;
Athirady Tamil News

இந்திய தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு: ரஷ்யாவின் குற்றசாட்டுக்கு பதிலடி

0

இந்தியாவில் (India) நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா (America) தலையிடுவதாக ரஷ்யா (Russia) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்த பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், இதனை நிராகரித்த மத்திய அரசானது இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆணைக்குழு தலையிட முயற்சி செய்வதாக பதில் அளித்து இருந்தது.

ரஷ்ய வெளியுறவு
ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்திரமற்ற இந்தியாவை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என ரஷ்யா குற்றம் சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா (Maria Zakharova) தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகின்ற நிலையில், இந்தியாவில் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்தாமல் தேர்தலை சிக்கலாக்குவதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தலையீடு
இந்திய உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ரஷ்யாவின் ஃஅறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளதுடன் இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் (Matthew Miller) கருத்து தெரிவிக்கையில், “நிச்சயமாக இல்லை. நாங்கள் இந்திய மக்களவை தேர்தலில் தலையிடவில்லை. அத்தோடு அது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. மேலும், இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த நாட்டு தேர்தல் விவகாரத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை” என தெரிவித்துள்ளார்.

கொலை முயற்சி
அத்தோடு, காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சியில் இந்தியர்களுக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டு தவறானது என்றும் இதற்கான எந்த நம்பத்தகுந்த ஆதாரத்தையும் இதுவரை அமெரிக்கா வழங்கவில்லையென்றும் ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கும் மேத்யூ மில்லர் பதிலளித்துள்ளார்.

மேலும், நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகள் எனவும் அது தொடர்பான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, யார் வேண்டுமானாலும் அதனை படிக்க முடியுமெனவும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து தனக்கு கருத்து வெளியிட முடியாதெனவும் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.