;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர்வேன் ; கொழும்பு பேராயரிடம் ஜனாதிபதி அநுர உறுதி

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை வெளிக்கொணர்வேன் என புதிய ஜனாதிபதி அநுரகுமார உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம் (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பொரளையில் அமைந்துள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, “இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது பொறுப்பு வாய்ந்த மற்றும் கடினமான பணியாக இருக்கலாம். அதற்காக அவருக்கு நாம் முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். குறிப்பாக இந்த நாட்டின் வறிய மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியைத் தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் மற்றும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தைத் தயார் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் ஜனாதிபதி எனக்கு உறுதியளித்திருந்ததாகவும் பேராயர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பு உயர் மறைமாவட் துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை, ஜே.டி. அந்தோணி ஆண்டகை, அன்டன் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு பேராயர்களின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, கொழும்பு பேராயரின் செயலாளர் அருட்தந்தை ஜோசப் இந்திக்க, பொருளாளர் அருட்தந்தை ஜூட் சமந்த பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.