;
Athirady Tamil News

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

0

தமிழகத்தின் (Tamil Nadu) இராமநாதபுரம் மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், குறித்த ரூ.1.80 கோடி மதிப்பிலான 5.70 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர்பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

தீவிர சோதனை
கடல் வழியாக நடக்கும் கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய சுங்கத்துறை, கடலோர பொலிஸார், கடற்படை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் அதையும் மீறி சமீப காலமாக அதிக அளவில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளர் கண்ணதாசனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குழு புது மடத்திலிருந்து மானாங்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி கடற்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகள் கைபற்றப்பட்டது. அதனை திறந்து சோதனை செய்த போது அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

அந்த பெட்டிகளை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் 57 ஆயிரம் மாத்திரைகள் வீதம் 10 பெட்டியில் 5.70 லட்சம் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணை
இதனையடுத்து, வலி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை சரக்கு வாகனம் மூலமாக இராமநாதபுரம் சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதால் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் ரூ.1.80 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.