;
Athirady Tamil News

வெளிநாட்டில் பெரும்தொகை மோசடியில் சிக்கிய இலங்கையர்!

0

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது பணியிடத்தில் பெரும்தொகை பணத்தை மோசடி செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.

இலங்கையரான நவிஷ்ட டி சில்வா என்ற 36 வயதுடைய நபருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் பணியிடத்தில் 250,000 டொலர்களை மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பணம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைத்து அவர்களது விளையாட்டுக் கழகத்தில் விளையாடப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அவர் தனது விளையாட்டுக் கழகத்தில் இலங்கையின் திலகரத்ன டில்ஷான், லஹிரு திரிமான்ன, மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் மற்றும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் அடங்குவதாக ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம் சந்தேகநபரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து வீரர்கள் அறிந்திருக்கவில்லை என்ற மேலதிக உண்மைகள் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளன.

அத்துடன், டில்ஷானுக்குச் சொந்தமான விளையாட்டு நிறுவனம் ஒன்றின் கணக்கில் 37,250 டொலர்களும், இலங்கை வீரர் லஹிரு திரிமான்னவின் கணக்கில் 5,800 டொலர்களும், பெயர் குறிப்பிடப்படாத ஏனைய வீரர்களுக்கு 28,950 டொலர்களும் அவர் செலுத்தியுள்ளமையும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நவிஷ்ட டி சில்வாவுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.