;
Athirady Tamil News

ஜனாதிபதி – சுமந்திரன் விசேட சந்திப்பு : வழங்கப்பட்ட உறுதி மொழிகள்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் (M. A. Sumanthiran) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று (01) நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஒருகட்டமாக இந்த சந்திப்பு அமைந்திருந்ததாக சுமந்திரன் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

உறுதியளித்த ஜனாதிபதி
இதேவேளை மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இம்மாதம் இறுதி வாரத்தில் நாடாளுமன்றில் நிறைவேற்ற ஒத்துழைப்பதாக இதன்போது ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்தும் வகையில் சுமந்திரனால் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல்
மேலும், இன்று (02) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தப் பிரேரணையை நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க ஜனாதிபதி அறிவுறுத்துவார் எனவும் சுமந்திரன் உறுதியாக குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நிறைவடைந்த உடனேயே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் தரப்புகளின் இவ்வாறான சந்திப்புக்கள் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையெழுப்பயுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.