;
Athirady Tamil News

பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் மீது தாக்குதல்: பொலிஸ் என ஏமாற்றிய பிரபல நடிகை கைது

0

தமிழக மாவட்டம், சென்னையில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை தாக்கிய நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களை தாக்கிய நடிகை
சென்னையில், போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, கெருகம்பாக்கம் அருகே சென்ற போது பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியும், மேற்கூரை மீது ஏறியும் பள்ளி மாணவர்கள் பயணித்தனர்.

இதனை பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பின்பு, பேருந்து நிறுத்தத்தில் நின்றவுடன் ஓட்டுநரை பார்த்து , இப்படியா பேருந்து ஓட்டுவீர்கள் என கேட்டது மட்டுமல்லாமல், படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்டார்.

அவர், தன்னை பொலிஸ் எனக் கூறி ஏமாற்றி பள்ளி மாணவர்களை தாக்கியதுடன், நடத்துநர் மற்றும் ஓட்டுநரை அவதூறாக பேசியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது.

நடிகை கைது
இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தான், அந்த பெண் நடிகை ரஞ்சனா நாச்சியார் என தெரிந்தது. அவர் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, மற்றும் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களைத் தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிறுவர்களைத் தாக்குவது என 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.