம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் நேற்று (28.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடற்தொழிலார்களின் பிரச்சினை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு ஆளுநர் செந்தில் இந்திய தொலைக்காட்சி எமது வட மாகாண கடற் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் செவ்வியொன்று வழங்கியுள்ளார்.

அதாவது இந்தியா கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரவில்லை எனவும் மீன்களை பிடிக்கும் போது தற்செயலாக இலங்கை கடற்பரப்புக்குள் சென்று விடுகிறார்கள் என அவர்களின் வருகையை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார்.

அவரின் கருத்தை கண்டிப்பதோடு கிழக்கு ஆளுநருக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறோம் நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் என்பதை சொல்லாமல் சொல்லுகிறீர்கள்.

இந்தியாவில் உங்களுக்கு பல வியாபாரங்கள் உள்ள நிலையில் ஊடக நிறுவனங்களுக்கும் முதலீடு செய்து உள்ளீர்கள் என அறியக் கிடைக்கும் நிலையில் உங்கள் வியாபாரத்தை பாதுகாப்பதற்காக எமது கடற்தொழிலார்களை அடகு வைக்க வேண்டாம்.

வியாபாரங்கள்
இந்தியா எல்லை தாண்டிய கடற்தொழிலார்களை பிரச்சினை சுமார் 12 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் கிழக்கு ஆளுநர் செந்தில் ஒரு நாளிலேனும் எமது கடற்தொழிலார்களின் பிரச்சினை என்ன என கேட்டிருக்க மாட்டார்.

முடிந்தால் அவருக்கு நாங்கள் ஒன்றை கூறுகிறோம். முதலில் யாழ்ப்பாணம் வாருங்கள் எமது கடற்தொழிலார்களை அழைத்து உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என கேளுங்கள் முடிந்தால் அதனை தீர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.

அதை விடுத்து உங்கள் வியாபாரங்களை தொடர்ந்து இந்தியாவில் மேற்கொள்வதற்கு எமது கடற்தொழிலார்களை பலிக்கடா ஆக்க வேண்டாம் என்ற செய்தியை அவருக்கு கூற விரும்புகிறோம்”என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.