இலங்கை – இந்திய கூட்டாண்மையின் புதிய பகுதிகளை ஆராய பிரதமர் மோடியின் விஜயம் வாய்ப்பை வழங்கும் – இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வழங்கிய செவ்வி
(நமது அரசியல் நிருபர்)
ஒத்துழைப்பின் தற்போதைய பகுதிகளை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும், நமது பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையின் புதிய பகுதிகளை ஆராயவும் இந்த விஜயம் ஒரு வாய்ப்பை வழங்கும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகவும் விரிவான கூட்டறிக்கையை இது முன்னெடுத்துச் செல்லும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயம் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு :
கேள்வி – இந்திய பிரதமர் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் நோக்கம் குறித்து நீங்கள் எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் தொடர்ச்சியாக இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் அமைகிறது. ஜனாதிபதி திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதையும், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கையால் அழைக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவர் இந்தியப் பிரதமர் என்பதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதுவே நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பங்குடைமையின் சிறப்பானதும் தனித்துவமானதுமான தன்மையை சான்று பகர்கின்றது.
பிரதமரின் வருகையானது நமது தொடர்ச்சியான உயர் மட்ட ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும். மிகவும் நெருங்கிய அயல் நாடுகளுக்கு இடையில் மாத்திரமே இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் இலங்கைக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயம் இதுவாகும். ஒத்துழைப்பின் தற்போதைய பகுதிகளை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும், நமது பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையின் புதிய பகுதிகளை ஆராயவும் இந்த விஜயம் ஒரு வாய்ப்பை வழங்கும். ஜனாதிபதி திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகவும் விரிவான கூட்டறிக்கையை இது முன்னெடுத்துச் செல்லும். முதலீடுகள் மற்றும் இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் ஆகிய துறைகளில் முக்கியமான பெறுபேறுகளை நாம் காண வாய்ப்புள்ளது. இது ஒரு முக்கியமான மைல்கல்லாக இருப்பதோடு நமது ஈடுபாட்டை எப்போதும் உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச்செல்லும்.
கேள்வி – இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஈடுபாடு மற்றும் உறவுகளின் நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இலங்கையுடனான எங்கள் உறவுகள் இதற்கு முன்பு இவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. அவை பகிரப்பட்ட பாதுகாப்பின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட வேண்டிய செழுமை மற்றும் அபிவிருத்திக்கான எங்கள் பகிரப்பட்ட அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டவை. நமது உறவுகள் புதிய மற்றும் பரந்த அளவிலான பகுதிகளாக வளர்ந்து பன்முகப்படுத்தப்படுகின்றன: முதலாவது, உட்கட்டமைப்பு மற்றும் தொடர்புகள் ; இரண்டாவது, ஆழமான பொருளாதார ஈடுபாடு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு; மூன்றாவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துதல்; நான்காவது, கலாசார மற்றும் கல்வி ஒத்துழைப்பு; இறுதியாக, சுற்றுலா மற்றும் இருநாட்டு மக்கள் இடையிலான தொடர்புகள். எமது அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் மஹாசாகர் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) அணுகுமுறையின் முக்கிய ஸ்தானத்தில் இலங்கை உள்ளது.
இந்த காரணத்திற்காகவே, எந்தச் சந்தர்ப்பதிலும் வேறெந்த நாடுகளுக்கு வழங்கியிராத வகையில் மிகப்பெரியதும் நிபந்தனையற்றதுமான 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியது. தற்போது ஐந்தாவது இடத்திலும் வெகு விரைவில் மூன்றாவது இடத்திலும் இருக்கும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் இலங்கை இணைந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2015 ஆம் ஆண்டில் 2.1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 4.3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, வேகமாக வளர்ந்து வரும் பாரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
கேள்வி – இந்த உறவை உயர்மட்டங்களுக்கு கொண்டு செல்ல, உங்களை பொறுத்தவரை இரு தரப்பினரும் எவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து, எவற்றை நோக்கி செயல்பட வேண்டும் ?
