;
Athirady Tamil News

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

0

திருக்கோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் பகுதியில் வேளாண்மை காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்கியதில் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பூவரசந்தீவை சேர்ந்த வெல்லாங்குளத்தில் வசித்து வந்த முஹைதீன் பிச்சை முகம்மது அனிபா (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை வேளாண்மை காவலில் ஈடுபட்ட ஏனைய மூன்று விவசாயிகளும் யானையின் பிடியிலிருந்து தப்பித்துள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்தவர் 5 பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது வீட்டிலிருந்து யானையினை துரத்திச் சென்றபோது இரவு 9.00 மணியளவில் யானைத் தாக்குதலுக்கு இலக்கானதாகக் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பகுதியில் சிறு போக நெற்பயிர்ச் செய்கை இடம் பெற்று வருவதனால் அங்கு வருகை தரும் யானைகள் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் நுழைந்து அச்சுறுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரைத் தாக்கிய யானை அங்குள்ள வீடு ஒன்றினையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது. வீட்டினை யானை தாக்க வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட அவர் பக்கத்து வீட்டில் தஞ்சமடைந்ததாக குறிப்பிடுகின்றனர்.

குறித்த ஓலை வீட்டினை யானை முற்றாக தாக்கிய பின்னர் அங்கு அமைக்கப்பட்டு வந்த கட்டடம் ஒன்றினையும் உடைத்து அதனுள் வைக்கப்பட்டிருந்த நெல்லையும் சாப்பிடுச் சென்றுள்ளது. அப் பகுதியில் ஒரு வாரத்திற்குள் 3 பேர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

அத்துடன் கிராமப்புற மக்களில் வாழ்வாதார பயிர்களான தென்னை வாழை கரும்பு முதலான பயிர்களையும் துவசம் செய்து வருகின்றனர்.

இக்காட்டு யானைகளை தடை செய்வதற்கு மின்சார வேலிகள் இடப்பட்டு போதிலும் அவற்றை பொருட்படுத்தாது யானைகள் கிராமத்துக்குள் புகுகின்றன. எனவே இக்காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.