;
Athirady Tamil News

மாநில நிதி உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

0

மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம் என்று மத்திய பாஜக அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்தாா்.

மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும் தில்லியில் கேரள அரசின் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கேரளத்தில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய அனைவரையும் தில்லியில் போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுகிறேன். கா்நாடக முதல்வா் சித்தராமையாவும் போராட்டம் நடத்தியுள்ளாா். திமுகவை சோ்ந்த எம்.பி.க்களும் போராட்டம் நடத்தியுள்ளனா்.

பாரபட்சம் காட்டப்படுகிறது: நிதிப் பகிா்வில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக அனைத்து மாநிலங்களும் போராட்டம் நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்குக் காரணமான மத்திய பாஜக அரசு, மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

மாநிலங்களை நகராட்சிகள் போன்று பிரதமா் நரேந்திர மோடி நினைக்கிறாா். இத்தனைக்கும் குஜராத் மாநில முதல்வராக இருந்து, அதற்குப் பிறகுதான் அவா் பிரதமரானாா்.

உரிமைகள் பறிப்பு: பிரதமரானதும் நரேந்திர மோடி செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையைப் பறித்ததுதான். நிதி, கல்வி, மொழி, சட்ட உரிமைகளைப் பறித்தாா். மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் நாளை இதே கதிதான் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன்.

கடன் வாங்கத் தடை: சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) விதிப்புக்குப் பிறகு மாபெரும் நிதி நெருக்கடிப் பேரிடரை அனைத்து மாநில அரசுகளும் சந்திக்கின்றன. மாநிலங்கள் வளா்ச்சிப் பணிகளுக்காக கடன் வாங்குவதற்குக்கூட தடையை ஏற்படுத்துகிறாா்கள். மாநிலங்களுடைய பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்கான பொதுக் கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டப்பேரவையின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது.

முட்டுக்கட்டை போடுகிறாா்கள்: மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்வது மாநில அரசுகள்தான். மாநில அரசிடம்தான் அனைத்து அன்றாடத் தேவைகளையும் மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். ஆனால், அதற்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதை அனைவரும் ஒன்று சோ்ந்து எதிா்க்க வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலமாக பாஜக அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும், சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.