;
Athirady Tamil News

இலங்கையிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் கழிவறையில் சிக்கிய கறுப்பு நிற மர்ம பொதி!

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்க ஓடுபாதையில் தயாராக இருந்த விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் விமான சேவைக்கு சொந்தமான AI 272 விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி இன்றைய தினம் (10-11-2023) பிற்பகல் 01.35க்கு பயணத்தை ஆரம்பிக்க தயாராக இருந்தது.

ஓடுபாதையில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், விமானத்தின் கழிவறைக்குள், சந்தேகத்திற்கிடமான மர்மப் பொதி ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டது.

விமானத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என எழுந்த சந்தேகத்தை அடுத்து, சென்னைக்கான பயணத்தை இடைநிறுத்தி, விமானம் மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பான இடத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் விமானத்திற்குள் அழைக்கப்பட்டு சோதனைகளை முன்னெடுத்தனர்.

குறித்த பொதி தொடர்பில் நடாத்தப்பட்ட சோதனைகளின் போது, குறித்த பொதியிலிருந்து 2 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டதுடன், அவை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து இதுவரை எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

இதனையடுத்து, விமானம் முழுவதும் சோதனைக்குட்படுத்தப்பட்டதை அடுத்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சென்னை நோக்கி குறித்த விமானம் மாலை 4.43 க்கு விமானம் பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.