;
Athirady Tamil News

பாடசாலைகள் மீது குண்டு வீச்சு… இஸ்ரேலுக்கு வலுக்கும் கண்டனம்

0

அல் ஃபகுரா பள்ளி மீது இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மனிதத்தனமையற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டம்
காஸா பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதல்களையும் ஐக்கிய அரபு அமீரகம் கண்டித்துள்ளது. அத்துடன் காஸா பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் வசதிகளை குறிவைப்பதை ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

மேலும், பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதும், அமைப்புகள் மற்றும் குடிமக்கள் வசதிகளுக்கு முழுப் பாதுகாப்பையும் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சரகம் வலியுறுத்தியுள்ளது.

மட்டுமின்றி, பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான, நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை உடனடி, பாதுகாப்பான, நிலையான மற்றும் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யவும் கோரிக்கை வைத்துள்ளது.

நிலைமை மோசமடைவதைத் தவிர்ப்பதற்கான
பொதுமக்கள் மற்றும் சிவில் நிறுவனங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி, மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடி போர் நிறுத்தம் அவசியம் எனவும் அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், சர்வதேச உடன்படிக்கைகள் உட்பட சர்வதேச சட்டத்தின் படி, போரின் போது அப்பாவி பொதுமக்கள் இலக்காகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் அழைப்பு விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.