;
Athirady Tamil News

யாழ். காங்கேசன்துறை – கொழும்பு தொடருந்து சேவை – வெளியான தகவல்

0

வடக்கு மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவது தொடர்பாக தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, வடக்கிற்கான தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் என தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான தொடருந்து மார்க்க பகுதி நவீனமயமாக்கல் காரணமாக மூடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி தேர்தல் காரணமாக தேர்தல் கடமைகளுக்காக வரும் உத்தியோகத்தர்களுக்கும் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அந்த மார்க்கம் மீண்டும் திறக்கப்பட்டது.

அதன்படி கடந்த 19, 20, 21, 22 ஆகிய தினங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை பல விசேட தொடருந்து சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடருந்து திணைக்களம்
எனினும், குறித்த மார்க்கத்தில் வழமையாக தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து மார்க்கத்தின் சமிக்ஞை அமைப்பை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படாததே இதற்குக் காரணம் என தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

மஹவயில் இருந்து அனுராதபுரம் வரை 47 தொடருந்து கடவைகள் உள்ளதுடன், 15 கடவைகள் பிரதான வீதிகளுக்கு குறுக்கே அமைந்துள்ளன. அவற்றில் 09 கடவைகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உள்ள பிரதான வீதிகளை கடக்கின்றன.

தொடருந்து கடவை

பிரதான வீதிகளின் குறுக்கே அமைந்துள்ள தொடருந்து கடவுப்பாதைகளில் தொடருந்து அந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கினால் பாதுகாப்பு கடவைகளை இயக்குவதற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் ஏனைய கடவைகளுக்கு எச்சரிக்கை பலகைகளை நிறுவ வேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான 22 தினசரி தொடருந்து சேவைகளையும் முன்னெடுக்க முடியாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், சமிக்ஞை அமைப்பு நவீனமயப்படுத்தி மீண்டும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் என தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.