;
Athirady Tamil News

உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, 40 பேர் காயம்- ரஷியாவுக்கு இழப்பு!!

0

ரஷியப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான மகிவ்காவில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 2 குழந்தைகள் உட்பட 41 பேர் காயமடைந்ததாகவும் ரஷியா இன்று தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் பகுதி 2014 வருடம் முதல் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக கைப்பற்றுவது ரஷியாவின் முதன்மையான ராணுவ நோக்கமாகும். ஆனால், பல வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட உக்ரைனிய எதிர்தாக்குதலின் மையமாகவும் இந்த தொழில்துறை பகுதி இப்பொழுது மாறி வருகிறது. உக்ரைன் தாக்குதல் குறித்து ரஷியாவால் நியமிக்கப்பட்ட நகர நிர்வாகத் தலைவர் விளாடிஸ்லாவ் க்ளுயுச்சரோவ் கூறுகையில், “இந்த குண்டுவீச்சில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காயங்களால் உயிரிழந்துள்ளார். சுமார் 40 வீடுகள், பல பள்ளிகள் மற்றும் இரண்டு தீயணைப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளது” என தெரிவித்தார். உக்ரைன் ராணுவம், மகிவ்காவில் ஒரு ரஷிய ‘உருவாக்கத்தை’ அழித்ததாக கூறியதுடன், வானில் இரவை ஒளிரச் செய்யும் ஒரு தாக்குதல் நிகழ்வின் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட மகிவ்காவில் ரஷிய பயங்கரவாதிகளின் மற்றொரு உருவாக்கம் அழிக்கப்பட்டது” என தெரிவித்தது. ரஷியாவால் நிறுவப்பட்ட டொனெட்ஸ்கின் தலைவர் டெனிஸ் புஷிலின் கூறும்போது, உக்ரைனியப் படைகள், மகிவ்காவில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக கூறினார்.

உக்ரைன் படைகளின் குண்டு வீச்சு தாக்குதலில் 9 சுகாதார மையங்கள் சேதமடைந்துள்ளதாக கூறியிருக்கிறது. ஒரு மருத்துவமனையின் தரையில் சிதறிக் கிடக்கும் உடைந்த கண்ணாடித்துண்டுகளின் படங்களையும், தாக்குதலின்போது தூக்கி வீசப்பட்ட புத்தகங்களையும் ரஷிய தரப்பு வெளியிட்டது. ரஷியா, கடந்த ஜனவரி மாதம், மகிவ்காவில் உள்ள ஒரு தற்காலிக ராணுவ தளத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 89 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் உக்ரைனும் அதன் கூட்டு நாடுகளும், இந்த பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.