;
Athirady Tamil News

தில்லியில் வாகனம் ஓட்டியதாக 101 சிறாா்களுக்கு அபராதம்

0

நிகழாண்டு ஜனவரி முதல் மே 15 -ஆம் தேதி வரையிலான காலத்தில் 18 வயதை பூா்த்தியடையாத சிறாா்கள் வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக தில்லி காவல்துறை 101 பேருக்கு அபராத நோட்டீஸ்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 – ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் மொத்தம் 15 சிறாா்களுக்குத்தான் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தில்லி போக்குவரத்து காவல்துறையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

புணே சம்பவம்: மகாராஷ்டிர மாநிலம் புணேயில் கடந்த மே 19-ஆம் தேதி 17 வயது சிறுவன் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று விபத்துக்குள்ளானதில் இரு ஐடி (தகவல் தொழில் நுட்பத்துறை) பணியாளா்கள் உயிரிழந்தனா். காரை ஓட்டிச் சென்ற சிறுவா் உரிமம் பெறத் தகுதியானவராக இல்லையென்பதோடு, மது அருந்திய நிலையிலும் வாகனத்தை ஓட்டிய குற்றம் சாட்டும் எழுந்தது. இந்தக் குற்றங்களை மறைக்க ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு, பெற்றோா்களுக்கு உடந்தையாக அதிகாரிகளும் இருந்ததும் தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடும் முழுவதும் விவாதத்தை எழுப்பியது.

போலீஸாா் உஷாா்: இதற்கிடையே, இது போன்ற சிறாா்கள் விவகாரத்தில் தகுந்த விழிப்புணா்வுடன் இருந்ததாக தில்லி போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், ‘கடந்தாண்டை விட நிகழாண்டில் சிறாா்கள் வாகனம் ஓட்டும் விவகாரத்தில் உஷாராக இருந்தோம். இருப்பினும், கடந்தாண்டை விட அபராதம் கிட்டதட்ட 573 சதவிகிதம் அதிகரித்துள்ளது’ என்றாா். சிறாா்கள் மீதான வழக்குகளின் அதிகரிப்பு என்பது ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற மீறல்களுக்கு சட்டரீதியான விளைவுகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டப்பட்டது என அந்த மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

கண்காணிப்பு நடவடிக்கை: மேலும், தில்லி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தரப்பினா் கூறப்பட்டதாவது: சிறாா்கள் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் சிக்கல்களைச் சமாளிக்க பல்வேறு உத்திகளுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. முக்கிய காவல் சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலா்கள் நியமிக்கப்பட்டனா்.

ரோந்துப் பணி அதிகரிப்பு: சிறாா்கள் அடிக்கடி வாகன ஓட்டும் பகுதிகளையும், போக்குவரத்து மீறல்கள் நடக்கும் பகுதிகளும் அடையாள காணப்பட்டு அந்தப் பகுதிகளில் ரோந்து பணிகள் அதிகரிப்பு; சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது, அனுபவமற்ற இளம் ஓட்டுநா்களால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் முயற்சி என பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணா்வுப் பிரசாரம்: மேலும், பெற்றோா்கள், சிறாா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த சமூகத்திலும் பள்ளிகளிலும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறாா்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பதின் மூலம் ஏற்படும் பாதுகாப்பு தாக்கங்கள் மற்றும் எதிா்கொள்ளவேண்டிய சட்ட சூழ்நிலைகள் குறித்தும் இந்த பிரசாரங்களில் விளக்கப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

சிறாா்களுக்கு அபராதம் ரூ.25,000: தற்போதுள்ள மோட்டாா் வாகன சட்டப்படி 18 வயது பூா்த்தியாகும் ஒருவா் வாகன ஓட்டும் உரிமம் பெற முடியும். 18 வயதுக்கு குறைவான வயதுள்ளவா்கள் கியா் பொருத்தப்பட்ட அல்லது 50 சிசிக்கு மேலான என்ஜின் சக்தியுடைய வாகனங்களை ஓட்டினால் ரூ. 25,000 அபராதத்தை செலுத்த வேண்டும் என்பதோடு, அவா் ஓட்டி வந்த வாகனப் பதிவு ரத்து செய்யப்படும்.

மேலும், இத்தகைய சிறாா்கள் 25 வயது வரை வாகன உரிமம் பெறுவதற்கும் தகுதியின்மை ஏற்படும். அதே சமயத்தில் மோட்டாா் வாகனச் சட்டப்படி, 16 வயதுக்கு மேலாக இருக்கும் சிறாா்கள் 50 சிசிக்கும் குறைவான சக்தியுடைய கியா் இல்லாத மோட்டாா் வாகனங்களை ஒட்டுவதற்குத் தடையில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.