;
Athirady Tamil News

யாழில்.போதை மாத்திரைகளுடன் கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் காவலில் ; ஏனைய மூவரும் விளக்கமறியலில்

0

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைதான நால்வரில் ஒருவரை நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு இளைஞர்களை கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து சுமார் ஆயிரம் போதை மாத்திரைகளையும் வாள் ஒன்றினையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை நால்வரையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் பிரதான சந்தேக நபரான இளைஞன் ஒருவரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்று , பிரதான சந்தேகநபரை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைக்க அனுமதி வழங்கியதுடன் , ஏனைய மூவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டது.

பிரதான சந்தேக நபரின் தொலைபேசி தரவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கவும், மேலும் சில சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காவே பொலிஸ் தடுப்பு காவலில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.