;
Athirady Tamil News

நாடாளுமன்றம் முன்பாக பதற்றம்: போராட்டகாரர்கள் மீது நீர்தாரை பிரயோகம்

0

கொழும்பு (Colombo)- பத்தரமுல்ல நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்ற ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மீது காவல்துறையினர் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது, இன்று (17) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘தொழில் உரிமையாகும்’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நீர்தாரை பிரயோகம்
அதேவேளை, போராட்டத்தினை கட்டுபடுத்துவதற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த போராட்டத்தில் அநேகமான இளைஞர்கள் ஈடுபட்டு தங்களின் கோரிக்கையை தீர்த்து வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றார்கள். இதேவேளை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை – லோட்டஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில், குறித்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனினும், பல்கலைக்கழக கல்வி சாரா தொழில்சார் சங்கங்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.