;
Athirady Tamil News

பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்

0

மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று, மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம். கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து இருக்கலாம். அதனையும் மீறி எடுத்துள்ளார்கள்.

சங்கு சின்னத்திற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், பொது கட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தமிழ் மக்கள் பேரவையின் கூர்ப்பாகவே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். பொதுச் சபை அடுத்த கூர்ப்புக்கு போன பின்னரே தேர்தல்களை எதிர்கொள்ள முடியும்.

தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலில் தேச திரட்சியை எதிர்பார்த்து, அதில் வெற்றியும் பெற்றோம். அது சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் மீள சிதறியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பலம் தமிழ் மக்கள் பொதுச்சபையிடம் இல்லாததால், அதில் இருந்து விலகி இருக்கிறோம்.

எனவே மக்கள் நாணயமானவர்களுக்கும் கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சங்கு சின்னம் புனிதமானது இல்லை. அதற்கு யாரும் உரிமை கோர முடியாது. அது ஒரு பொது நிலைப்பாட்டிற்கான குறீயிடு. பொதுக்கட்டமைப்பில் இருந்த பலர் வெளியில் நிற்கும் போது சிலர் மட்டும் அதனை பயன்படுத்துவது அறமில்லை.

சங்கு சின்னத்திற்கு, நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை. பலரின் உழைப்பு அதில் உண்டு. தேர்தல் பிரச்சாரத்திற்கு பலர் முன்னரங்கில் வந்து உழைக்காமல் பின்னின்று உழைத்தவர்களும் உண்டு.

தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது. அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். அத்துடன் பொதுக்கட்டமை தற்போது இல்லை என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.