;
Athirady Tamil News

அஸ்ஸாம் நிலச்சரிவில் சிக்கிய சுரங்கத் தொழிலாளர்கள்: மீட்புப் பணி தீவிரம்

0

அஸ்ஸாம் – அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள எலி வளை சுரங்கத்தினுள் ஏற்பட்ட விபத்தில் 3 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு பர்கோலை, நமடங் இடையே பட்கய் மலைப்பகுதியில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து டின்சுகியா மாவட்ட ஆட்சியர் சுவப்னில் பால் கூறுகையில்,” 3 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காவல் துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட தகவலின் படி, மேகாலயாவை சேர்ந்த இருவர், நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது. விபத்து நடந்தபோது, 4 சுரங்கத் தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்தனர். 3 பேர் ஒரு குறுகிய சுரங்கப்பாதையில் இருந்து எலி வளை சுரங்க முறை மூலம் நிலக்கரி எடுக்கும் போது, மற்றொருவர் பிரித்தெடுத்த நிலக்கரியை கொண்டு சென்று கொண்டிருந்தார். சுரங்கப்பாதையில் இருந்த மூவரும் நிலச்சரிவில் சிக்கினர்” என்றார்.

இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், சனிக்கிழமை இரவு நடந்த நிலச்சரிவில் 3 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக கூறினர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தின் எல்லையில் உள்ள டின்சுகியாவின் லெடோ-மார்கெரிட்டா பகுதி நிலக்கரி நிறைந்த பகுதியாகும். சட்டவிரோதமாக நிலக்கரி எடுப்பதால் அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாகலாந்து மாநிலம் வோகா மாவட்டத்தில் நிகழாண்டு ஜனவரியில், சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் 2014-ல் எலி வளை சுரங்கத்திற்கு தடை விதித்தது. இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் இந்த ஆபத்தான முறையில் நிலக்கரி எடுக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.