சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ; புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் தெரிவிப்பு ; யோசனைகளை முன்வைக்க மக்களுக்கும் சந்தர்ப்பம் என்கிறது

(ரொபட் அன்டனி)
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கும். இதற்காக சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட பொதுமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்ந்து தாமதடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றமை தொடர்பில் வினவியபோதே அமைச்சர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
குறிப்பாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை சபையில் ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றையும் எதிர்க்கட்சி கொண்டு வந்திருந்தது.
இந்நிலையில் அமைச்சர் விஜித்த ஹேரத் இது தொடர்பில் கேசரிக்கு குறிப்பிடுகையில்,
புதிய அரசியலமைப்பை நிச்சயம் நாங்கள் கொண்டு வருவோம். தற்போது பொருளாதார ரீதியாக நாட்டை மீட்டு கொண்டு வருகிறோம். எனவே, விரைவில் புதிய அரசியலமைப்பையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் அரசாங்கம் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும். அதேபோன்று சிவில் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தப்படும்.
மேலும் நாட்டின் மக்களுக்கும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக யோசனைகளை கருத்துக்களை முன்வைக்க இடம் அளிக்கப்படும் என்றார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான செயற்பாடுகளை ஆராய்ந்து அதில் காணப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் வரைபுகள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக பயன்படுத்தப்படும் என்று அரசியல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.