;
Athirady Tamil News

குரலற்றவர்களின் குரல் அமைப்பு

0

சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆணந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில்,
கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான செல்வநாயகம் ஆணந்த வர்மனை நேற்றையதினம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் சிறை வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதாவது; இல.117, தோணிக்கல் -வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த ஆணந்தவர்மன், கடந்த 26.03.2024 அன்று பயங்கரவாத விசாரனைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தனது முகநூல் பக்கத்தினூடாக மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வகையில் பதிவுகளை இட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கொழும்பு-நீதவான் நீதிமன்ற கட்டளையினை பெற்றுக்கொண்டு, சமூகச்செயட்பாட்டாளரான தன்னை, மறு அழைப்புத் திகதி எதுவுமின்றி கொழும்பு-விளக்கமறியல் சிறையில் காலவரையரையற்ற விளக்கமறியலில் தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தன்னை, “உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
அவ்வாறில்லையேல், தன்மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கமைய மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்து மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பது நாட்களாக சிறைக்குள் இருந்தவாறு உணவுத் தவிர்ப்புப் பேராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.
யுத்தத்தின்போது கடுமையான விழுப்புன்களுக்கு ஆளாக்கப்பட்ட ஆணந்தவர்மன், ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்றிருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
அதனடிப்படையில், நீண்டகாலமாக உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது ஒன்பது நாட்களை கடந்தும் உறுதியோடு மேற்கொண்டு வருகின்ற உணவுத் தவிர்ப்பு காரணமாக உடல் உருக்குலைந்து மிகவும் சோர்வுற்ற நிலையில் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, இதன்மூலம் மக்களின் பக்கம் நின்று ஜனநாயக வழியில் பொதுவெளியில் செயற்பட்டு வருகின்ற சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அரச இயந்திரங்களைக்கொண்டு மறைகரமாக அடக்குமுறைகளை மேற்கொண்டு, சட்டத்தின் பெயரில் குரல்வளைகளை நசுக்குகின்ற செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிகிறது.
உதட்டளவில் மாத்திரமே நல்லிணக்கம் பேசுகின்ற அரசானது; மிகநீண்ட காலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வருடக்கணக்காக தெருப்போராட்டம் நடாத்திவருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, பாதுகாப்பு-தொல்லியல்-வனவளம் என்ற பெயர்களில் கையகப்படுத்தப்பட்ட இன்றும் கையகப்படுத்திக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு, போரை காரணம்காட்டி அநியாயமாக உயிர்பறிக்கப்பட்ட தமது உறவுகளின் ஆத்மாக்களை நினைவேந்தி ஆறுதலுறுகின்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றமை போன்ற வெகுமக்களின் பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அச்சுறுத்தல்களை தொடர்வதன் மூலம் அரசு இந்த நாட்டை எத்திசை நோக்கி கொண்டுசெல்ல முனைகிறது?
எனவே, மக்கள் நலனை மகுட வாசகமாக கொண்டியங்கும் அரசியல் மற்றும் குடிமக்கள் சார் அமைப்புகள், ‘வீதி வரையே பிரச்சினை, எம் வீட்டுக்குள் வரவில்லை’ என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிராது ஜனநாயக த்தின் குரல்களுக்கு ஆபத்து நேருகின்றபோது யாராக இருந்தாலும் அதனை தட்டிக் கேட்கின்ற மனநிலையுடன் கருமமாற்றுவதன் ஊடாகவே எதிர்பார்க்கின்ற மக்ளாட்சியின் அடைவுமட்டத்தை அன்மிக்க முடியுமென்பதை தயவுடன் வலியுறுத்த கடமைப்படுகிறோம். – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.