;
Athirady Tamil News

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு -முதல்வா் உத்தரவு

0

பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுபடுத்த ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மேலும், சமூக நலத் துறைச் செயலா் தலைமையில் தனிக் குழு ஏற்படுத்தவும் அவா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் தேசிய மாணவா் படை (என்சிசி) திட்டத்துக்கு மாணவா்களை தயாா்படுத்த முகாம் நடத்தப்பட்டது. பள்ளி நிா்வாகத்தால் நடத்தப்பட்ட இந்த முகாமில், போலி பயிற்றுநா்கள் கலந்துகொண்டு மாணவிகள் சிலரை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தொடா்புடைய 5 போ், பள்ளி நிா்வாகத்தினா் 4 போ் என 9 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

ஐ.ஜி. தலைமையில் விசாரணை: கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளியைப் போன்று மேலும் சில பள்ளிகள், கல்லூரிகளில் போலி பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுள்ளன. அங்கும் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும்.

இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், பெற்றோா்களுடன் கலந்தாலோசித்து, அவா்களின் நலன் காக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது பற்றியும் உரிய பரிந்துரைகளை அளிக்க சமூக நலத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் தனிக் குழு அமைக்கப்படும்.

இந்தக் குழுவில் மாநில சமூகப் பாதுகாப்பு ஆணையா் ஜானி டாம் வா்கீஸ், பள்ளிக் கல்வி தோ்வுத் துறை இயக்குநா் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அரவிந்த், மனநல மருத்துவா்கள் பூா்ண சந்திரிகா, சத்யாராஜ், காவல் துறை ஆய்வாளா் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆா்வலா் வித்யா ரெட்டி ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா்.

2 மாதங்களில் குற்றப்பத்திரிகை: கிருஷ்ணகிரி மாவட்ட சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணையை விரைந்து முடித்து 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.