;
Athirady Tamil News

இளையராஜா மகள் மற்றும் பாடகி பவதாரிணி மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

0

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாடகி பவதாரிணி உயிரிழப்பு
இந்திய திரையுலகின் இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி(47) வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இலங்கைக்கு புற்று நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று இருந்த பவதாரிணி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமையான மாலை 5.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி பவதாரிணி உயிரிழந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அவரது உடல் சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்நிலையில் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் X தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல பின்னணி பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இசை மேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தன்னுடைய தேனினும் இனிய குரல்வளத்தால் ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்தார்.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகள் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு.

தனது பாச மகளை இழந்து துடிக்கும் இளையராஜா அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.