கல்முனையை துண்டு துண்டாக உடைக்க நான் தயார்! எச்.எம்.எம். ஹரீஸ் பகிரங்கம்
கல்முனை மக்களின் அபிவிருத்திக்காக கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார் எனவும் இதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H.M.M. Harees) கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்முனை (Kalmunai) மாநகர கேட்போர் கூடத்தில் இன்று (18.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“நான் பயமின்றி குறிப்பிடுகின்றேன். உலகமே நாடு பிரியக் கூடாது என நிற்கின்றது. ஆனால், நான் இந்த நகரத்தின் மக்கள் தலைவனாக சொல்லுகின்றேன், கல்முனையை நாங்கள் பிரிப்போம்.
கொழும்பு மாநகரம்
இதற்கு தைரியம் உள்ள தமிழ் தலைவர்கள் முன்வரட்டும். கொழும்பு மாநகரம் இருக்கின்றது. அங்கு இருக்கின்ற வெள்ளவத்தை மற்றும் தமிழ் பிரதேசங்களை வைத்து அங்குள்ள மாநகரத்தை தமிழர்களுக்காக பிரித்துக் கொடுப்பதற்கு ஆக குறைந்தது ஒரு முகநூல் (Facebook) பதிவை ஏனும் இவர்களால் பதிவிட முடியுமா?
கல்முனையில் உள்ள விசேட அம்சமே அங்கு நான்கு சமூகங்கள் இருப்பது தான். மேலும், அவர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும்.
எனவே, தமிழ் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் நாங்கள் இணைந்து இந்த மக்களுக்காக பயணிக்க வேண்டுமென நான் அழைப்பு விடுக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.