;
Athirady Tamil News

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 வீதத்தால் அதிகரிப்பு : உலக சுகாதார ஸ்தாபனம்

0

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் அறியத்தருகையில்,

“850,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை
அத்துடன், புதிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 வீதத்தால் குறைந்துள்ளதோடு, 3,000க்கும் மேற்பட்ட புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 17ஆம் திகதி நிலவரத்தின்படி, கொவிட் வைரஸ் பரவல் ஆரம்பித்ததிலிருந்து மொத்தமாக 772 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 7 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

மேலும், வைத்தியசாலைகளில் 118,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 1,600க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமிக்ரோன்
கடந்த 18ஆம் திகதி வரை கொவிட் வைரஸ் திரிபான BA.2.86 ஒமிக்ரோனின் புதிய துணை வகையான JN.1 வைரஸின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், JN.1 வைரஸின் ஆபத்து தற்போது குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்குவதால், JN.1 பல நாடுகளில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரிக்கக்கூடும்.

தொடர்ந்து, JN.1 வைரஸ் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, அது இடர் மதிப்பீட்டை தேவைக்கேற்ப புதுப்பிக்கும்.

இந்நிலையில், கொவிட் தடுப்பூசிகள் JN.1 மற்றும் SARS-CoV-2இன் பிற மாறுபாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கும்.

கொவிட்-19 வைரஸால் பரவும் சுவாச நோய் மட்டுமல்லாது இன்ஃப்ளூயன்ஸா, ஆர்எஸ்வி மற்றும் குழந்தைகளிடையே நிமோனியா பரவல் ஆகியனவும் அதிகரித்து வருகின்றன.

இதனால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்தல், கொரோனா பரிசோதனை செய்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றல் கட்டாயமானது.” என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.