;
Athirady Tamil News

இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேவை; போட்டி போட்ட மணமகன்கள் – அதிரவைத்த பின்னணி!

0

இறந்த பெண்ணை திருமணம் செய்ய மாப்பிள்ளை தேவை என்ற விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த பெண் திருமணம்
கர்நாடகா, புத்தூரை சேர்ந்த பெண் குழந்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகியுள்ளார். அதன்பின் அவர் குடும்பம் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளது.

தொடர்ந்து அந்த பிரச்சனைகளில் இருந்து மீள பலரிடம் ஆலோசனைகள் கேட்டுள்ளனர். அதில் ஒருவர், ‛‛உங்கள் வீட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை இறந்தது. அந்த பெண் குழந்தைக்கு இப்போது 30 வயது ஆகிறது.

அந்த குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தால் உங்களின் பிரச்சனைகள் தீரும். திருமணம் என்பது அதே 30 வயது கொண்ட இறந்த ஆணுடன் செய்து வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை கொடுத்தனர்.

அதிர்ச்சி பின்னணி
அதில், ‛‛30 ஆண்டுக்கு முன்பு அந்த பெண் இறந்துவிட்டார். அதேஜாதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நபர் மணமகனாக வேண்டும். இருவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்” என செல்போன் எண்ணைக் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த விளம்பரத்தை பார்த்து 50 பேர் வரை செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். இதில் 20 செல்போன் எண்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து ஒருவர் மணமகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதன்பின், மணப்பெண்ணுக்கான பட்டுப்புடவை, அலங்கார பொருட்கள் மற்றும் மணமகனுக்கான பட்டுவேட்டி, சட்டை உள்ளிட்டவைகளை படைத்து, அதன் மீது மாங்கல்யத்தையும் வைத்து இறந்தவர்களை நினைவுகூர்த்து வழிபட்டுள்ளனர்.

இதில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 50 பேர் மட்டும் கலந்துக்கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படமும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.