;
Athirady Tamil News

நிபா வைரஸ்: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு!

0

கேரளத்தில் நிபா வைரஸ் பரவலையடுத்து தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்த இளைஞர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனை முடிவுகளில் உறுதியாகியுள்ளது. கேரளத்தில் நிபா வைரஸால் உயிரிழந்த இரண்டாவது நபர் ஆவார்.

இந்த நிலையில், அந்த இளைஞருடன் தொடர்பிலிருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரது விவரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, தமிழக – கேரள எல்லையில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளுமாறு அந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகளில் 24*7 சோதனை, அறிகுறிகளுடன் வருபவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.