இந்திய – இலங்கை கூட்டாண்மையானது இரு தரப்பினருக்கும் உறுதியான நன்மைகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக, எப்போதும் செயல்பட்டு வருவதுடன், தொடர்ந்தும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும். இந்தியாவில் நமக்கு சிறந்த பெறுபேற்றை அடைய பயன்பட்ட சிறந்த நடைமுறைகள் மற்றும் பரிமாற்றத் திறன்களான டிஜிட்டல் மயமாக்கல் முதல் வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித வளம் மற்றும் திறன் மேம்பாடு முதலானவற்றை எமது நெருங்கிய அயல் நாடான இலங்கையுடன் பகிர்ந்து கொள்வது இந்தியாவின் முயற்சியாகும். இந்தியா-இலங்கை உறவை முன்னோக்கி வரையறுக்கும் ஒத்துழைப்புத் துறைகள் நமது இரு பொருளாதாரங்களும் ஒன்றாக வளரவும் எதிர்காலத்திற்குத் எம்மை தயார்செய்யவும் உதவும். மீள்-உலகமயமாக்கல் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளுக்கான கேள்விகள் காணப்படும் உலகில், இருதரப்பு பொருளாதார இணைப்புகளை மேம்படுத்த நமது கூட்டாண்மைகளில் உள்ள நிரப்புத்தன்மைகளை முழுமையாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
கேள்வி – குறிப்பாக, எமது இருதரப்பு வர்த்தகம் அதிகரித்துவருவதுடன் இவ்விடயமானது உலகத்தினால் கூர்ந்து அவதானிக்கப்படும் ஒன்றாக உள்ள சூழலில் இது போன்ற பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன?
இலங்கையின் பாரிய வர்த்தகப் பங்காளராகவும், முதலீட்டுக்கான முன்னணி மூலாதாரமாகவும் சுற்றுலாத்துறை வருமானத்துக்கான பாரிய மூலமாகவும் இந்தியா உள்ளது. நம்மிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று உள்ளதுடன், குறித்த உடன்படிக்கையானது 2000 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இந்தக் காலப்பகுதியில் 10 மடங்கு வரையிலான அதிகரிப்பை மாத்திரம் கொண்டிருந்த இந்தியாவின் ஏற்றுமதிக்கு எதிராக இலங்கையின் ஏற்றுமதியானது 22 மடங்குகளால் அதிகரித்திருந்தது, அந்த அடிப்படையில் நோக்கும்போது இலங்கைக்கு சிறந்த இலாபத்தினை தேடும் நோக்கத்தினை அந்த உடன்படிக்கை பூர்த்திசெய்துள்ளது. எவ்வாறான நோக்கத்துக்காக அந்த உடன்படிக்கை அமுலாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினை குறித்த உடன்படிக்கையானது நிவர்த்தி செய்துள்ளது. இலங்கை வர்த்தக திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 65 வீதமானவை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சலுகைகள் மூலமாக கிடைக்கப்பெறும் அதேவேளை 5 வீததுக்கும் குறைவான இந்திய ஏற்றுமதிக்கே அவ்வாறான சலுகைகள் மூலமாக ஆதரவளிக்கப்படுகின்றது. உண்மையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக செயற்பாடுகளை மாத்திரம் கணக்கில் கொள்ளும்போது இந்தியாவைக்காட்டிலும் அதிக வர்த்தகத்தினை இலங்கை பதிவு செய்திருப்பதாக அண்மைய செல்நெறிகள் குறித்து நிற்கின்றன.
இருந்த போதிலும் நேர்மையான வர்த்தக செயற்பாடுகளுக்கான தடைகளை நீக்குதல், வரி அல்லாத தடைகளை நீக்குதல் மற்றும் இலகுவான முறையில் பாரிய வர்த்தக செயற்பாடுகளுக்கு வழிவகுத்தல் ஆகியவை குறித்த நோக்குடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்கின்றோம். இந்த காரணத்திற்காக 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்கா அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை தொடர்வதற்கு நாம் தீர்மானித்திருந்தோம். இந்த பேச்சுக்களை முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு செல்ல இலங்கை தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை நாம் காத்திருக்கின்றோம்.
