;
Athirady Tamil News

பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படலாம்: வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

0

வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு, பாஸ்போர்ட் தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படலாம்
வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

அதாவது, வியட்நாம் செல்லும் பிரித்தானியர்கள், அங்கு, பிசினஸ் தொடர்பில் ஏதாவது தகராறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலோ, வாகன விபத்து முதலான குற்றச்செயல்கள் நிகழ்ந்தாலோ, வியட்நாம் அதிகாரிகள் உங்களுடைய பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்துவைத்துக்கொள்வார்கள் என்று பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உங்களை வியட்நாமை விட்டு வெளியேற அந்நாட்டு அதிகாரிகள் தடை விதிப்பார்கள் என்றும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், வியட்நாமுக்குள், உள்ளூர் அதிகாரிகள் இணையதளங்களை அணுகவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தவும் தடை செய்யலாம் என்றும், உங்கள் மொபைலில் நீங்கள் என்னென்ன பார்த்தீர்கள் என்பதைக்கூட அவர்கள் பார்க்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, உங்கள் பானங்களில் சட்டவிரோத போதைப்பொருட்கள் உங்களுக்குத் தெரியாமல் கலக்கப்படக்கூடும் என்றும், சில பிரித்தானியர்கள் அந்த வலிமையான போதைப்பொருட்களால் மன நல பாதிப்புகளுக்குக் கூட ஆளாகியுள்ளார்கள் என்றும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.

யாரேனும் போதைப்பொருள் வைத்திருந்தால், அது மிகக் குறைந்த அளவேயானாலும், வியட்நாமில் அதற்காக உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது?
இப்படி ஏதாவது பிரச்சினையில் பிரித்தானியர்கள் சிக்கிக்கொண்டால், வியட்நாமை விட்டு வெளியேற உங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடுவதுடன், அருகிலுள்ள பிரித்தானிய தூதரகத்தையோ, துணை தூதரகத்தையோ தொடர்புகொள்ளவும் என்றும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.