;
Athirady Tamil News

பூக்கள் விலை உயர்வு: முழம் மல்லிகை ரூ.50- பிளாஸ்டிக் பூக்களை பெண்கள் சூடும் பரிதாபம்!!

0

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலூர், திருவள்ளூர், பெரிய பாளையம், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் பெருமளவு குறைந்துவிட்டது. வரத்து குறைவால் கடந்த ஒரு மாதமாகவே பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்துள்ளதால் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும்.

இதனால் கோவில் வழிபாட்டுக்கும் பெண்கள் தலையில் சூடவும் பூக்கள் வாங்குவார்கள். ஆனால் தேவையான அளவுக்கு பூக்கள் வராததால் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. சாமந்தி பூ கிலோ ரூ.220, ரோஜா ரூ.100 முதல் ரூ.120, மல்லிகை கிலோ ரூ.800, சேர் ரூ.250 வரை அதிகரித்துள்ளது. பெண்கள் தலையில் சூட விரும்பும் மல்லி விலை உயர்வால் ஒரு முழம் ரூ. 50-க்கு விற்கப்பட்டது. சாதாரணமாக இருபது, முப்பது ரூபாய்க்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வைக்கும் பெண்கள் விலை உயர்வை பார்த்து பூ வாங்க முடியாமல் தவித்தனர். இதற்கிடையில் பெண்களின் பூ மீதான ஆசையை நிறைவேற்ற பிளாஸ்டிக்கில் ஒரிஜினல் பூ போலவே தயாார் செய்து விற்பனைக்கு வந்துள்ளது. அந்த பூக்களையும் வாங்கி சூடுகிறார்கள்.

மல்லிகை பூக்களை தலை நிறைய சூடி மகிழ்ந்தும், அதன் வாசனையை ரசித்தும் மகிழ்ந்த பெண்கள் பிளாஸ்டிக் பூக்களை சூடி பூ வைக்கும் ஆசையை நிறைவேற்றி கொள்வது பரிதாபமானது. சாமந்தி பூக்கள் ஐதராபாத்தில் கிலோ ரூ.350-க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் பெருமளவு பூக்களை அங்கு அனுப்புகிறார்கள். மேலும் எல்லா பூக்களின் வரத்தும் குறைவாக இருப்பதால் இன்னும் பூக்கள் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரி எஸ்.பி.எல்.பாண்டியன் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.