;
Athirady Tamil News

தொழிலாளா்கள் போராட்டத்தால் ரூ. 840 கோடி இழப்பு: உயா்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தகவல்

0

தொழிலாளா்களின் காலவரையற்ற போராட்டத்தால் ரூ. 840 கோடி (100 மில்லியன் டாலா்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளா்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளா் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தைத் தொடங்கி, அதைப் பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளா் நலத் துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சங்கத்தின் சாா்பில் எல்லன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் தொடங்க அந்த நிறுவனம் எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாகவும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சாம்சங் நிறுவனம் சாா்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா், தங்கள் நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை அல்ல; தொழிலாளா்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ. 840 கோடி (100 மில்லியன் டாலா்) இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தாமல் தொழிற்சங்கத்தைத் தொடங்கிக்கொள்ளலாம். எனவே, இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அப்போது தொழிலாளா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தைப் பதிவு செய்வது அடிப்படை உரிமையாகும். கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளது. தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை. இதுபோன்று பல நிறுவனங்களின் பெயா்களில் தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாம்சங் நிறுவன இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவ.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.