;
Athirady Tamil News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: பாரிய மோசடியில் சிக்கியுள்ள 119 பேர்

0

நாடளாவிய ரீதியில் 119 பேரை ஏமாற்றி 41 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி செய்ததாகக் கூறப்படும் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவொன்று தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இணையத்தில் முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட போலி வேலை முகவர்கள் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, நியூசிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து இவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

45 முறைப்பாடுகள்
இந்த போலி வேலை முகவர்கள் முறைப்பாட்டாளர்களை ஏமாற்றி பணம் பறித்து, தற்காலிக விசா தயாரித்து, இந்தியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களை வழிமறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த வருடம் இவ்வாறான 95 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அத்துடன், இவ்வருடம் இதுவரையில் நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இவ்வாறான 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

போலி வேலைவாய்ப்பு
மேலும், திஸ்ஸமஹாராமய, கல்னாவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் உள்ள போலி வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவிற்கு எதிராக பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான மோசடி வேலை முகவர்களாகக் காட்டிக் கொண்ட 83 பேரும், இந்த ஆண்டு மேலும் 24 பேரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.