கேள்வி – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்திய முதலீட்டாளர்களின் மனோநிலையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இந்தியாவிலிருந்து மேலும் முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்?
இந்திய தனியார் துறையினர் மூலமான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் உட்பட சகல முதலீட்டு திட்டங்களும் அதிக முதலீடு சார்ந்த திட்டங்களாக மாற்றமடைய வேண்டுமென்ற இலக்குடன் இலங்கையை நோக்கிய எமது முயற்சிகள் காணப்படுகின்றன. நமது சக்தி மற்றும் உட்கட்டமைப்பு துறை திட்டங்கள் அனைத்தும் முதலீட்டை முதன்மையாகக் கொண்ட திட்டங்களாக காணப்படும் அதேவேளை கடன் குவிப்பு என்ற அடிப்படையில் வரி செலுத்துபவர்கள் மீது மேலதிக சுமையை அவ்வாறான திட்டங்கள் முன்மொழியவில்லை. நாம் ஏற்கனவே இலங்கையில் ஒரு முன்னணி வெளிநாட்டு முதலீடு முதலீட்டாளர்களாக உள்ளோம். அத்துடன் எதிர்வரும் ஆண்டுகளில் இந்த செல்நெறியானது கணிசமான அளவில் வளர்ச்சி அடையும் என்பது எனது கருத்தாகும். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம், ITC ஹோட்டல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் இதற்கான சமீபத்திய உதாரணங்களாகும்.
கடந்த காலங்களில் கூட பெட்ரோலிய பொருட்களின் சில்லறை விற்பனை, சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் அபிவிருத்தி, உற்பத்தி துறை, சொத்து விற்பனை, தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் நிதியியல் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் நாம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு முதலாவதாக முதலீட்டினை மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களாக இந்தியாவின் CEAT நிறுவனம் உள்ளது. இலங்கையில் உள்ள மிச்சலின் ஆலைகள் இரண்டினை பெற்றுக் கொள்வதற்காக 225 மில்லியன் அமெரிக்க டொலரினை CEAT முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி நிலைபேறானதாக அமைய வேண்டுமானால் உண்மையில் ஒரு முக்கியமான காரணியாக காணப்படும் இலங்கையின் ஏற்றுமதியினை விஸ்தரிப்பதற்கு உதவக்கூடிய வகையில் புதிய உற்பத்தி வழிவகைகளை உருவாக்கும் நோக்குடன் நாம் மேலும் பல வாய்ப்புகளை ஆராய முயல்கின்றோம்.
அதுமட்டுமல்ல வர்த்தக நிகழ்வுகள் மற்றும் தீவிரமான ஈடுபாடுகள் ஆகியவற்றின் ஊடாகவும் நாம் முதலீட்டினை மேம்படுத்துகின்றோம். இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (CII) பாரிய வர்த்தக தூதுக்குழு ஒன்றை அனுப்புமென நாம் எதிர்பார்க்கின்றோம். 2024 டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்கா அவர்கள் இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது பல்வேறு துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவின் சகல பகுதிகளையும் சேர்ந்த புகழ்பெற்ற கைத்தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு நாம் வழி சமைத்திருந்தோம். அதுமட்டுமல்ல இந்திய மற்றும் இலங்கை ஆரம்பநிலை நிறுவனங்களிடையில் சிறந்த தொடர்புகள் பேணப்படுவதனையும் நாம் ஊக்குவிக்கின்றோம். விநியோகச் சங்கிலி வலையமைப்பின் பல்வகைப்படுத்தலில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற தொடர் முயற்சிகளின் அங்கமாக இந்தியாவை நோக்கி நகரும் உலகளாவிய நிறுவனங்களின் முதலீட்டினை ஈர்ப்பதற்காக இந்தியாவுடனான வலுவான வர்த்தக மற்றும் வியாபர தொடர்புகளையும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கிட்டியதூர அமைவிடத்தையும் சில முயற்சிகள் மூலமாக இலங்கை இலகுவாக பயன்படுத்தமுடியும். இருந்தபோதிலும் முதலீட்டுக்காக எளிதில் பயன்படுத்தக் கூடியதும், வரவேற்கத்தக்கதும், சூழலுக்கு உகந்ததுமான கட்டமைப்பினை இலங்கை உறுதிசெய்யவேண்டியதும் முக்கியமானதாகும். அத்துடன் சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் ஸ்திரத்தன்மை, மற்றும் முதலீட்டாளர்களை நோக்கிய நேர்மையான அணுகுமுறை ஆகியவையும் மிகவும் முக்கியமானவையாகும். அத்துடன் வெளிப்படைத்தன்மையும் சமமான முக்கியத்துவத்தினைக் கொண்டுள்ளது.
