;
Athirady Tamil News

யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்

0

யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

அராலி மத்தி குமுக்கன் குள வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தரை, முச்சக்கர வண்டியில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மறித்து அவர்மீது வாளால் வீசியது.

வாள்வெட்டு காயம்
இதன்போது, அவர் விலகிய நிலையில், குறித்த வெட்டு அவரது மோட்டார் சைக்கிள் மீது சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த குழு அவரது மோட்டார் சைக்கிள் மீது கம்பிகளாலும் வாளாலும் தாக்குதல் நடாத்திவிட்டு சென்றது.

இவ்வாறு சென்ற குறித்த கும்பல் அராலி மத்தி மேல்வீட்டடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மறித்து தாக்குதல் நடாத்தியது.

இதன்போது, குறித்த இளைஞனின் கையில் வாள்வெட்டு காயமும், உடலில் அடி காயமும் ஏற்பட்டது.

பொலிஸார் விசாரணை
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த கும்பல் ஊரை விட்டு இன்னமும் வெளியேறவில்லை நீங்கள் வந்தால் அவர்களை கைது செய்யலாம் என தெரிவித்தும் பொலிஸார் அசண்டையீனமாக செயற்பட்டு அவர்களை வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பின்னர் குறித்த இளைஞன் 107 என்ற அவசர பொலிஸ் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அவர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்திய பின்னரே பொலிஸார் இதுகுறித்து விசாரணை செய்துவிட்டு சம்பவ இடத்திற்கு சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.