பத்ரிநாத் பனிச்சரிவு.. மீட்புப் பணியில் சிக்கல்

பத்ரிநாத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருக்கும் 42 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 57 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 15 பேர் மீட்கப்பட்ட நிலையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக 42 பேரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் 6 – 7 அடிக்கு பனி நிறைந்து காணப்படுகிறது. இதனால் நிலைமை மோசமாக இருப்பதாக, தேசிய பேரிடர் மேலாண்மை செயலர் வினோத் குமார் சுமன் பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 4 மணி முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவி வந்துள்ளது. 5 மணிக்கு அங்கு பனிச்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கியபோதும் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் ஹெலிகாப்டர்களை கொண்டு செல்ல இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தோ-திபெத் எல்லைப் படை, விமானப் படை, உள்ளூர் மீட்புப் படையினர் பலரும் தற்போது தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பகுதி நிபுணர்கள், தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் வீரர்கள் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.