கேன்வி – 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது இரு தரப்பினரும் நமது பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதனை ஏற்றுக் கொண்டிருந்தனர். இவ்விடயத்தில் எவ்வாறான முன்னேற்றங்களை நாம் எதிர்பார்க்க முடியும்?
2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, இரு தரப்பினரும் இந்து சமுத்திரத்தின் பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தியதுடன், பிராந்திய கடல் பாதுகாப்பினை வலுவாக்குவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் இணக்கம் ஏற்பட்டிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக இருதரப்பு ரீதியாகவும் கொழும்பு பாதுகாப்பு குழுமம், BIMSTEC மற்றும் IORA போன்ற ஏற்கனவே உள்ள பிராந்திய கட்டமைப்புகள் ஊடாகவும் நாம் செயற்பட்டு வருகின்றோம். அது மட்டுமல்ல இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் பிரிவினருக்கு தேவையான முக்கிய பயிற்சி திட்டங்களும் எம்மால் முன்னெடுக்கப்படுகின்றன. அதுபோல எமது இரு கடற்படையினர் இடையிலான SLINEX, இரு இராணுவத்தினருக்கும் இடையிலான மித்ரசக்தி கூட்டுப் பயிற்சிகள் மற்றும் மாலைதீவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நமது முத்தரப்பு கடலோர காவல்படை பயிற்சி தோஸ்டி ஆகியவை பாதுகாப்புத் துறையில் நமது ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும். வருடாந்தம் நடைபெறும் பாதுகாப்பு துறை சார்ந்த பேச்சுகள் நமது பகிரப்பட்ட பாதுகாப்பு இலக்குகளை முன்னேற்றுவதற்கான ஒரு சிரேஷ்ட மட்டத்திலான களத்தினை வழங்குகின்றது. அது மட்டுமல்லாமல் பாதுகாப்பு ரீதியான கட்டமைப்புகளின் அடிப்படையில் கடல் கண்காணிப்புக்கான டோனியர் விமானம் மற்றும் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட கடல் மீட்பு மற்றும் ஒன்றிணைப்பு மையம் போன்ற முன்னெடுப்புகள் இலங்கையின் ஆளுமையினை மேம்படுத்துவதற்கு நாம் நேரடியான ஆதரவை வழங்குகின்ற சந்தர்ப்பங்களாகும். போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த மரபு ரீதியான மற்றும் மரபுசாரா சவால்களை முறியடித்தல் ஆகியவற்றில் எமது பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கூட்டு நடவடிக்கைகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுகிறோம். அதேபோல நீர்நிலையியல் துறை சார்ந்த தளங்களில் நமது ஒத்துழைப்பினை மேலும் விஸ்தரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் ஒட்டுமொத்தமாக நோக்கும் போது நமது பாதுகாப்பு நலன்கள் மிகவும் நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளமை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சுதந்திரமானதும், வெளிப்படையானதும், பாதுகாப்பானதுமான இந்து சமுத்திர பிராந்தியத்தினை உறுதிப்படுத்துவதற்காக நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இலங்கையின் கடல் மார்க்கமான மிகவும் நெருங்கிய அயல் நாடாக இந்தியா உள்ளமையால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு எந்தவகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் தனது ஆட்புல எல்லையினை எந்த வகையிலும் பயன்படுத்த இலங்கை அனுமதிக்க போவதில்லை என்பதனை ஜனாதிபதி திசாநாயக்கா அவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கேள்வி – பிரதமரின் இலங்கை வருகையின் போது பலவளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும் என்று அறிகிறோம். இலங்கையுடனான இந்தியாவின் வளர்ச்சி, ஒத்துழைப்பு எந்தெந்த முக்கியதுறைகளில் கவனம் செலுத்தும்? திட்டத் தெரிவுகளின் அடிப்படைஎன்ன?
