;
Athirady Tamil News

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

0

சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகாலையில் ஆள் நடமாடமில்லாத நேரத்தில் நுழைந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சல்மான் சலீம் தாக்குர் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் கர்ப்பக்கிரகத்திலிருந்த சாமி சிலையை அடித்து நொறுக்க முற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் சிலை உடைந்து சேதமானது.

கோயில் சிலை சேதப்படுத்தபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோயில்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தெலங்கானா அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி சனிக்கிழமை (அக்.19) மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத்(விஹெச்பி) அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில், கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்களுடனும், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்பட பிற ஹிந்து அமைப்புகளுடனும் இணைந்து பாஜக போராட்டம் நடத்தியுள்ளது.

இதையடுத்து போராட்டத்தின் ஒருபகுதியாக, காவிக் கொடிகளை ஏந்தியபடி ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த பலர் கோயிலின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை நோக்கி போராட்டக்காரர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி எறிந்தும் , காலணிகளை கழற்றி எறிந்தும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தெலங்கானாவில் குரூப்-1 தேர்வை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக மத்திய இணையமைச்சர் பந்தி சஞ்சய் ஹைதராபாத்தின் அசோக்நகரில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.