;
Athirady Tamil News

வெளிநாட்டவர் 7 பேருக்கு ஆயுள் தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி

0

பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

123 கிலோ ஹெரோயின்
இது தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (14) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இலங்கைக் கடற்பரப்பிற்குள் 123 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், குற்றவாளிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு, தண்டனையை அனுபவிக்கும் வகையில் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.