;
Athirady Tamil News

ரஷ்ய – வடகொரிய கூட்டணியால் அச்சுறுத்தல்! நட்பு நாடுகளிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்து

0

உலகில் சர்வாதிகார ஆட்சியில் இயங்கிவரும் வடகொரியா, ரஷியாவுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து சர்வதேச நட்பு நாடுகள் வெளிப்படையான பதிலை தர வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே ஏற்பட்டு உள்ள கூட்டணிக்கு உலக தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது.

வடகொரியாவின் இராணுவ உதவி
ஆரேம்பத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியதன் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது.

எனினும், இரு நாடுகளும் போர் பதற்றம் தீவிரமடைந்த போது, போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பெரிய பலன் தரவில்லை.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு இராணுவ உதவியை வடகொரியா வழங்கி வருவதாக தகவல் வெளியானது.

குறித்த உதவியானது, உலக தலைவர்களை பொருத்த வரையில் போரை தீவிரப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா – வடகொரியா கூட்டணி
இந்த விடயம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவிக்கையில், “ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே ஏற்பட்டு உள்ள கூட்டணிக்கு உலக தலைவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த கூட்டணியால் போர் நீளும் என அவர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் ரஷ்யாவுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இந்த உதவிக்கு பதிலாக, ரஷ்யா அதனை எப்படி திருப்பி செலுத்த போகிறது?

இதேவேளை, ரஷ்யாவுக்கு இராணுவ அதிகாரிகளையும் வடகொரியா அனுப்பி வருகிறது.

இதனால், போர் நீடிக்குமே தவிர. உலக அளவில் ஒருவருக்கும் பலன் ஏற்படாது.

போரானது விரைவில் முடிவுக்கு வர வேண்டும். இந்த தீவிர அச்சுறுத்தல் பற்றி சர்வதேச நட்பு நாடுகள் ஒரு வெளிப்படையான பதிலை தர வேண்டும் என உக்ரைன் அரசு எதிர்பார்க்கிறது.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.