அபிவிருத்தி கூட்டாண்மையைப் பொறுத்தவரை, அது எமது உறவின் வலுவான தூணாக அமைகிறது என்று ஒருவர் கூறலாம். உள்நாட்டில் போன்றே இலங்கைக்கான எங்கள் அபிவிருத்தி உதவிகளும் மக்களை மையமாகக் கொண்டதாகும். மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மட்டுமே எங்கள் முயற்சிகளின் வெற்றிக்கான ஒரே அளவுகோலாக அமைந்துள்ளது.
இலங்கையின் ரயில்வே மேம்பாடு, காங்கேசன்துறை துறைமுகத்தை நவீன மயமாக்குதல், வறிய மக்களுக்கான வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளை நிர்மாணித்தல், மதத்தலங்களில் சூரிய மின்மயமாக்கல் திட்டம், யாழ்ப்பாணத்தின் அருகிலுள்ள தீவுகளில் கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திட்டங்கள், இலங்கையில் முதலாவ து வெப்ப கட்டுப்பாட்டு விவசாய களஞ்சிய வசதியை உருவாக்குதல், விவசாயம், கால் நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைகளை ஆதரித்தல் ஆகியவை தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களில் அடங்கும்.
நாங்கள் பெருந்தோட்ட சமூகங்களுக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவான வளர்ச்சி உதவித்திட்டங்களை வழங்குகிறோம், இது பல்வேறு துறைகளில் மக்களை மையமாகக்கொண்ட திட்டங்களை உள்ளடக்கியதாகும். இன்று, இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் எமது திட்டங்களை செயற்படுத்துகிறோம்.
இதுவரை, இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மொத்தநிதி உதவியை நாங்கள் வழங்கியுள்ளோம். இதில் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவியும், பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட அவசர உதவிகளும் அடங்குகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இலங்கை அனுபவித்த பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த கடன்கள் சார்ந்த திட்டங்களை விட மானியங்கள் மற்றும் முதலீடுகளில் அதிகளவில் தங்கியிருக்கவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
அந்த வகையில் இந்தக்காரணத்துக்காகவே இலங்கைபொருளாதாரமீட்சிக்கான முயற்சிகளுக்கு உதவும்வகையில், கடந்த 6 மாதங்களில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடன்களை நன்கொடையாக மாற்றியுள்ளோம்.
கேள்வி – இந்திய – இலங்கை கூட்டாண்மை பற்றிபேசும்போது புராதன காலத்திலிருந்தே இருந்து வரும் மக்கள் – மக்கள் தொடர்புகளே உறவுகளின் அடித்தளம் என்று அடிக்கடி கூறப்படுவதுண்டு. ஆனால் கொவிட் தொற்றுக்குப் பின்னர் மக்களிடையேயான தொடர்புகளில் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா? மக்களை நெருக்கமாகக்கொண்டு வர எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
எமது மக்கள் - மக்கள் தொடர்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். மகாவம்சமாக இருந்தாலும் சரி, இராமாயணமாக இருந்தாலும் சரி, நாம் ஒருவருக்கொருவர் காவியங்கள், புராணக்கதைகள் மற்றும் நாட்டுப்புறக்கதைகளின் ஒரு பகுதியாக இருக்கிறோம். சினிமா மற்றும் கிரிக்கெட் மீதான எங்கள் தொடர்புகள் எங்கள் மரபணுவின் ஒரு பகுதியாகும். இது எங்கள் இருதரப்பு கூட்டாண்மையின் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாக இருக்கலாம். மக்களிடையே ஒருவருக்கொருவர் பரஸ்பர நல்லெண்ணம் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவில் காணப்படுகிறது என்பதை அண்மைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக நாங்கள் பலநடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சர்வதேச வெசாக் விழாவில் எமது பிரதமர் பங்கேற்றமையானது ஒரு முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது. இது எமது மக்களிடையே உள்ள பழங்கால கலாச்சார தொடர்பை நினைவூட்டியது. கடந்த வருடம் இந்தியாவுக்கு வெளியே முதன் முறையாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச கீதை மகோற்சவத்துக்குகிடைத்த உற்சாகமானவரவேற்பு மற்றொரு உதாரணமாகும்.
