வெளிநாடொன்றில் பணயக்கைதிகளான விமானப் பயணிகள்: பிரித்தானியா மீது வழக்குத் தொடுக்க முடிவு
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/07/Screenshot-2024-07-01-184929.jpg)
குவைத்தில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணயக் கைதிகளாக
குவைத்தில் 1990ல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் தற்போது 94 பேர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரகவும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராகவும் சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
367 பயணிகளுடன் மலேசியாவுக்கு புறப்பட்டு சென்ற இந்த விமானமானது ஆகஸ்டு 2ம் திகதி குவைத்தில் தரையிறங்கவும், அதிலிருந்து 149 பேர்களை வெளியேற்றி, பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
ஈராக்கின் அப்போதைய ஜனாதிபதி சதாம் உசேன் குவைத்தின் மீது படையெடுத்த சில மணி நேரங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. நான்கு மாதங்களுக்கும் மேலாக அந்த 149 பேர்கள் மேற்கத்திய நாடுகளின் தாக்குதலுக்கு எதிராக ஈராக்கிய ராணுவத்தால் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது பிரித்தானிய அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரகவும் லண்டனில் வழக்குத் தொடர்ந்துள்ள 94 பேர்கள், தாங்கள் அனுபவித்த துன்பங்களை பட்டியலிட்டுள்ளனர்.
படையெடுப்பு குறித்து லண்டனுக்கு தகவல்
உடல், உள ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், அதன் பாதிப்புகள் தற்போதும் தாங்கள் அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பிரித்தானிய அரசாங்கமும் அந்த விமான நிறுவனமும் குவைத்தின் மீது ஈராக் படையெடுத்துள்ளதை அறிந்திருந்தும் தரையிறங்க அனுமதித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மட்டுமின்றி, தங்களை குடிமக்களாக நடத்தப்படாமல் வெறும் வணிக, அரசியல் ஆதாயத்திற்காக அடகு வைக்கும் பொருளாக நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, 2021ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் முன்னரே குவைத்துக்கான பிரித்தானிய தூதர் ஈராக்கின் படையெடுப்பு குறித்து லண்டனுக்கு தகவல் பகிர்ந்துள்ளதாகவும்,
ஆனால் விமானிக்கு அந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் வெளிச்சத்துக்கு வந்தது. அத்துடன், அந்த விமானத்தை பயன்படுத்தி ஈராக் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கவும் பிரித்தானியா முயன்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
ஆனால் அதை பிரித்தானியா ஒப்புக்கொள்ள மறுத்தது. அத்துடன் தற்போதைய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரித்தானிய அரசாங்கம் கருத்துச் சொல்ல மறுத்துள்ளது. இதனிடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் மீது வைக்கபப்ட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மொத்தமாக மறுத்துள்ளது.