;
Athirady Tamil News

இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் : விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

0

வெளிநாட்டு வேலைகள் தொடர்பாக இலங்கை (Sri Lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால் விசேட விசாரணை பணியகம் தனது விசாரணை நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பத்தரமுல்லையில் (Battaramulla) உள்ள பணியகத்தின் பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக ஹாலியெல்ல (Hali ela), இரத்தினபுரி (Ratnapura), தங்காலை (Tangalle), குருநாகல் (Kurunegala) மற்றும் கண்டி (Kandy) ஆகிய மாகாண அலுவலகங்களிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 2024 ஜனவரி முதல் 2024 ஜூன் 18 வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக 2155 முறைப்பாடுகள் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ளதுடன் அவற்றில் 1051 முறைப்பாடுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவன உரிமையாளர்கள்
அத்தோடு, 11 சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை சோதனையிட விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் 65 மோசடியாளர்களும் இந்த காலப்பகுதியில் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர்கள் எட்டு பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ.65,103,626.00 தொகையை பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் மீட்டெடுக்க முடிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு நிறுவனம்
வெளிநாட்டு வேலையைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்திற்குச் சென்று வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு நிறுவனங்களுக்கு செல்லுபடியாகும் உரிமம் உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் தொடர்புடைய வேலையைப் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, செல்லுபடியாகும் வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பில் 1989 ஹாட்லைனைப் பார்வையிடுவதன் மூலம் அல்லது அழைப்பதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு பணியகம் வெளிநாட்டு வேலை தேடுபவர்களை வலியுறுத்தியுள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பணியகத்தின் விசேட புலனாய்வு திணைக்களத்திற்கு 011-2864241 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.