பாளி மொழிக்கு இந்தியாவில் ஒரு செம்மொழி அந்தஸ்தை வழங்குவதற்கான எங்கள் முடிவை எமது பிரதமர் அறிவித்தபோது வரவேற்ற முதல்நாடு இலங்கையாகும். எமது பெளத்த பாரம்பரியத்தை கொண்டாடவும், அதன் மதிப்புகள் மற்றும் ஞானத்தை உலகம் முழுவதும் ஊக்குவிக்கவும் முன்னணியில் இருக்கவிரும்புகிறோம் என்பதே இதன் அடிப்படை செய்தியாகவிருந்தது.
மிக அண்மையில் அமர் சித்திரக் கதைபுத்தகங்களை சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளோம். இவை ஜாதகக்கதைகளை அடிப்படையாகக்கொண்ட குழந்தைகளுக்கான ஒழுக்கக்கதைகளாகும். அவை அறநெறி பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
அண்மையில் பாளி இலக்கண புத்தகமான நாம மாலாவை இலவசமாக மறுபதிப்பு செய்வதற்கு நாங்கள் உதவி வழங்கினோம். மேலும் கலை, இசை மற்றும் நடனப் பரிமாற்ற திட்டங்களுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.
சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளுக்கு எங்கள் மக்கள்––மக்கள் தொடர்பு எவ்வளவு பொருத்தமானது என்பதே இங்கு சுவாரஷ்யமான அம்சமாகும். பெளத்தமத அம்சங்கள், இராமாயண வழித்தடம் என்பன எமது இரு நாட்டு மக்களால் சமாந்தரமாக போற்றப்படுகின்றன. இலங்கையின் ஒப்பற்ற இயற்கை அழகை ரசிப்பதற்காகமட்டும் இந்தியர்கள் இலங்கைக்கு பயணிக்கவில்லை. மாறாக அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களாலும் ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் பலருக்கு இது ஒரு புனிதயாத்திரையாகவும் கூட அமைகின்றது.
கல்வி மற்றும் சிந்தனையாளர் கூட்டாண்மைகளிலும் நாங்கள் இப்போது அதிககவனம் செலுத்தி வருகிறோம். இருதரப்பிலும் கொள்கை, செல்வாக்கு செலுத்துபவர்களின் கூட்டாண்மையில் முதலீடுசெய்ய பிற தரப்பினருடனான உரையாடல்களை முன்னெடுக்கிறோம். இருநாட்டு ஊடகத்துறைகளுக்கு இடையேயான சகோதரத்துவ தொடர்புகளை அதிகரிப்பதற்கு எங்களிடம் ஒரு ஊடக நட்புறவுசங்கம் இருக்கிறது. கருத்தியல்களை உருவாக்குபவர்களைத் தவிர, இளைஞர்களிடையேயானதொடர்புகளை ஆழப்படுத்துவதையும், கல்விப்பரிமாற்றங்களை ஊக்குவிப்பதையும் நாங்கள் அவதானிக்கிறோம்.
இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு அதிகளவான, (கிட்டத்தட்ட 800) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழான (200 இடங்கள்) உதவியை நாங்கள் சமீபத்தில் அறிவித்தோம். மேலும் இந்திய நிறுவனங்களில் இலங்கையர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் விரிவுபடுத்துகிறோம்.
எளிமையாகச் சொல்வதென்றால் கொவிட் காரணமாக பெளதீக ரீதியான இடைவெளி இருந்தபோதிலும், நம் இதயங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை உருவாக்கமுடியாது. இது எங்களை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது. நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றமை மற்றும் ஒருங்கிணைந்த மீள்தன்மை ஆகியவற்றின் வலிமையை நாங்கள் உணர்ந்துள்ளோம்.