பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி
பாகிஸ்தானில் மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் மினி டிரக் ஒன்று சனிக்கிழமை கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் இருந்து பஞ்சாபின் குஷாப் மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. இந்த டிரக் குஷாபின் பென்ச் பிர் பகுதியில் ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது.
இதில் 5 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூலி வேலைக்காக குஷாப் நகருக்கு வந்து கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதிக வேகம் காரணமாகவே டிரக் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.