;
Athirady Tamil News

உலக வங்கியுடன் 200 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து

0

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக உலக வங்கியுடன் 200 மில்லியன் டொலர் பெறுமதியான மேலதிக ஒப்பந்தம் இன்று (07) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில், நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் நிதி உதவி

ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிதி வசதியானது இலங்கையின் முன்னெடுக்கப்படும் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை காண்பிக்கிறது.

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

அதேவேளை இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்படி இந்த வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று அம்சங்களாக,

  1. பொருளாதார நிருவாகத்தை மேம்படுத்தல் : நிதி நிலைத்தன்மையை பாதுகாத்து அரச வளங்கள் முகாமைத்துவம், நிதி ஒழுக்கம், வௌிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை பலப்படுத்தல்
  2. வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தல் : மிகவும் போட்டித்தன்மை மிக்க தனியார் துறையுடன் இலங்கையின் அபிவிருத்தியை விரிவுபடுத்தல்
  3. வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல்: நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.