;
Athirady Tamil News

கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!

0

கோவை குனியமுத்தூர் பகுதியில் 88 ஆவது வார்டில் பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் வேலையை புறக்கணித்து 88-ஆவது வார்டு அலுவலகம் முன்பு புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்திக்க சென்றபோது மாநகராட்சி ஆணையரை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவருடன் வந்த சக உதவி ஆணையர்,துணை ஆணையர் வாகனங்கள் முன்பு படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தூய்மைப் பணியாளர்கள் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கூறிய நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.