;
Athirady Tamil News

நீர்கொழும்பில் 30 வெளிநாட்டவர்கள் கைது

0

நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வைத்து 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 பேரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.

கைப்பற்றப்பட்ட கணினிகள்
கொச்சிக்கடை – பல்லம்சேன மற்றும் பலகதுரே ஆகிய பிரதேசங்களில் உள்ள இரண்டு விருந்தகங்களில் தங்கியிருந்து இந்த நிதி மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நிதி மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட 10 கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இதேவேளை சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதால், அது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கையின் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

குறித்த எச்சரிக்கையில், பேஸ்புக், வட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றின் ஊடாக தகவல்களை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

குறிப்பாக தேசிய மற்றும் மத ரீதியான பண்டிகைக்காலங்களை இலக்கு வைத்து இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றன. இதற்காக பிரபலமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய பல வர்த்தக நாமங்கள் போலியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

களவாடப்படும் தனிப்பட்ட விபரங்கள்

அறியாத நபர்களிடமிருந்து வருகின்ற குறுஞ்செய்திகளில் இருக்கின்ற லின்க்களை மக்கள் க்ளிக் செய்வதன் மூலம், இணைய மோசடிக்காரர்கள் பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைக் களவாடுகின்றனர்.

அவற்றைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபடுவதுடன், சில தரப்பினர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றிருப்பதாக அல்லது அன்பளிப்புகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகக் கூறி, அவற்றைப் பெற்றுக் கொள்ள ஒருதொகை பணத்தை வைப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியும் நிதி மோசடி செய்கின்றனர்.

அறியாத நபர்களிடமிருந்து கிடைக்கின்ற இவ்வாறான குறுஞ்செய்திகளை திறப்பதற்கு முன்னர், அவர்கள் குறிப்பிடுகின்ற நிறுவனங்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்குச் சென்றோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ, தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.