;
Athirady Tamil News

யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு: பொலிஸாருக்கு விளக்கமறியல்

0

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று (25.11.2023) கட்டளையிட்டுள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நீதிமன்ற நீதிவான் முன்னிலை
25 வயதுடைய இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (24.11.2023) உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரவதைக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோகதர் உள்பட நால்வரும் கடந்த திங்கட்கிழமை முதல் பொலிஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு விசாரணைகளை முன்னெடுத்தது.

அந்தக் குழுவினரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று நண்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

நால்வரையும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அதனை அடுத்து அவர்கள் அநுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.