;
Athirady Tamil News

ரணிலின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஐ.தே.கவின் புதிய திட்டம்

0

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் (Presidential election) மற்றும் பொதுத்தேர்தலை (General election) 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு நாடாளுமன்றில் யோசனை திட்டத்தை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் (Colombo) இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் பல அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கட்சித் தலைவர்கள் ஒத்துழைப்பு
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நாட்டின் கல்வித்துறை பொதுச் சேவைகள் என்பன சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் இவ்வாறான ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நாட்டின் தற்போதைய தேவை கிடையாது.

நாடாளுமன்றில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் (Sajith Premadasa) இந்த யோசனை திட்டத்தை முன்வைக்க வேண்டும். அதேபோல் அனுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடன் சுமையில் இருந்து விடுவிக்கும் இயலுமை
அனைத்து தரப்பினரும் இணைந்து அதிபரின் ஆட்சிக்காலத்தை குறைந்தது 2 வருடங்களுக்காவது நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் நாடாளுமன்ற தேர்தலையும் 2 வருடங்களுக்கு பிற்போடுமாறு யோசனை முன்வைக்கின்றேன். கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டை கடன் சுமையில் இருந்து விடுவிப்பதற்கும் நாட்டை பொருளாதார மீட்சிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான இயலுமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமே (Ranil Wickremesinghe) காணப்படுகின்றது.“ என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.