;
Athirady Tamil News

தொடரும் வன்முறை…! கடுமையாக அதிகரிக்கும் பணவீக்கம் – திவாலாகும் பங்களாதேஷ்

0

பங்களாதேஷ் (Bangladesh) கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளதுடன் பணவீக்கம் அதிகரிப்பதோடு அந்நிய செலாவணி கையிருப்பு சரிய தொடங்கி உள்ளதாக அய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் அந்த நாடு ‛திவால்’ நிலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் என்பது கடந்த மாதம் தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்தும் போராட்டம் தொடர்ந்தது.

குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள்
மாணவர்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில் ஆங்காங்கே சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் தான் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் (Bangladesh) கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக பங்களாதேஷின் புள்ளியியல் முகமை சார்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி நுகர்வோர் விலை குறியீடு (பணவீக்கம்) என்பது ஜூலை மாதம் 11.66 சதவீதத்தை தொட்டுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு
இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக உணவு பணவீக்கம் என்பது 13 ஆண்டு இல்லாத அளவுக்கு 14 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று டெய்லி ஸ்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த பணவீக்கத்துக்கு பங்களாதேஷில் நிலவும் நிச்சயமற்ற தன்மை தான் காரணம். மாணவர்களின் தொடர் போராட்டம் என்பது பங்களாதேஷை முழுமையாக பாதித்தது.

மேலும் பங்களாதேஷின் சென்ட்ரல் வங்கியின் தரவுப்படி ஜூலை 31ம் திகதி பங்களாதேஷின் அந்நிய செலாவணி கையிருப்பு என்பது 20.48 பில்லியனை அமெரிக்க டாலரை எட்டியது.

இது முந்தைய மாதமாக ஜூன் மாதத்தில் 21.78 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஒரு மாதத்தில் சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிக அமெரிக்க டாலர் காலியாகி உள்ளது. இது பங்களாதேஷத்திற்கு கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இடைக்கால அரசுக்கு கடும் நெருக்கடி
மேலும் மத்திய வங்கியும் பணக்கட்டுப்பாட்டை விடுத்துள்ளது. மக்கள் தங்களின் வங்கி கணக்கில் இருந்து அதிகபட்ச பணத்தை எடுக்க முடியது.

ஒரு நேரத்தில் பொதுமக்கள் ரூ.2 லட்சம் வரை மட்டுமே வங்கிகளில் இருந்து எடுக்க முடியும். இதனால் நாட்டின் வணிக துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பணப்புழக்கமின்றி வணிக துறை செயல்பட்டு உள்ளது. இதனால் இடைக்கால அரசுக்கு கடும் நெருக்கடி என்பது ஏற்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகம்மது யூனுஸ் நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கலை சரி செய்ய கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

ஏனென்றால் நாட்டில் தற்போதைய நிலை நீண்டகாலம் தொடரும் பட்சத்தில் அந்த நாடு திவால் நிலைக்கு கூட செல்லலாம்.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் பொருட்களை கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.