;
Athirady Tamil News

புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு

0

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc – Andre Franche ) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று (05.06.2024) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி ), மாகாண காணி ஆணையாளர் மற்றும் யாழ் பிராந்திய பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம், கல்வி, விவசாயம், தொழிற்துறை ஊக்குவிப்பு, காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றும் பணி, மீள்குடியேற்றம், இயற்கை வளங்கள், முதலீட்டு திட்டங்கள், முன்னுரிமை படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள், பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் அதிகம் தேவைப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார். அவர்களுக்கான உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும், நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் கூறினார் . அத்துடன் புலம்பெயர் உறவுகள், வடக்கிலுள்ள தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புலம்பெயர் உறவுகளால் வடக்கு மாகாண மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ முடியும் என குறிப்பிட்ட ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச், முன்னுரிமை வழங்க வேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், சிறந்த பொறிமுறையின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்வது சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார். வடக்கில் காணப்படும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி பாரிய திட்டங்களை மேற்கொள்ளளும் போது பிரதேச மக்களின் நலன்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். மேலும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் திட்டங்களில் பெற்றுக்கொள்ளும் இலாபத்தில் அந்தந்த கிராம அபிவிருத்திக்கென ஒருதொகை நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

காணி உரித்துகள் வழங்கப்படுகின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். அத்துடன் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எவ்வாறான ஒத்துழைப்புகள் தேவை எனவும் அவர் இதன்போது வினவினார்.

மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பது அவசியம் எனவும் ஆளுநர் கூறினார். அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் செயற்படும் சர்வதேச அமைப்புகள் வடக்கில் இதுவரையில் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், அனைத்து துறைகளுக்குமான அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.