;
Athirady Tamil News

நீட் கவுன்சிலிங் நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம்

0

புது தில்லி: மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்குரைஞர் சாய் தீபக் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அதிகம் பேர் முழு மதிப்பெண் எடுத்திருப்பது, ஒரே தேர்வு மையத்தில் ஒன்றாக தேர்வெழுதிய மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்தது, தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக என ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நீட் தோ்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதால் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. எனவே, நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாா் சா்ச்சையானது. அதனைத் தொடா்ந்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பிடித்தது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையைக் கிளப்பின.

நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள உயா்நிலைக்குழுவை என்டிஏ அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.