;
Athirady Tamil News

யாழில் அதிகரிக்கும் சம்பவம்: மக்களுக்கு பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை!

0

யாழில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது யாழில் பெருமளவில் பண மோசடிகளே இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் முதல், கடந்த செப்டெம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் பண மோசடிகள் தொடர்பில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்தமை தொடர்பிலானது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடாத்தியதில் இதுவரையில் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சமூக ஊடங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை நம்பி, அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கு இலக்கங்களுக்கு பணத்தினை வைப்பிலிடுகின்றனர்.

அவ்வாறு வைப்பில் இடும் போது, காரணத்தை தெளிவாக குறிப்பிட தவறுகின்றனர்.

அதனால் மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதில் சிரமங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று காணி மோசடிகளும் தற்போது அதிகளவில் இடம்பெறுகின்றன.

வெளிநாட்டில் உள்ளவர்களை இலக்கு வைத்து, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவை ஊடாக விளம்பரங்களை செய்து காணி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

காணி பதிவாளர் திணைக்களத்தில் காணி தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள கூடிய வசதிகள் இருந்தும், பலர் போலி உறுதிகளை நம்பி பெருமளவான பணத்தினை கொடுத்து காணிகளை கொள்வனவு செய்து ஏமாறுகின்றனர்.

காணி வாங்குபவர்கள் காணி தொடர்பிலான முழுமையான தகவல்களை பெற்று காணிகளை கொள்வனவு செய்தால் பணத்தினை இழக்க தேவையில்லை.

தற்போது விவசாய காணிகளை நொத்தாரிசுகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களை தரகர்கள் பயன்படுத்தி விவசாய காணிகளை மேட்டு நில காணிகள் என உறுதிகளில் மோசடி செய்தும், காணிகளின் அளவினை கூட்டி மோசடி செய்தும் வருகின்றனர்.

அவைகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே காணிகளை கொள்வனவு செய்பவர்கள் காணி தொடர்பிலான ஆவணங்களை உரிய முறையில் பரிசீலித்து , அதன் உண்மை தன்மைகளை உறுதிப்படுத்தி காணிகளை கொள்வனவு செய்யுங்கள் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.